Monday, 24 September 2018

கற்றதும் பெற்றதும்-36

கற்றதும் பெற்றதும்-36
*மணி

ஓடுகிற கோழையை பார்த்தால் விரட்டுகிற கோழை வெறியனாக மாறுவான்

-ஜெயகாந்தன்

#ஜெயகாந்தன் குறுநாவல்கள்

"நீ சாக யார் உதவியும் வேண்டாம் என்றால் நீ வாழவும் யார் உதவியும் வேண்டாம்" இது போன்ற முத்திரை வரிகளுக்காக இவரை தொடர்ந்து படித்தேன்.

முதன்முதலில் எட்டாம் வகுப்பு சிறுகதை கொத்தில் இவரின் கதை அறிமுகமானது.அதிலிருந்து ஜெயகாந்தன் என்று எழுதியிருக்கும் புத்தகங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன்.ஜே.கே எனும் கதைசொல்லி வாழ்க்கை தத்துவங்களை கூறி இதயத்தை வருடுவது அலாதியான சுகம்.எழுதுவதை நிறுத்தி நாற்பது வருடம் கழித்தும் இன்றும் என்றும் அவர் எழுத்து பேசும்.

#கதை என்பது புள்ளி என்றால் குறுநாவல் என்பது கோடு,நாவல் என்றால் கோலம் என்பார் ஜே.கே.

அவ்வகையில் ஜெயகாந்தனின் குறுநாவல்கள் சில..

1)எனக்காக அழு

கனகசபையும் வைரவனும் நண்பர்கள். இருவரும் மது அருந்துவார்கள். ஒரே இடத்தில் பணி புரிந்தார்கள்.இருவரும் நிறுவன முதலாளியின் நான்காயிரம் ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு பாண்டிச்சேரி சென்றனர். அங்கு குடித்தனர். "வைரவன் குடித்தால் எப்போதும் அழுவான்" ஏனென்றால் "அது மற்றவருக்காக".

திருடப்பட்ட பணத்தை கண்டுபிடிக்க போலீஸ் அவர்களை நெருங்கியபோது வைரவன் பழியை ஏற்றுக் கொள்வான். கனகசபைக்கு இது ஒரு குற்ற உணர்ச்சியை தரும். இந்த கதையை முடிக்கும் போது, "மற்றவர்களுக்காக அழும் ஒருவன் மனதை காட்டியிருப்பார்.

நீ எனக்காக அழுகிறாய்! என்ன செய்யலாம்? பொய்யை கட்டிக்கொண்டு அழுதே பழகிப்போன உலகம். அழு எனக்காக அழு எனக்காகவே அழு! என்பதோடு கனகசபை திரும்பிப் போவான் என்று முடியும். மற்றவர்களுக்காக வருத்தப்படுவார்களை என்று நாம் ஏளனமாக பார்ப்பது அன்றே அவர்கள் மூலமாக சித்தரித்திருப்பார்

2)இலக்கணம் மீறிய கவிதை

மேன்சன் வாழ்க்கை வாழும் ராமநாதனின் ரூமிற்கு விபச்சாரி வந்து செல்வாள்.கிருஷ்ணய்யரிடம் அவள் மீது இரக்கப்பட்டு திருமண செய்ய கேட்பான்.
விவாதம் நடக்கும்.இறுதியில் மணம் முடித்தானா?என்பது கதை.
இறுதியில் இவ்வாறு முடித்திருப்பார்

சமூகத்தைப் பார்த்து..
" அவர்களுக்கு என்ன அறிவாளிகள். அறிவுபூர்வமாக எதையும் கடைசிவரை முடிவுற்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். இலக்கணத்தை வகுப்பார்கள். மீறுவார்கள்.மீறுவது சரியா? என்று போராடுவார்கள். மீறியதற்கு காரணங்களை ஆராய்வார்கள். கவிதை இதற்காக காத்துக் கொண்டிருப்பதில்லை.

கவிதை! சுகம்! எல்லாமே அப்படித்தான்.

3)பிரளயம் கதையில் குப்பத்தில் வாழும் தீனன் மனைவி பாப்பாத்தி.
செல்வத்தின் வீட்டில் வேலைக்காரியாய் இருக்கிறாள். செல்வம் அவள் மீது ஒருதலையாய் விரும்புகிறான்.இடையில் குப்பத்தில் மழை வெள்ளம் வந்து என்ன ஆனது என்பதே கதை. ஜே.கேயின் பெரிய பலமே தத்துவார்த்த வரிகள் தான். ஒரு இடத்தில்

" கல்யாணங்கறது பிடிக்காத இரண்டு பேரை கட்டி போடறதுதான். பிடிக்கறவங்களையே கட்டிப் போட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா புடிக்காதவங்க ஆயிடுவாங்க".

ஒரு பிரளயமே வந்து உலகை அழிச்சாலும் மீண்டும் புதிதாய் பிறக்கும். இந்த  மழை வந்தா மனுதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டும் என்பார்.

நமக்கெல்லாம் ஊடு கெடச்சா சோறு கிடைக்காது, ஊடு இல்லைனாதான் பொட்டலம் சோறு கிடைக்கும். இந்த அனுதாபம் இன்னாத்துக்கு? நம்மள பிச்சைக்காரர்களா ஆக்கிறதுக்கா அனுதாபம்? இனிமே மானத்தோட பட்டினி  கெடங்கட என்று கத்துவான் கதாநாயகன்.

4)கோகிலா என்ன செய்துவிட்டாள்

அனந்தராமன் ஒரு நியூஸ் ரிப்போர்டர். அவன் மனைவி கோகிலா. இருவருக்கும் ஒரு கட்டத்தில் சண்டை வரும். அவனை டெல்லிக்கு மாற்றி இருப்பார்கள். மனைவியை பார்க்க வீட்டுக்கு ஒருவன் வருவான். அதைப் பற்றி கேள்வி கேட்டதால் மனைவியுடன் சண்டை இட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு மூன்று நாள் அவள் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வருவாள்.

இறுதியில் ஒரு வழியாக அவளைப் புரிந்து கொண்டு சேர்ந்து விடுவார்கள். டெல்லி செல்லும் போது அந்த லெட்டர் பிரிக்கப்படாமல் இருக்கும். இது கிட்டத்தட்ட மௌன ராகம் பட கிளைமாக்ஸ் காட்சி போல குறுநாவல் இருக்கும். அந்த லெட்டரில் என்ன இருக்கும்? என்று வாசகர்களின் முடிவுக்கே விட்டு இருப்பார் ஜெயகாந்தன்

#மனம் கவர்ந்த வரிகள்

*விமர்சனம் என்பது அன்பால் பாராட்டுவதும்,
வெறுப்பால் தூற்றுவதும்தான்.இரண்டுமற்ற நடுநிலைமை என்பது எதிலும் சாத்தியமில்லை

*இலட்சியங்கள் பேசும்போது எவ்வளவு
சுலபமாக இருக்கின்றன

*வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்

*நீ உயிரோடு இருப்பவரை குருவாக ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாதே!பின்னர் அவர் செய்யும் தவறுகளுக்கு நீ பதில் சொல்ல வேண்டும்

*எவ்வளவுதான் நெருக்கமுற்று உறவு பெற்று ஒருவரைப் போல் ஒருவர் மாற முயன்றாலும் உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தனி உலகம்தான்

*ஏழைகளுக்கு உள்ள ஒரே மூலதனம் கடன்! -

*நம்ம பக்தியை சாமி கூட சோதிச்சுதான் தெரிஞ்சிக்கனுமா?

*காதல் மலர்வதற்கும் மறைவதற்கும்
அற்பமான காரணங்களே போதும்

*கெட்டுப் போறதுன்னாலும் சில பேர் ஓசியில் தான் கெட்டுப் போவார்கள்

*உண்மைகளை சோதிக்கிறவன் அவற்றைப் பொய்யாக்கும் வரை திருப்தியடையமாட்டான்

இது போன்ற பல வரிகள் இன்னும் பசுமரத்தாணி போல் இருக்கிறது.

என் வாசிப்புக்கு மட்டுமல்ல பலரின் வாசிப்பை செம்மைப்படுத்தியதில் ஜெயகாந்தனின் பங்கு முக்கியமானது
இன்னும் வாசிக்காதவர்களுக்கு புதிய அனுபவம் கிடைக்கலாம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment