கற்றதும் பெற்றதும்-46
*மணி
ஒரு வளர்ப்பு நாயை மெல்ல மெல்ல பழக்குவது போல,
தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதற்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்
-பாரதி தம்பி
#தவிக்குதே...தவிக்குதே..
-பாரதி தம்பி
கவிதையும்,கதைகளையும் வாசிப்பதோடு நின்றுவிடக்கூடாது. கட்டுரை தொகுப்புகளையும் வாசிக்க வேண்டும்.வாழும் சூழல் குறித்த அறிவும்,நம்மை சுற்றி நிகழும் சுரண்டல்களை எண்ணிப்பார்க்க வைப்பதும், ஒருவிஷயம் குறித்த ஞானத்தை நமக்களித்து சிந்திக்க வைப்பதும் நல்ல கட்டுரைகள்.ஒரு வீட்டிற்கு குடிபுகும் முன் கேட்கும் ஒரு கேள்வி தண்ணீர் பிரச்சனை இருக்கிறதா,இல்லையா என்பதுவே..
தண்ணீர் பிரச்சனை சாதாரணமானதல்ல.
அவ்வகையில் ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோது பல்வேறு அதிர்வலையை உருவாக்கியது பாரதிதம்பி எழுதிய இப்புத்தகம். பல்வேறு தகவல்களுடன் திகழும் இப்புத்தகம் எப்போது மறுவாசிப்பு செய்தாலும் புதிதாக தெரிபவை. அவ்வகையில் இத்தொகுப்பிலிருந்து சில..
#இந்நூலினை தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து போராடிய கேரளாவின் பிளாச்சிமடா மக்களுக்கு சமர்ப்பித்திருப்பார்..யார் அவர்கள்
"அப்பகுதியில் குளிர்பான
நிறுவனம் 2ஆண்டில் ஊரையே உறிஞ்சியது.ஒரு குடம் நீருக்கு 5கி.மீ நடக்க வேண்டிய சூழல். கொதித்தெழுந்த மக்கள் போராடி விரட்டி அடித்தனர்.
#கல்வி,மருத்துவம் போன்று தண்ணீரையும் தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை நடக்கிறது என்பதை விரிவாய் பதிவு செய்திருப்பார்..
#தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்கும் நிறுவனம் அரசுக்கு கொடுப்பது லிட்டருக்கு ஒண்ணே கால் பைசா.நம்மிடம் விற்பது ரூ15. ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்க 7லி கழிவுநீர் வெளியேறி,அது 8லிட்டர் தண்ணீரை நஞ்சாக்கும்.
#தண்ணீர் தனியார்மயம்
குடிநீர் வரி குடிநீருக்கானதல்ல. விநியோகம் செய்யும் நிர்வாகச் செலவுக்கானது.தண்ணீர் தனியார்மயமானால் என்ன ஆகும்
"1994ல் தென்னாப்பிரிக்காவில் மண்டேலா பதவியேற்றவுடன் தண்ணீர் தனியார்மயமாக்கினார். ஒரு குடும்பத்துக்கு 6000லி எனும் உறுதிமொழியோடு விவென்டி, பைவாட்டர்,"சூயஸ்" (கோவை மக்கள் கவனிக்க) நிறுவனங்கள் களமிறங்கின.
"வாட்டர் மீட்டர் பொருத்தி 7500கட்டணம்.30% வருமானம் இதற்கே செலவானது.
அபராதம்,துண்டிப்பு நிகழ்ந்தது. இது போஸ்ட் பெய்டு மீட்டர்.அடுத்து ப்ரீ பெய்டு மீட்டர் வந்தது. செல்போன் ரீசார்ஜ் மூலம் அட்டையில் பணம் இருந்தால் மட்டும் தண்ணீர்.உடையுங்கள் மீட்டரை,சுவையுங்கள் தண்ணீரை என போராடினர்.இது இனி நமக்கும் வரலாம். தனியார் தண்ணீர் வணிகம் செய்ய வைப்பது நாட்டுக்கு,வீட்டுக்கு கேடு.
#உலக தண்ணீர் சபை
தண்ணீரை தனியார்மயமாக்கு எனும் நிபந்தனையை உலகவங்கி வைக்கிறது.தண்ணீரை மக்கள் வீணாக்குவதால் 1993 உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் ஒன்றுகூடி உலக தண்ணீர் சபை உருவாக்கியது.
இப்போது 400க்கும் மேல் உறுப்பினராய் உள்ளன. 300க்கும் அதிகமான வளரும் நாடுகளில் முதலீடு செய்துள்ளது. 62% நாடுகள் தண்ணீரை தனியார்மயமாக்க உறுதியளித்துள்ளன.GATS ஒப்பந்தம் எனும் இதில் தண்ணீரும் ஒரு விற்பனை பொருள் எனும் உடன்பாட்டில் நம் இந்திய நாடும் கையெழுத்திட்டுள்ளது.இதற்கு உதவியாக வளரும் நாடுகளுக்கு
கடன்,மானியம் வழங்கும்.
கொஞ்சம் சுதாரித்தால் வாங்கிய கடனை வட்டியும் முதலுமாய் திரும்ப கொடு என மிரட்டும். சென்னையில் 3கோல்ஃப் மைதானம் உண்டு.இதை பராமரிக்க 60 இலட்சம் லி தண்ணீர் தேவைப்படும்.
#மார்க்கெட்டிங்
ஒரு பொருளை விற்க மார்க்கெட்டிங் அதிகம் செய்கின்றனர்.தண்ணீர் விளம்பரம் அதிகம் செய்கின்றனர். குழாய் தண்ணீர் குடிப்பது நாகரிகமற்றது.செயற்கையாய் வாங்க தூண்டுகின்றனர்.பெரிய ஹோட்டல்களில் இன்னும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் அவலத்தை சுட்டுகிறார்.தண்ணீருக்கான செயற்கை தேவையை உருவாக்குகின்றனர்.
#மழை
ஒரு மழை பெய்தால் அனைத்தும் தீருமா? தேக்கி வைக்கும் நீர்த்தேக்கங்கள் நாசப்படுத்திவிட்டோம். ஆறுகளின் அழிவை பேசிவிட்டு,குளங்களின் அழிவை பேசவில்லை.நிலத்தடி நீரை சுரண்டுகிறோம்.
#கற்றதும் பெற்றதும்
தண்ணீர் குறித்த விழிப்புணர்வையும்,ஒவ்வொரு கட்டுரையிலும் பெட்டிச் செய்தியுடன் உள்ள தண்ணீர் குறித்த செய்தியும் அவலத்தை உணர்த்துகிறது. புத்தகம் முழுவதும் தண்ணீர் பற்றிய செய்திகளே நிறைந்துள்ளன. ஒரு காரை தயாரிக்க 3.5 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.அதனை ஏற்றுமதி செய்யும்போது நம் நீரையும் ஏற்றுவதி செய்கிறோம்.
இதுபோன்ற தகவல்கள் பொதிந்துள்ளன. தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்பது பழமொழி. தற்போது தாயை சீரழிக்க தயாராகும் நிறுவனங்களை என்ன செய்வது..கேரள பிளச்சிமாடா மக்களின் மனநிலையை கொடுப்பாயாக.!
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment