கற்றதும் பெற்றதும்-42
*மணி
இப்பொழுது அதிகபட்ச அறிவாக கருதப்படுவது ஞாபக அறிவுதான்
-மதுக்கூர் ராமலிங்கம்
#கையளவு கடல்
-மதுக்கூர் ராமலிங்கம்
மேடைப் பேச்சுகளிலேயே கவனிக்கப்பட்ட இவரை..செம்மலர் நாளிதழின் கடைசிப்பக்கத்தில் தான் இவரின் எழுத்தினை படிக்க ஆரம்பித்தேன்.நகைச்சுவையோடு அன்றாடம் தொலைத்த வரலாற்றின் சுவட்டை, அரசியல் நையாண்டியையும் இவரின் எழுத்தில் காணலாம்.
அதேபோல் இவரின் மற்றொரு முகம் ஆச்சர்யமானது.தேர்ந்த படிப்பாளி. திருப்பூர் புத்தகத்திருவிழாவில் வள்ளலார் குறித்த அருமையான சொற்பொழிவை மிகுந்த ஆழத்துடனும் கருத்துச்செறிவுடனும் கூறி ஆச்சர்யப்படுத்தினார்.அருமையான பல கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன.அதிலிருந்து ஒரு சில
# உள்ளூர் சண்டையைப் பற்றி விவரிக்கும் போது.. திடீரென்று ஊர் ஜனங்கள் விழுந்தடித்து ஓடுவர். அது என்னவென்று கேட்டால் கடைசி தெருவில் சண்டை நடக்கிறது என்று ஓடிக்கொண்டே சொல்வார்கள்.
ஊரே பரபரப்பாக இருக்கும். குறுகியகால சண்டையாய் இருந்தால் நின்றபடியே பார்ப்பார்கள். நீண்ட நேரம் இருக்கக் கூடியதாக இருந்தால் அங்கு அங்கே அமர்ந்து விடுவார்கள். முதலில் இருந்து கவனித்து வருபவர்கள் சண்டைகளின் பின்னணியில் சுருக்கமாக விளக்குவார்கள். இது கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
#நேற்றில் வாழ்கிறது இன்று கட்டுரையில்..எந்த நிகழ்வின் போதும் ஓயாமல் பழங்கால நினைவுகளை கூறிக்கொண்டே இருப்பார்கள்.
அறிவுரைகளை எப்போதும் மூட்டை கட்டி அடுத்த தலைமுறைக்கு கொடுத்துகொண்டே இருப்பது. காலம் கெட்டுப்போச்சு எனக்கூறாமல் காலத்தின் கையை பிடித்துக்கொண்டு நடக்க பழக சொல்லித்தருகிறார்.
# நாட்டுப்புற தெய்வங்கள் மனிதனை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
நானும் நண்பர் செந்தில் சாரும் இது பற்றி விவாதித்திருக்கிறோம்.நாட்டுப்புற தெய்வங்களை இப்போது விட்டுவிட்டு உயர்தட்டு பிரிவினர் கும்பிடும் சாமியை கும்பிடுவது. அன்று தெய்வங்களின் பெயரை வைத்தனர்.வழிவிட்ட அய்யனார், வேம்படி முத்து,நடுக்காட்டு ராஜா, பொன்மாடத்தி என பெயர் வைத்தனர்.இப்போது ஒரு சில அடித்தட்டு மக்களே வழிபடுகின்றனர். தற்போது வசதியானவர்களை பார்த்து எல்லாம் "சாய்" கும்பிட ஆரம்பித்திவிட்டனர். இதுபோன்ற கருத்தை மதுக்கூரும் தன் பாணியில் பதிவிடுகிறார்..
" மனிதனின் உச்சபட்ச கற்பனை தான் கடவுள்.அவரவர் வாழ்க்கைக்கேற்ப கடவுள் கற்பிக்கப்படுகிறது. வசதியானவர்களின் கடவுள் வசதியாக இருக்கிறது. இல்லாதவர்களின் கடவுள் அவர்களைப் போல பஞ்சத்தில் அடிபடுகிறது. மனிதனும் கடவுளாகலாம் என்று ஆன்மீகவாதிகள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவேளை மனிதன் கடவுள் ஆனாலும் வசதியான மக்களின் கடவுளாக மாறினால்தான் வசதி.
# வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க முடியாத போது ஏதாவது சமாதானம் தேடி அலைகிறது மனசு.அப்போது மூடநம்பிக்கையில் மனம் சற்று ஆறுதல் தேடிக்கொள்கிறது.
கிராமத்தில் அடேயப்பா ராமசாமி என்ற ஒருவர் இருந்தார். அவர் ஒன்றைப் பார்த்து வியந்து கூறினால் அது அர்த்த நாசமாகி விடும் என்பது ஐதீகம்.
"ஒருவர் தன் வயலில் மிளகாய் பயிரிட்டிருந்தார். அதில் களை அதிகமாக இருந்தது. களை எடுத்தார்கள் பின் அப்படியே விட்டுவிட்டார். ஒருநாள் யோசனையில் ராமசாமியை அழைத்து வந்து இவ்வளவு களையா என்று கூறிவிட்டால் அப்படியே களை போய்விடும் என நினைத்து ஒருநாள் ராமசாமியை அழைத்து வந்து இருக்கிறான். அவரும் வயலை சுற்றி பார்த்துவிட்டு அடேங்கப்பா இவ்வளவு புல்லுக்கு இடையிலும் ஒன்றிரண்டு மிளகாய் செடி தலையை காட்டுகிறது பார் அடேயப்பா என்றாராம் அழைத்துப்போன வரும் அழகில் மயங்கி விழுந்தார்.
#மிக்க அடர்த்தியான நடையோ, புதிர் போன்ற கருத்துகளோ இல்லாமல் எளியவரை அணுகும்வகையில் இயல்பாகவும்,அத்துடன் காலம் மறக்கச் செய்த பால்ய கால நினைவுகளையும் தமக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியிருக்கிறார்.இடையிடையே வாழ்வில் ஆச்சர்யப்படுத்தும் தகவல்களும் பகிர்கிறார்.மனதை புத்துணர்வுபடுத்தும் புத்தகத்தில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment