Monday, 24 September 2018

கற்றதும் பெற்றதும்-40

கற்றதும் பெற்றதும்-40
*மணி

பொம்மை வாங்க இயலாத ஒருவன் தன் குழந்தைக்குச் சொல்ல ஒரு நாய்க் கதையை உருவாக்கிக்கொண்டு நகர்கிறான் கடையைவிட்டு

-முகுந்த் நாகராஜன்

#அகி

-முகுந்த் நாகராஜன்

முகுந்த்தின் கவிதை வாசனையை அறிந்தவர்கள் அதிகம்.சாஸ்தா பேக்கரி,ஜன்னல் சீட்,குழந்தை மொழியின் வரிகள் அதிகம் படித்திருப்பீர்கள்.இந்த பெயரை இப்போதுதான் உச்சரிப்பவர்கள் நிச்சயம் புதுக்கவிதை பிதாமகனில் ஒருவர் என இவரை அறிந்துகொள்ளலாம்.

நேர்த்தியான வார்த்தைகள், எளிமையான வரிகள்,படித்தவுடன் அறிந்துகொள்ளும் பக்குவம் என இவரின் கவிதைகளில் இருக்கும். அகி எனும் இப்புத்தகத்தில் உள்ள 65கவிதைகளும் அபாரம்.அதில் ஒரு சில..

#குழந்தையின் உலகத்தில் சென்று அன்று நடந்த அதிசயங்களை வளர்ந்தபின் சுக்கு நூறாக உடைத்துப்போட்டிருக்கும் காலத்தினை கேலி செய்வதாக ஒரு கவிதை

"பூதம் வரும் என்று
சின்னவயசில் தேய்த்துப் பார்த்த கண்ணாடி என் கையில் சிக்கியது. பார்த்தேன்.
என் முகம் தெரிந்தது.
எப்போதோ தேய்த்ததற்கு இப்போதுதான் தெரிகிறது வயசான பூதம்.

#ஒரு கவிதைப்புத்தகத்தின் சுவாரஸ்யமே அடுத்தடுத்த பக்கங்களில் இன்னும் நல்ல கவிதை கிடைக்குமென தேடுவதுதான்.இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் புதையல்தான்.
இதனை இயல்பாய் சமையலறையில் பிடிக்கிறார்

..தோசை என்ன ருசி என்றால் என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை"..

#நவீன கால பிள்ளையார் சதுர்த்தியை அப்பார்ட்மென்ட் வாசிகள் கொண்டாடும் நிதர்சனம்.ப்ளாட்வாசிகள் கவனிக்க..

" ஃப்ளாட்டின் சின்ன அறையில் கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்து விட்டு
பக்கத்து ஃப்ளாட் காரர்களுடன் கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வது நன்றாய்த்தான் இருக்கிறது. பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
சந்தோசமாய் இருக்கிறது
கிணறுதான் குறைகிறது அதையாவது அனுப்பினீர்களா அட்டாச் பண்ணி?

#வார இறுதியில் சொந்த ஊர் சென்று அனைவரையும் பார்த்துவிட்டு திரும்பும் வாழ்வை பற்றி

" இரவெல்லாம் பயணித்து காலையில் ஊர் சேர்ந்து
அன்று இரவே திரும்பும் எனக்கு வீட்டில் கிடைக்கும்
வரவேற்பு  வார்த்தை
பிரிவு வார்த்தையைப்
போலவே ஒலிக்கிறது.

#வீடு சுத்தம் செய்யும்போது கிடைக்கும் பல பொருட்களை தேடும் வேலையை நிறுத்திவிட்டு நினைவில் மூழ்கும் ஆற்றலை கொண்ட பொருள் யதேச்சையாய் கிடைக்கும். அப்படி கிடைத்த பொருளில்

" நீ எழுதிவிட்டு திருப்பித் தந்த பேனாவையும்
போன் செய்ய  என்று பொய் சொல்லி
உன்னிடமிருந்து நான் வாங்கிய ஒரு ரூபாய் நாணயத்தையும் இன்னும் வைத்திருக்கிறேன் பத்திரமாய்
அவ்வப்போது
தொட்டுப் பார்த்துக் கொண்டும் முத்தம் கொடுத்துக் கொண்டும்.
இதெல்லாம்
கல்யாணமாகி குழந்தைகள் பெற்று
அம்மாவாகிப் போன உனக்குத் தெரிந்தால்
சந்தோஷப்படுவாய் தான்.
ஆனால்,

#வாழ்வின் இலட்சியங்களையெல்லாம் ஒரு நொடி மறக்கவைத்துவிடும் அவசர வாழ்க்கை.அவ்வகையில்

" அடுத்த வருஷத்துக்குள் வேறு வேலைக்கு மாறவும்,
மூன்று வருஷத்துக்குள்
புது வீடு வாங்கவும்,
அதற்கு அப்புறம் உடனே கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் என்று
திட்டமிட்ட இலக்குகளை வைத்து நான் நடத்திக் கொண்டிருக்க,
ஓர சீட்டு கிடைத்த சந்தோஷங்களிலும்
ஒளியும் -ஒலியும் ரத்தான வருத்தங்களிலும்
செலவாகிக் கொண்டிருக்கிறது என் வாழ்க்கை.

#ஐந்து வயதுக்குள் அவரவர் உலகத்தில் வாழும் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தவுடன் பொது உலகிற்கு வருகின்றனர்.இதனை தனக்கே உரிய எள்ளலுடன்

"டுட்டு' என்று ஒருத்தன் குறிப்பிடும் ரயிலை
'டாட்டா' என்பானாம் இன்னொருத்தன்
'சாச்சா' என்பாளாம் சாப்பாட்டை ஒருத்தி
பிஸ்கட்டை 'அக்கி' என்று சொல்பவளும்
'பையை' என்று பைக்கை சொல்பவளும்
டிவியை 'டிடி' என்பவனுமாக வித்தியாசங்களால் நிறைந்திருக்கிறது குழந்தைகளின் உலகம். எல்லாவற்றையும் எல்லோரும்
ஒரே மாதிரி சொல்வதற்கு பள்ளிக்கூடத்தில்
சொல்லித் தருவோம் அவர்களுக்கு.

#மனம் கவர்ந்தவை

*அன்று தண்டவாளத்தில் கிடந்த
அட்டை இல்லாத
கிழிந்த புத்தகம் போல் ஒன்று
படிக்க கிடைக்கவில்லை இன்னும்
அப்படி என்னதான் அதில் எனச்சொல்ல
அந்தபுத்தகம் என்னிடம் இல்லை இப்போது
அந்த வயதும்

*தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்
நான்போய்ச் சேரும் காலைக்கு
குறுக்கு வழியாய்
எனக்குத்தான் தூக்கம் வரவில்லை

* அனைவருக்கும் பெயர் வைத்த காலம் போய்
அவரவரை அவரவர் பெயரால் கூப்பிடும் காலம் வந்து விட்டது இப்போது.

* ஒரே மாதிரி வகிடு எடுத்து ரிப்பன் கட்டி வரிசையாய் செல்லும் போது நினைத்தேன்
இத்தனை பேருக்கும் தலைவாரி விட்டு விட்டவளுக்கு எத்தனை கை வலி இருக்கும் என்று

* திருஷ்டி பொட்டே
அழகாக இருக்கும் குழந்தையை எப்படி காப்பாற்றுவது
தாக்கும் கண்களிடமிருந்து?

#கற்றது

கவிதையின் சுகமே
எல்லோரும் பூமியை பார்த்திருக்கும்போது ஒரு கவிஞன் வானத்தை கைகாட்டி, அவன் விரல் நீட்டும் நோக்கில் நேரே நோக்கி ஒர் காட்சியை பார்க்கிறோமே அதுதான் கவிதை.நாம் கவனிக்க தவறியதை அவன் சுட்டுகிறான். அக்காட்சி தரும் இன்பமும்,அதனை சுட்டிய அவனின் எண்ணமும் நாம் நினைத்து நினைத்து இன்புற வேண்டியது.அது பார்வையாளனுக்கு ஒரு தூண்டுகோலை தருகிறது.அகக்காட்சி திறக்கிறது. கற்றுக்கொள்ள வேண்டிய திசை தெரிகிறது.அதற்கு நம் சிறகை விரித்தல் அவசியம்.

-தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment