Monday, 24 September 2018

கற்றதும் பெற்றதும்-39

கற்றதும் பெற்றதும்-39

*மணி

#முதல் ஆசிரியர்
-சிங்கிஸ் ஐத்மாத்தவ்

"ஓ வானமே ,
ஓ காற்றே ,
என்னை பாருங்கள் நான் எவ்வளவு பெருமிதமாக இருக்கிறேன்..
நான் படிக்க போகிறேன்..
நான் பள்ளிகூடம் போக போகிறேன்
மற்றவர்களையும் அழைத்து செல்ல போகிறேன்...எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது..."

கல்விகற்கச் செல்லும் ஒரு கிராமத்து மாணவியின் மனநிலை. "முதல் ஆசிரியர்"  உலகபுகழ் பெற்ற நாவல்களில் ஒன்று.ரஷ்யப் புரட்சிக்குப் பின் கல்வி புரட்சியில் கவனம் செலுத்திய காலகட்டம். "மலை வாழை அல்லவோ கல்வி" எனும் பாவேந்தரின் வரிகள் இருந்த காலம்.தனக்கு கீழே அறியாமை நிறைந்தவர் கூட்டம் இருக்கிறது எனக் கருதிய அறிவாளிகளின் காலம். ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய நூல் (pdf இருக்கானு கேட்காதீங்க பாஸ்)

#அல்டினாய்

நீண்ட நெடுங்காலத்திற்குப் பின், கல்வித்துறை அறிஞராய் உயர்ந்திட்ட அல்டினாய் எனும் பெண் தன் சொந்தக்கிராமமான "குர்கூரெவு" கிராமத்திற்கு பள்ளிக்கட்டிடம் திறக்க வருகிறார்.வழியில் தென்படும் தான் நட்ட பாப்ளார் மரங்கள் பார்த்து பரவசமடைகிறார்.விழா நிகழ்வில் தன் முதல் ஆசிரியர் "தூய்ஷனை" எதிர்பார்த்திருக்கும்போது, அங்கு அவர் வாழ்த்து தந்தி கொடுத்துவிட்டு,மற்ற தந்திகளை கொடுக்க செல்கிறார்.ஒரு தபால்காரராக பணி செய்கிறார். இதை கேள்விப்பட்டு, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிடுகிறார்.பின் இதற்கான காரணத்தை நண்பருக்கு கடிதம் மூலம் தெரிவிப்பதுதான் முழு குறுநாவலும்.

#துய்ஷேன் பள்ளிக்கூடம்

அல்டினாய்க்கு 14 வயது இருக்கும்போது ஒரு இளைஞன் கிராமத்திற்கு வந்தான்.அவர்தான் துய்ஷேன்.படிப்பு சொல்லிதர வந்ததாக சொன்னவுடன் உழைப்பவர்களுக்கு படிப்பெதற்கு என நிராகரித்தனர் மக்கள்.ஆனாலும் சட்டத்தை மதித்து அனுமதிக்கின்றனர்.
ஆனால் பிள்ளைகளை அனுப்பவில்லை. மனம்தளராத துய்ஷேன் குன்றின் மேலுள்ள கொட்டைகையை பள்ளியாக மாற்றுகிறார்.சாணம் பொறுக்கி மூட்டையாய் கட்டிவரும்போது ஆசிரியரை பார்த்து பேசுகின்றனர் சிறுமிகள்.பின் அனைவரும் கிளம்ப அல்தினாய் மட்டும் திரும்ப பள்ளிக்கு சென்று மூட்டை வைக்கப்போகிறாள்.

"நீங்கள் தேடுவது, உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது என்பார்

ரூமி.

பின் வீட்டிற்கு புது சாண மூட்டையை பொறுக்கி செல்கிறாள்.அநாதையான இவளை சித்தி திட்டுகிறாள். இருநாள் கழித்து துய்ஷேன் வீடுவீடாக வந்து குழந்தைகளை பள்ளி சேர்க்கிறார்.ஒருவழியாய் அல்டினாயையும் சேர்க்கிறார். தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லித்தருகிறார்.லெனின் வாழும் மாஸ்கோ நகர பள்ளிகளை சொல்லித்தரும்போது குழந்தைகள் ஆர்வம் கொள்கிறார்கள்.தம் ஆசிரியரை பெரிய புத்திசாலியாய் நினைத்தார்கள்.
லெனின் இறப்பிற்கு சென்ற ஆசிரியர் வராதது கண்டு குழந்தைகள் வருந்துகின்றனர்.(உண்மையில் ஆசிரியரை வராததை நினைத்து குழந்தைகள் வருந்தினாலே நல்ல ஆசிரியர் ஆகிட்டோம்னு அர்த்தம்)

#மேல்படிப்பு

பெண்ணுக்கு  படிப்பெதற்கு என இரண்டாம் திருமணம் செய்து செய்து வைக்க சித்தி திட்டமிடுகிறாள். இதனை அறிந்து மனமுடைந்த சிறுமியை ஆசிரியர் காப்பாற்றி மீட்டெடுத்து தன்னுடன் தங்க வைக்கிறார்.நீ ஒரு விஞ்ஞானியாய் ஆகப்போகிறாயென நம்பிக்கையை விதைத்து,நகரத்தில் படிக்க ஏற்பாடு செய்கிறார். ரயில் நிலையத்தில் அறிவுரை கூறும் காட்சி அற்புதமாய் இருக்கும். நீ பெரியவளாகி இங்கே வரும்போது நாம் நட்ட பாப்ளார் மரங்கள் எவ்வளவு அழகானதாய் இருக்கும் என்று நீயே பார்ப்பாய் என்றார்.

#கல்வியாளர்

துய்ஷேன் கனவு கண்ட பள்ளியில் படித்து, தொழிலாளர் துறை முடித்து, கல்லூரி் மாஸ்கோவுக்கு சென்று படிக்கிறார் அப்பெண். எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் ஒருமுறை கூட பின்வாங்க துணிந்ததில்லை.

காலம் ஓடுகிறது. ஆசிரியரை பற்றி தகவல் இல்லை.தேடாத இடமில்லை.பின் எனக்கு திருமணமாகி, குழந்தைகள் வந்தனர்.சொந்த ஊர் போக பிடிக்கவில்லை. அந்த பள்ளியில் திறப்புவிழாவுக்கு தன் ஆசிரியர் வருவார் என்று ஆவலோடு சென்றார். தன் முதல் ஆசிரியர் விழாவில் சிறப்பு செய்யாததை கண்டு மனம் வெதும்பி
ஊருக்கு திரும்பினேன் என் கடிதத்தை முடிக்கிறார்.பின் ஊர் வந்தவுடன் நிம்மதியின்றி, தன் முதல் ஆசிரியரின் ஓவியத்தை பலவாறாக கற்பனை செய்து வரைய திட்டமிடுவதாக நாவல் முடியும்.

#மனம் கவர்ந்த வரிகள்

* உயிருள்ள எல்லாவற்றுக்கும் அதனதன் வசந்தமும் இலையுதிர் காலமும் உண்டு.

*சில நேரங்களில் ஒரு மனிதனை பின்புறமிருந்து பார்த்தாலே அவருடைய மனநிலை புரிந்துவிடும்

*ஓ என்னால் மட்டும் அவனைப் பார்வையால் கொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.

* தண்ணீரே இந்த நாள்களில் அசுத்தத்தையும் மாசையும் அடித்துச் செல்! நீ எப்படி தூய்மையாக இருக்கின்றாயோ, அதேபோல் என்னையும் தூய்மையானவளாக ஆக்கு

* கடந்தகாலம் மறைந்தது, எதிர்காலம் அதற்கே உரித்தான பலப்பல கவலைகளுடன் நிரந்தரமாக அழைத்தது.

*"வாழ்க்கையிலும் சில சமயம் இப்படி நடப்பது உண்டு. ஒருவேளை அதனால்தான் அது வாழ்க்கையாக இருக்கிறதோ.

#கற்றது

இப்போதைய முதலாளித்துவ சமூகத்தில் ஆசிரியர் என்பவரை ஏதோ பணத்திற்காக பாடம் நடத்துவதுபோல் அற்பமாய் நினைக்கிறோம்.
வகுப்பறையில் ஒருவன் தவறிழைத்தால் ஒட்டுமொத்த வகுப்பையும் குற்றம் சொல்வது எப்படித்தவறோ அதுபோலவே நாம் ஒட்டுமொத்த பிழையாய் கருதிக்கொள்கிறோம். உண்மையில் ஒரு ஆசிரியரினின் பேச்சினை கேட்டிருந்தால் பலர் தவறான பாதையில் சென்றிருக்க மாட்டார்கள்.எதிர்காலத்தை முன் கூட்டியே அறிந்து படி படி என்று சொன்னதை,புறந்தள்ளி இன்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரின் அகவானிலும் அசரீரி போல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் "ஒழுங்காப்படி இல்லைனா கஷ்டப்படுவ" எனும் குரல்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment