#ஆட்டம்
-சு.வேணுகோபால்
எந்த அலங்கார வார்த்தையும் இல்லாமல் ஒரு குறுநாவலை சுவாரஸ்யம் குறையாமல் தந்திருக்கிறார் சு.வே.சிறுவர்கள் விளையாடும் தொட்டு விளையாட்டில் அவுட் ஆகாமல் களைப்பின்றி ஓடுவோமே அதுபோல. தொட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் அவனும்,அவுட் ஆகக் கூடாது எனும் எச்சரிக்கையுடனும் ஆடுவது போல் இதன் மொழிநடை உள்ளது.
#கதை
தேனி நகரம்தான் கதையின் களம். கபடி வீரரான வடிவேல் ஊரில் ஒரு கில்லி.அவன் ஆட்டத்தில் மயங்கிய கனகத்தை கைப்பிடிக்க முடிவெடுக்கிறான்.வெவ்வேறு ஜாதி என்பதால் ஊரை விட்டு ஓடிப் போய் நகரத்தில் வாழ்கின்றனர். இரு பிள்ளைகள் பிறந்ததும் ஒரு கட்டத்தில் உடன் வேலை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பினால் மனைவி கனகம் காதல் கொண்டு அவனுடனே சென்று விடுகிறாள்.
வேறுவழியின்றி வடிவேல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே..தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான். அவமானத்துடன் இருக்கும் போது.. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து, பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான்.
மீண்டும் ஜெயித்தானா?90கிட்ஸ் 2k கிட்ஸ் சிலபஸை பாஸ் செய்வது அவ்வளவு எளிதானதா?என தன் சுவாரஸ்ய மொழி நடையின் மூலம் கதையை காட்சிப்படுத்தியுள்ளார்.
கதையின் விறுவிறுப்பும், கிராமத்து நடையும் பக்கத்து வீட்டில் கதை கேட்பது போல் இருந்தது.
மீண்டும் ஆடத் தொடங்கிய வடிவேலுவின் கால் சதை புரண்டு விட்டது போல் வலி.
குதிகளின் நரம்புகள் ஆங்காங்கே பிடித்தன. தன்னுடைய ஆட்டங்களில் தனித்து கிளம்பும் வீச்சு காணாமல் போய்விட்டது. எங்கோ ஒளிந்து கொண்டது. நிகரற்ற அந்த சுழிமுனை ஆட்டம் கழன்றுகொண்டு விட்டதோ என்று பட்டது. விளையாடாமல் இருந்திருந்தால் கூட பழைய வெற்றிகளை எல்லோரும் சொல்வார்கள் அந்த மதிப்பும் அழிந்து விடுமோ என்ற கவலை அவனுக்கு ஏற்பட்டது.மனித மனத்தை யதார்த்தமாய் விளக்குகிறார்.
#ரசித்தது
*அவரவர் அவரவருக்குத் தெரிந்த விதத்தில் ஆடுகின்றனர். தெரியாமல் ஆடி தெரிந்தும் கொள்கின்றனர். ஆடாதவர்களுக்கு வாழ்க்கை இல்லை. வாழ்க்கையில் ஆடாதவர்கள் இல்லை. ஆட்டமே வாழ்க்கை. வாழ்க்கையை ஆட்டம். மானுட ஆட்டம்.
*மனைவியைத் தேடி கண்டு இழுத்து வரலாமா என்று தோன்றியது. வர மறுத்தால் குழந்தைகளின் நிலையை சொல்லி நெஞ்சை கரைத்துவிட எண்ணம் தோன்றியது. இருப்பினும் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற வீம்பும் வைராக்கியமும் தோன்றுவதுண்டு என
ஆணின் மனநிலை அப்படியே விளக்கி இருப்பார்.
*பெருகும் அறிவு விதவிதமாக குழிபறிக்கும் சூட்சமத்தை மௌனமாக சேர்த்துக்கொண்டே இருக்கிறது. எல்லாம் மானுடரும் குழந்தைகளாக இருந்தபோது தான் நேசம் இயல்பாய் துளிர்த்திருக்கும்.
*தெருவில் போகும்போது மனிதர்களுக்குப் பெரும் பிரச்சனைகள் இல்லாதவர்கள் போல் சாதாரணமாகத்தான் நகர்கிறார்கள்
*பார்வையில் சாதாரண மனுஷியாகவும் மனிதனாகவும் தெரிகின்றனர்
*ஓடவேண்டும். தோற்றாலும் ஓடவேண்டும். ஓடுவதில் என்ன வெற்றி தோல்வி. ஓடாமல் நிற்பதுதான் தோல்வி
*வயது ஏற ஏற கிளைகளை விரிக்கின்றன. பூக்களை சொரிக்கின்றன. காய்க்கின்றன. இந்த மரங்கள் எந்த வருடமும் ஓய்வு எடுத்துக் கொள்வதே இல்லை.
*எதில் ஓடினாலும் கவனத்தை தூண்டி விட்டுக் கொள்ள வேண்டும் நிதானமாக ஓட வேண்டும் .
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
.
No comments:
Post a Comment