Monday, 17 May 2021

கற்பதுவே பகிர்வதுவே-32*மணி



#RM314-
புத்தகம் 6/100+

#சின்ன விஷயங்களின் மனிதன்
-வண்ணதாசன்

படித்து முடித்து வேலை எல்லாம் கிடைத்த பிறகு ,சமுதாயத்தில் நல்ல பெயர் எடுத்தபின் ,எங்கோ ஒரு கட்டத்தில், சந்திக்கும் நம் பால்ய கால நண்பன்.. நம் கண்ணைப் பொத்திக் கொண்டு வந்து நம் முன் நின்று நம் பிம்பத்தை எல்லாம் உடைத்து மீண்டும் பால்ய காலத்திற்கே கைபிடித்து அழைத்துச் சென்று, பழைய நினைவுகளை கூறும் போது நாமும் சிறுபிள்ளையாக.. ஒவ்வொரு சம்பவங்களும் ஆமாம் ஆமாம்! என்று கூறி விளையாடுவோமே.. அதுபோல இப்புத்தகத்தில் உள்ள பக்கங்கள் ஒவ்வொன்றும் நம் மனதிற்கு மிக நெருக்கமான நம் பால்யத்தில் நம்மோடு கலந்து பழகிய ஒரு நண்பனின் கை குழுக்களைப் போல் ஒவ்வொரு சிறு கட்டுரையும் நம்முள் விரிகிறது.

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா என்று பாடிய கண்ணதாசனைப் போல் ஒரு கட்டுரையில்" இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து, அதன்மேல் தாள் பூ இலையை வைத்து வலது கையை அகல விரித்து அடிப்போம்.'டொப்' என்று சத்தம் வரும். அது ஒரு விளையாட்டு. அது எல்லாவற்றையும் ஒரு விளையாட்டாக ஏற்றுக்கொள்கின்ற மனம் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. என மனித மனம் எவ்வளவு தூரம் மாறிவிட்டது என்பதை சொல்கிறார்

வண்ணதாசனைப் படிக்கும்போது ரசனையை நமக்குள் ஊறவைத்து விடுவார் .உலகிலேயே அதிக சுலப மற்றது, நமக்குள் நாம் நுழைவதும், நம்மிடமிருந்து நாம் வெளியேறுவதும் தான். அதுவும் சலனம் எதுவும் இன்றி. என்று வார்த்தையையே நம் மனதுக்குள் ஊசி நூல் கோர்ப்பது போல் மிகவும் இலகுவாக வார்த்தைகளையும் நினைவுகளையும் நமக்கு கடத்தி விடுவார்.

இதுவரை எந்த படத்திலும் பழனியம்மா என்ற பெயர் தமிழ் படங்கள் வைத்து  பார்த்ததில்லை. அப்படித்தான் மௌனகுரு படத்தில் காவல்துறை ஆய்வாளர் பெயரை வைத்ததை குறிப்பிடுகிறார். உண்மையில் இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.இன்றும் திரைப்படங்களில் சிவா,ஜீவா, இன்னும் சில குறிப்பிட்ட பெண்பால் பெயர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால் நிஜவாழ்க்கையில் சில அதிகாரிகளின் பெயரை பார்க்கும் போது பொன்.இருளாண்டி, வேம்படி முத்து, செல்வச் செழியன்,என கிராமத்துப் பெயர்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். இப்படித்தான் திரைப்படத்திலும் இப்பெயர் வைத்திருப்பதையும் நானும் பார்க்கிறேன்.

மனிதர்களின் வாசம் முக்கியமானது நம் நினைவில் இருக்கும் சில மனிதர்களின் வாசம் எத்தனை நாட்கள் ஆனாலும் நினைவில் இருக்கும். அப்படித்தான் வண்ணதாசனும் ஒரு இடத்தில் சொல்கிறார் மாம்பழ வாசனை அடிக்கிற என் உள்ளங்கையை யாருடைய நாசியில் சற்று பொத்தலாம்.. என்று கூறி மாம்பழத்தின் நினைவுகளை பாடியதோடு நமக்குள் வாசனையாகவும் தந்து மனிதர்களின் வாசம் எவ்வளவு அருமையானது என்று முடித்திருப்பார்.

தந்தையுடன் செல்லும் மகள் ஒரு கடையில் பேரம் பேசி பொருள் வாங்குகிறார்கள். கடைசியில் அப்பா கொடுத்த ரூபாயை வாங்கி கடைக்காரரிடம் கொடுக்கிறாள் மகள். வாங்கியவர் கைகளில் ஒரு விரல் நகத்தில் ரத்தம் கட்டி நீலமாக இருக்கிறது. 'கையில் அடிபட்டு விட்டதா அங்கிள்' என்று கேட்கிறது. 'சரியா போச்சு அதெல்லாம்' விசாரிப்புக்கு பதில் சொல்லும் அவர் முகம் கனிந்து நெகிழ்கிறது. எல்லாம் சரியாகத்தானே போகும் இப்படி அக்கறையாக கேட்க ஒரு எட்டு வயது சிறுமி இன்னும் நம்மோடு இருக்கும் போது என்று முடிக்கும் போது நாம் அந்த கடைக்காரராய் இருந்து நெகிழ்ந்து தான் போகிறோம்.

பூ விற்கிற பெண்ணைப்பார்த்து சிறு நினைவுகளை முன்வைக்கிறார். பூ விற்கிறவர்கள் பூ வாங்குகிறவர்களை மட்டும்தான் விசாரிப்பார்கள் என்று யார் சொன்னார்கள். அவர்கள் அவர்களுடன் வாழ்கிற அனைவரையும் விசாரித்த படியே இருக்கிறார்கள். விசாரித்த படியேதான் இருக்கிறார்கள். விசாரிப்பின் வாடாத பூவுடன் அவர்களின் பூக்கூடை ஈரமாகவே இருக்கிறது.இப்படி ஒரு மனிதர்களை விவரிக்க கல்யாண்ஜியை தவிர யாரால் முடியும்.

தெருவில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் சிறுவன் சைக்கிள் மிதித்துக் கொண்டு தான் வாங்கி வந்த எண்ணெய் பண்டத்தை பிட்டு வாயில் போட்டுக் கொண்டான். நான் அவனிடம் எனக்கும் ஒரு வாய் தா என மனதில் கேட்கிறேன். வாய்விட்டு கேட்டிருந்தால் அவன் தந்திருப்பான். அன்றைக்கு உரிய அப்பத்தை நான் பெறுவதெல்லாம் இதுபோன்ற கைகளில் இருந்து தான் என்று மனதில் தோன்றிய விஷயங்கள் எவ்வளவு அழகானவை என்று கூறுகிறார்.

#ரசித்தது

*மழை பார்த்தல் ஒரு அனுபவம். கன மழையின் ஆழ்ந்த ஆன்மீகம் தனியானது. மழை பார்க்க துவங்கிய மறுகணம் மழை உங்களைத் தொலைத்து விடும் .காணாமல் போக்கிவிடும். நீங்கள் இல்லாமல் இருப்பீர்கள்.

*நமக்கும் விரல்கள் இருக்கின்றன. நாம் அந்த விரல்களால் என்ன செய்கிறோம் .அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று அடுத்த பக்கத்திற்கு சென்று விடுகிறோம். அந்த அப்புறம் வருவதே இல்லை என்பதுதான் துயரமானது

*எல்லாவற்றுக்கும் மனம்தான் அளவு எல்லாவற்றையும் விட மனம் தான் அழகு

*அதிகம் தன்னை முன்வைக்காத, அதிகம் கவனத்தைப் கோரி பெறாத என் உலகத்தில் எளிய மனிதர்கள். அவர்களின் சின்னஞ்சிறு விஷயங்களால் அறையை நிரப்பி இருந்தார்கள். அந்த அறையை விடவும் நான் மேலும் முழுமையாக நிரம்பி இருந்தேன்.

*ஒரு வருடத்தில் 365 தினங்களையும் நாம் 365 பறவைகளின் தினங்களாக அறிவிக்க நேர்ந்து விடக் கூடாது என்பதே என் சிட்டுக்குருவிகள் தின பிரார்த்தனை.

*அருவியை அல்ல .இன்றைக்கு அந்தப் பெண்ணை எனக்கு கும்பிடத் தோன்றுகிறது. என்ன துயரம் எனில் அருவி அங்கேயேதான் இருக்கும். மீண்டும் பார்த்து விடலாம். அந்தப் பெண்ணைத்தான் பார்க்கவே முடியாது.

*மழை பாருங்கள் மழையும் உங்களை பார்க்க விரும்புகிறது

வண்ணதாசன் சந்திக்கிற மனிதர்கள் யாவும், நேர்கிற அனுபவங்கள் யாவும் அன்பை மையமாக கொண்டவையாகவே இருக்கும் அல்லது தான் கண்ட காட்சிகளையும் அன்பாகவே வெளிப்படுத்துவார். அன்றாடம் நாம் கண்ட மனிதர்களை தவறவிட்ட காட்சிகளை மழைபெய்த ஈரநிலம் போல அவர்களின் மாண்பினை மிக அழகாக நமக்கு படம் பிடித்துக் காட்டுவார். சிறிய துளிகள் பெரு வெள்ளமாய் மாறுவதைப் போல சின்ன விஷயங்களின் மனிதர்கள் நம் மனதில் ஆலமரமாய் விருட்சமாய் எண்ணங்களை அன்பினை வளர்க்கிறார்கள் வண்ணதாசன் வழியே .!

தொடர்ந்து பகிர்வோம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment