செய்தியை எழுதிக் கொண்டிப்பதை விட,ஒரு செய்தியைப் படைப்பது சிறந்தது".
-வின்ஸ்டன் சர்ச்சில்
Well begun is half done.. என்பார் கிரேக்க மேதை அரிஸ்டாடில். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு நாடு முழுக்க கிளர்ச்சிகள் ஏற்பட்டாலும் தென்னிந்தியாதான் முன்னத்தி ஏராக இருந்து விடுதலைப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியாக இருந்தது.
தமிழகத்தில் தென்மாவட்ட கிளர்ச்சியை 1801ல் கர்நாடக உடன்படிக்கையின் படி, பாளையக்காரர் முறை முடிவுக்கு வந்த ஐந்தாண்டு காலத்தில் மீண்டும் தமிழகத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது.. ஆங்கிலேயருக்கு பெரும் தலைவலியாய் அமைந்தது.
பாளையக்காரர்களிடம் பணியாற்றிய போர்க்குணம் கொண்ட பல வீரர்கள் ஆங்கிலேயப் படையில் சேர்ந்திருந்தனர். வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் புதல்வரான மூத்த மகன் பட்டே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார். அரியணை இழந்த அரசர்கள்,குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேயரை பழிவாங்க பல முயற்சிகள் மேற்கொண்டனர். 215 ஆண்டுக்கு முன் இவர்கள் அனைவரும் சந்தித்த புள்ளிதான் ஜூலை 10ம் நாள் 1806ம் ஆண்டு
#வேலூர்க் கோட்டை
வேலூர் 1606 முதல் 1672 வரை விஜய நகர அரசின் தலைநகராய் இருந்தது. அவர்களை தொடர்ந்து பல்வேறு மன்னர்கள் வசம் இருந்து 1768ல் கிழக்கிந்திய கம்பெனியின் வசம் வந்தது. தென்னிந்தியாவில் முக்கிய ராணுவ மையமாக இருந்தது. 69 மற்றும் 19வது படை வகுப்பணியில் 1500 சிப்பாய்களும் 370 ஆங்கிலப்படை வீரர்களும் அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராணுவத்தின் பிரதான பிரிவில் ஆங்கிலப் படை வீரர்களும், துணைப்படையில் தமிழ்நாட்டு வீரர்களும் சிப்பாய் பணியில் இருந்தனர். இதில்தான் பல தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணியில் இருந்தனர்.
திப்பு சுல்தானின் மகன் சிறை வைக்கப்பட்டிருப்பதால் சுமார் 3000 பேர் வரை உள்ள விசுவாசிகள் வேலூரை சுற்றிக் குடியேறினர். சென்னையின் தளபதியாக இருந்த சர் ஜான் கிரடோக் என்பவர் ஐரோப்பிய படைவீரர்கள் போல தலைப்பாகை அணிய,மத அடையாளங்கள் இல்லாமலும், ஒரே மாதிரி காலுறை,கழுத்துப் பட்டை அணியவும் உத்திரவிட்டார்.1806 ஜூன் 9ம் தேதியிலிருந்து 14 வது படைப் பிரிவின் 40 சிப்பாய்கள் குல்லாய்களை அணிந்து கொண்டு வீதியில் சென்றபோது குல்லாயின் மேலிருந்த ரிப்பனை பார்த்து பொதுமக்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகினர்.
மாட்டுத்தோலினால் செய்யப்பட்ட பன்றிக்கொழுப்பு தடவப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்கள் மத்தியிலும், திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகள் இந்திய சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
#கிளர்ச்சிக்கான காரணங்கள்
*தென்னிந்திய புரட்சியில் கைது செய்யப்பட்ட பல கிளர்ச்சியாளர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான சதி வேலையில் ஈடுபட்டனர்.
*திப்பு சுல்தான் இறந்தபின் அவரின் 12மகன்களும் 6 மகள்களும் இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.படேல் ஹைதர், இளவரசர்கள் அப்துல் தாலிக், மொகைதீன், மைசுல்தீன், முகமதுயாசில், முகமதுசுபான், ஷேக்கர் அல்லா, சிராசுதீன், இமாலுதீன் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர்.
மூத்தமகன் பட்டேல் ஹைதர் மீண்டும் முஸ்லிம் ஆட்சியை மீட்க முடிவெடுத்தார்.
*துணைத்தளபதி அக்னியூ வடிவமைத்த குல்லாயை அணிவதை வீரர்கள் அவமானமாய் கருதினர்.
*ஆங்கிலேயரினால் பாதிக்கப்பட்ட ஆற்காடு, ஐதராபாத் நிஜாங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். வேலூரில் கிளர்ச்சி துவங்கியவுடன் ஐதராபாத்தில் கிளர்ச்சி செய்து ஆட்சியை மீட்க திட்டம்.
*படைப்பிரிவில் ஆங்கிலேயருடன் தமிழக படை பிரிவில் உள்ளோர் பாரபட்சத்துடன் நடத்தப்பட்டனர். ஊதியம், உயர் பதவிகள் மறுக்கப்பட்டதால் அவர்களும் கிளர்ச்சியில் ஈடுபட எண்ணினர்.
*மைசூரிலிருந்து வந்த மக்கள் ஆங்கிலேருக்கு எதிராக வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வந்தனர்
*திப்புவுடன் இருந்த அப்துல்லாகான், பீர்சாடா போன்றோர் பொம்மலாட்ட பிரச்சாரம் மூலம் ஆங்கிலேயர் மீதான வெறுப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினர்.
*குல்லாய் அணிய மறுத்தால் 900 சவுக்கடிகள் 29 சிப்பாய்களுக்கு வழங்கியதை பார்த்த மற்ற சிப்பாய்களுக்கெல்லாம் வெகுண்டெழுந்தனர்.
*கிளர்ச்சிக்கு பள்ளிகொண்டா மக்களும், வாலாஜாபாத், சித்தூர் சிப்பாய்களும் ஆதரவு கொடுத்தனர்.
#கிளர்ச்சி ஆரம்பம்
வேலூர் கோட்டையை ஜூலை 13 ம் தேதி கிளர்ச்சி செய்து கோட்டையையும், கருவூலத்தை கைப்பற்றி, திப்புவின் மூத்த மகன் பட்டே ஐதரை மைசூர் மன்னராக அறிவிப்பது, ஐதராபாத் நிஜாமின் ஆட்சியை மீட்பது என முடிவெடுத்தனர். ஆனால் ஜூலை 9ம் தேதி திப்புவின் மகள் திருமணம் நடந்ததில் ஆலோசனை நடத்தி, மறுநாள் 10ம் தேதி ராணுவ பயிற்சிக்கென வீரர்கள் கோட்டையினுள் தங்க வைக்கப்பட்டனர். கையில் கிடைத்த வெண்ணெய் போல் அதிகாலை 2 மணிக்கு பொறுமை காக்காமல் சிப்பாய்கள் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கோட்டையிலிருந்த துணைப்படை சிப்பாய்கள் பிரிட்டிஷ் படை வீரர்களை நோக்கி சரமாரியாக அதிகாலை ஐந்து மணி வரை சுட்டனர். இதில் தளபதி கர்னல் பென்கோர்ட்,மேஜர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் உட்பட 199 பேர் கொல்லப்பட்டனர். வெடிமருந்து கிடங்கு காவலர் சுடப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்திய சிப்பார்கள் ஷேக் காசிம்,ஷேக் காதம், ஷேக் ஹூசைன் போன்றோர் தலைமையில் ஆங்கிலேயர்களை சுட ஆரம்பித்தனர்.
மூன்றே மணிநேரத்தில் புரட்சியாளர்கள் கோட்டையை கைப்பற்றினர். கோட்டையில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு சிவப்பு பின்னணியில் பச்சை கோடுகள் மத்தியில் சூரியன் இருக்கும் திப்பு சுல்தானின் கொடி ஏற்றப்பட்டது. திப்புவின் மூத்த மகன் பட்டே ஹைதர் மைசூர் மன்னரென பிரகடனப்படுத்தப்பட்டார். அடுத்து என்ன செய்வதென போராட்ட வியூகம் இன்றி தொடர்ந்து கொண்டிருந்தது.குறிப்பிட்ட தேதிக்கு முன்பே கிளர்ச்சி துவங்கியதால் மைசூர், 1ஹைதராபாத்தில் செய்தி கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபடவில்லை. ஆயுதம் குறைவாகவே இருந்தது. வெடி பொருட்கள் தீர்ந்து கொண்டிருந்தது
எதிர்பார்த்தது போல் எல்லா சிப்பாய்களும் போராட்டத்தில் ஈடுபடாதது இன்னொரு பின்னடைவாய் இருந்தது. மக்கள் இதில் என்ன செய்வதென தெரியாமல் குழம்பிய மனநிலையில் இருந்ததால் அவர்களும் ஈடுபடவில்லை.
முள்ளை முள்ளால் எடுப்பது போல் கிளர்ச்சியை கிளர்ச்சி செய்து அடக்கினர். ஆற்காட்டிலிருந்த கர்னல் கில்லஸ்பி பெரும் படையுடன் காலை பத்து மணிக்கு விரைந்து வந்து கோட்டையை மீட்டார்.கிளர்ச்சி செய்த சிப்பாய்களை ஒடுக்கி அரை மணி நேரத்தில் தன் வசம் கொண்டுவந்து பலர் கொடூரமாய் கொல்லப்பட்டனர். ஆங்கிலேயர்கள் உயிரிழந்ததால் மேலும் கோபமான அதிகாரிகள் சிப்பாய்களை சுவறோடு சுவராக நிற்க வைத்து 500க்கும் மேற்பட்டோரை சுட்டனர். பலரை சிறையில் அடைத்தனர். ஜூலை 10ம் தேதி அதிகாலை துவங்கிய கிளர்ச்சி மறுநாள் நண்பகலுக்குள் முடிந்துவிட்டது.
#முடிவுக்கு வந்த முதல் கிளர்ச்சி
கிளர்ச்சிக்கான வியூகம் இல்லாமல் திட்டமிடாமல் செய்ததாலும், பட்டே ஐதரின் வழிகாட்டல் இல்லாததாலும் தோல்வியை தழுவியது. கிளர்ச்சியை ஆய்வு செய்தக் குழு சென்னை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு மற்றும் தளபதி சர் ஜான் கீட்டோவையும் பதவி நீக்கம் செய்தனர். புதிய ஆளுநராக சர் ஜார்ஜ் பார்லோ நியமிக்கப்பட்டார். ராணுவ கட்டுப்பாடுகள் விலக்கியதுடன் திப்புவின் குடும்பத்தை வங்காளத்துக்கு இடமாற்றம் செய்தனர். மதம் சார்ந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. கிளர்ச்சியின் போது கோட்டையைக் காப்பாற்ற போராடிய 69 பேரின் நினைவாக நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டது.
1857ம் ஆண்டு போராட்டத்திற்கு முன்னோடியாய் அமைந்தது வேலூர் கிளர்ச்சி. பாளையக்காரர்களை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற இப்புரட்சி விடுதலை உணர்வின் அடையாளமானது. கிளர்ச்சி தோல்வியடைந்தாலும் ஆங்கிலேயர்கள் மதம் சார்ந்த கொள்கைகளை கவனமுடன் செயல்படுத்த பாடம் கற்றனர்.
You cannot be great at the start,but
You have to start to be great
So making beginning is important
துவக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த வரிகளைப் போல 1857ம் ஆண்டு போராட்டத்தின் ஒத்திகையாகவும், சுதந்திர போராட்டத்தின் துவக்கப் புள்ளியாகவும் தமிழகத்தில் இக்கிளர்ச்சி எழுந்ததை எண்ணிப் பெருமைப்படுவோம்.
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment