Friday, 18 August 2023

அலெக்சாண்டர் ஹெய்ஜர்.


நீங்கள் அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்கள் என்றால் அதன் பொருள் நிறைய உழைத்துக் களைத்துவிட்டீர்கள் என்பதல்ல. உங்களை மலர்த்தும் செயல்களில், உத்வேகமூட்டும் காரியங்களில் மிகக் குறைவாக ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதே. வேலை நாள்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் அன்றன்று அவசரகதியில் முடிக்க வேண்டிய, ஆனால் பயனற்ற பணிகளில் மட்டுமே மேலதிகக் கவனம் செலுத்துகிறோம். நம்முடைய முதலாளிகள் நம்மைச் சக்கையாகப் பிழிவதற்கான புதுப்புது வழிகளைக் கண்டறிந்தவாறே இருக்கிறார்கள். இதன் காரணமாக எப்போதும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். தற்கணத்தில் வாழ்வதை மறந்துவிட்டு, அடுத்தக் குறிக்கோள், அடுத்தப் படிநிலை உயர்வு, அடுத்த வாகனம், அடுத்த வார இறுதி என வேறொன்றைத் துரத்தும் கனவிலேயே நேரத்தை வீணடிக்கிறோம். நண்பர்களே, நம் கைவசமுள்ள தருணம் நிகழ்கணம் மட்டும்தான். அது மட்டும்தான். 

நமது நேசத்துக்குரியவர்களோடு செலவழிக்கும் நேரத்தைவிடப் பணியில் அதிக நேரம் செலவிடுகிறோம். தாமதமாக வீடு திரும்பினாலும் நவீனக் கருவிகளோடு மல்லுக்கட்டி, மெய்நிகர் உலகில் பொய்யாக வாழ்ந்து, நம்மருகே இருக்கிற பிரியத்துக்குரியவர்களின் அன்பைத் தவறவிடுகிறோம். சோம்பிகளைக் காட்டிலும் மோசமான நிலையில் நாள்களைக் கடத்துகிறோம். அதன் பிறகு ஏதோவொரு பொழுதில், ‘வாழ்க்கை ஏன் சலிப்பாக இருக்கிறது?’ என அலுத்துக்கொள்கிறோம். அதற்குக் காரணம் வேலைப்பளுதான் என முடிவுகட்டுகிறோம். உண்மையாகவே பொருட்படுத்தத்தக்க விஷயங்களில், மனத்துக்கு நெருக்கமான பணியில் ஈடுபட்டால் நாம் சோர்வாக உணரப் போவதில்லை என்பதைக் குறித்து என்றேனும் சிந்தித்ததுண்டா? கடின உழைப்போ பணி அழுத்தமோ நம்மை வீழ்த்துவதில்லை நண்பர்களே! மனநிறைவைத் தராத பணியைச் செய்வதால்தான் நாம் எளிதில் அயர்ச்சியுறுகிறோம்.

- அலெக்சாண்டர் ஹெய்ஜர்.

No comments:

Post a Comment