Tuesday, 1 August 2023

ஓஷோ


ஜப்பானில் வாழ்ந்த, ஹோட்டே (Hotei) எனும் ஞானியை "சிரிக்கும் புத்தர்" என்று அழைப்பார்கள்.  அவர் ஜப்பானியர்களால் இன்று வரை  மிகவும் விரும்பப்படும் ஒருவர். ஆனால், அவர் தன் வாழ்நாளில் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.  

அவர் ஞானம் பெற்றவுடன், சிரிக்க ஆரம்பித்தார், யாராவது நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்கும் போதெல்லாம்,  அவர் மேலும் சிரிப்பார்.  அவர் சிரித்துக் கொண்டே கிராமம் கிராமமாகச் சென்றார்.

கிராமங்களில் வேடிக்கைப் பார்க்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடும், அவர் சிரிப்பார்.  சிறிது நேரத்தில் மெதுவாக -- அவரது சிரிப்பு மற்றவரையும் தொற்றி, கூட்டத்தில் யாரோ ஒருவர் சிரிக்கத் தொடங்குவார்கள், பிறகு வேறு யாராவது, இறுதியில் மொத்த கூட்டமும் சிரிக்க ஆரம்பிக்கும். காரணமே இல்லாமல் சிரிப்பது, அபத்தமானது என்று அவர்கள் உணர்ந்தாலும் சிரிப்பதை நிறுத்த முடிவதில்லை.

அதே சமயம், "இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? சிரிக்க எந்த காரணமும் இல்லையே."  என்று எல்லோரும் கொஞ்சம் கவலையும் அடைந்தார்கள். ஆனால் மக்கள் ஹோட்டேவின் வருகைக்காக காத்திருப்பார்கள். 

ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இவ்வளவு முழுமையுடன் சிரித்ததில்லை, அந்த சிரிப்புக்குப் பிறகு அவர்களின் ஒவ்வொரு உணர்வும் தெளிவாக இருப்பதைக் கண்டார்கள்.  அவர்களின் கண்கள் நன்றாகப் பார்க்க முடிந்தது, மனதுக்குள் ஒரு பெரிய சுமை மறைந்துவிட்டதைப் போல, அவர்களின் முழு உடலும் ஒளியாகிவிட்டது.

மக்கள் ஹோட்டேயிடம், "மீண்டும் திரும்பி வாருங்கள்" என்று கேட்பார்கள், அவர் சிரித்துக்கொண்டே வேறு கிராமத்திற்குச் செல்வார்.  

ஹோட்டே, ஞானம் பெற்ற சுமார் நாற்பத்தைந்து வருடங்கள் அவரது வாழ்நாள் முழுவதும், அவர் ஒரே ஒரு காரியத்தைச் செய்தார், சிரித்தல்.  அதுவே அவருடைய செய்தி, அவருடைய பிரசங்கம், அவருடைய வேதம்.

(கடைசியாக நாம் எப்போது வாய்விட்டு சிரித்தோம்?)

- ஓஷோ

No comments:

Post a Comment