Thursday, 26 November 2020

அந்தகாரம் விமர்சனம்*மணி



திகில், பேய் படம்னாலே சிரிப்பு படமாக்கிட்டாங்க.ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல திகில் படம். பேய் இல்ல அமானுஷ்ய படம்.ஆனால் பேய் படம் மாதிரியே கொண்டு போய் லெப்ட் இன்டிகேட்டர் போட்டு அமானுஷ்ய படமாய் மாறி இருக்கு. மூன்று மணி நேரத்தில் மூன்று கதை. கிரிக்கெட் கோச், ஆவிகளுடன் பேசும் மாற்றுத்திறனாளி,மனநல மருத்த்துவர் என மூன்று கதைகளும் சம்பவங்களுமே கதை.மூணு புள்ளி மூணு வரிசை போல் இல்லாமல் 16 புள்ளி 16 வரிசை கோலம் போட்டதுதான் சபாஷ் சொல்ல வைக்கிறது திரைக்கதை.

க்ளைமேக்ஸை 3முறை பார்த்தேன், ஆறு பார்த்தேன்னு சொல்லியிருப்பாங்க.ஆனா இந்த படத்தில ஓபனிங் சீனை இருமுறை பார்த்தால் தான் புரியும்.படத்தின் முடிச்சு இங்குதான் இருக்கிறது. முதல் அரை மணி நேரம் இந்திக்காரங்க பேசும் போது திருதிருனு முழிப்பது போல் இருக்கும்.அப்புறம் லைட்டா புரிய ஆரம்பிக்கும்.தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் அட்லிக்கு வாழ்த்துகள்.நல்ல படம் கொடுத்ததற்கு.

#கதை

கிரிக்கெட் கோட்ச் வினோத்தின் மொபைல் தொலைந்து விட்டதால் லேன்ட்லைன் போன் வாங்குகிறார். பழைய மாடல் போன் வந்த நாள் முதல் அறையில் ஏதோ வித்தியாசமாய் நடக்கிறது.முகம் தெரியாத அழைப்பு வந்து.. உன் ஆன்மாவை வெளியேற்றுவதாய் சொல்கிறது. காதலியிடம் இதை சொல்ல நம்ப மறுக்கிறார்.

பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான செல்வம் நூலகத்தில் பணிபுரிகிறார். இரவில் ஆவிகளுடன் பேசி கேசட்டில் பதிவு செய்து வைக்கிறார்.சிறுநீரக குறைபாட்டால் டயாலிஸ் செய்யும் அவருக்கு மாற்று சிறுநீரகம் கிடைக்க 80,000 தேவை.எனவே ஆறாவது மாடியில் சீல் வைத்த அறையில் பேய் ஓட்ட ஒப்புக்கொள்கிறார்.

படத்துவக்கத்தில் மனநல மருத்துவர் இந்திரனின் குடும்பத்தையும் கொன்றுவிட்டு அவரையும் சுட்டுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொள்கிறார் அவருடைய நோயாளி. 8 மாத கோமாவுக்கு பிறகு திரும்பும் மருத்துவரை மருத்துவ கவுன்சில் நிராகரிக்கிறது.மீண்டும் பழைய நிலைக்குத்திரும்ப தன் பழைய நோயாளிகளை சந்திக்கிறார். ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்.

இந்த மூன்று கதைகளும் இணையும் போது க்ளைமேக்ஸ்.மிகவும் சிக்கலாம கதைக்கு நேர்த்தியான திரைக்கதை.ஐந்தாறு கேரக்டர்களை வைத்துக்கொண்டு மூன்று மணி நேரம் கதை சொல்லுவது அசாத்திய திறமை.

#டின்ஜ்

*கிரிக்கெட் கோச் கேரக்டரில் செம பிட் அர்ஜுன்தாஸ்.you play the end என தனக்கு கற்றுக்கொடுத்த குருவின் வார்த்தையை கடைசி வரை தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் நச்.

*பார்வையில்லாதவராக வாழ்ந்திருக்கிறார் வினோத் கிஷன்.6 வது மாடி வரை செல்லும்போது, தனிமை வீட்டில் இருக்கும்போதும், நூலகத்தில் புத்தகத்தை தேடிக் கொண்டு வரும்போதும் ஜொலிக்கிறார்.

"தோல்விங்கிறது சாதாரண விஷயம்.
ஆனால் அதை நாம தைரியமாய் பார்க்கனும்"

"நாம பண்ணின தப்பிலிருந்து எவ்வளவு வேணா ஓடலாம். ஆனால் தப்பிக்க முடியாது.

"நான் கோபப்படுறேனு நினைக்கிற.. என்னோட பயந்தான் கோபமா மாறுது"

"இந்த உலகத்தில் பார்க்க எந்த தகுதியான விஷயமும் இல்லை"

"வழி தவறிப் போவதை விட வழி தெரியாம போவது எவ்வளவோ மேல்"என ஆங்காங்கே பளிச் வசனங்கள் பிரகாசிக்கின்றன.

*படத்தின் மற்றொரு பலம் இசையும் ஒளிப்பதிவும்.டெம்போ குறையாமல் இறுதி வரை இழுத்துக்கொண்டு போகிறது.

*டாக்டரான குமார் நடராஜன் பக்கா ஃபிட்.ஞாபகம் ஒரு அரக்கன்.அதை தட்டுற விதத்தில் தட்டணும்.அதைவிட முக்கியம் அதை தட்ட வேண்டியவன் தான் தட்டணும் வசனம் க்ளாஸ்.

*எல்லாம் தெரிந்த டாக்டரை ஒருத்தன் கொல்ல வர்றான். அதற்கான காரணத்தை சொல்லியிருக்கலாம். 

*பாட்டிலில் அடைத்த பேய் மீண்டும் வரவில்லை.போங்கடானு போயிருச்சா.

பொறுத்தார் நல்ல படம் பார்ப்பார் என்பது போல் 2-51 நிமிடம் பொறுத்தால் நல்ல படம் பார்க்கலாம்.
இயக்குநர் விக்னராஜனுக்கு பாராட்டுக்கள்.படம் முடியும் போது டைட்டிலில் தீபம் அணைவது நல்லாயிருந்துச்சு

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment