Friday, 1 September 2023

janakiraman


காந்தியச்சிந்தனை பக்கத்திலிருந்த பதிவு:

காந்தி வழக்கறிஞராக இருந்த போதும் குற்றவாளி என அறிந்த ஒருவருக்காக ஒருபோதும் வாதிட்டதில்லை. திருடனுக்காகப் பரிந்துபேசியதில்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக நியாயத்திற்கு மாறாக ஒரு போதும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டதில்லை

ஒரு முறை ஒரு திருடன் அவரிடம் தனக்காக வாதிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது திருட்டுத் தவறு என்று தெரிந்தும் ஏன் திருடுகிறாய் என்று காந்தி கேட்டார். அதற்கு அவன் நான் வாழ வேண்டும் என்று தீர்மானமான குரலில் பதில் சொன்னான். அதைக் கேட்ட காந்தி ஏன் என்று பதில் கேள்விகேட்டார்.

இந்த ஏன் என்ற கேள்வி எளிதானதில்லை.

நீங்கள் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சுயமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியது. அதன் பொருள் உங்கள் வாழ்க்கைக்கு என்ன பயன் இருக்கிறது. யாருக்காக, எதற்காக நீங்கள் உயிர் வாழுகிறீர்கள். வெறும் சுகபோகங்களை அனுபவிப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்பது அதற்குள் அடங்கியிருக்கிறது.

இந்த ஏன் என்ற கேள்விக்குத் திருடனிடம் பதில் இருக்காது. ஆனால் அந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் காந்தி அவன் மனசாட்சியைத் தொட முயல்கிறார்.

இதே கேள்வியைத் தான் தன்னைப் பின்தொடருகிறவர்களிடம் காந்தி கேட்டார். உங்கள் வாழ்க்கையின் பயனாக எதை நினைக்கிறீர்கள் என்பதே அவரது வினா.. அதற்கான பதிலாகவே அவரது பொதுவாழ்க்கை அமைந்திருந்தது. அதிகாரத்தாலும் மிரட்டலாலும் ஒரு மனிதனை நேர்மையானவனாக மாற்றிவிட முடியாது. அவன் மனசாட்சியோடு பேசி அவனை உணரச்செய்வதே வழி என்று நினைத்தார் காந்தி. அது அதிகமான எதிர்பார்ப்பு தான்.

மந்தை மனநிலை கொண்ட மக்களிடம் மனசாட்சியின் படி நடந்து கொள்ளச் சொன்னது விந்தையானது. பெரும்பான்மை மனிதர்களுக்கு தாங்கள் தவறு செய்கிறோம் என்ற சுய உணர்வு கூட இருப்பதில்லை. அதைவிடவும் ஏதாவது காரணம் சொல்லி பெருந்தவறுகளை கூட நியாப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். குற்றம் சொல்லும் மனநிலை பெருகி இருக்கிறதேயன்றி மாற்று செயல்பாடுகள் குறைவே

இந்திய மக்களிடம் காந்தி உண்மையில் மிக அதிகமான எதிர்பார்ப்பு கொண்டிருந்தார். அவர்கள் மதச்சண்டை. இனச்சண்டை என மோதிக் கொள்ளும் போது அதற்குத் தண்டனையாகக் காந்தி தன்னை வருத்திக் கொண்டார். அவரது உண்ணாவிரதங்கள் யாவும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்தவையே.

தன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் போது காந்தி மனம் வருந்தினார். எங்கே தவறு நடக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொண்டார். தன் பக்கம் தவறு இருந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்

அவர் இந்தியர்களை ஏமாற்றவிரும்பவில்லை. பொய் வாக்குறுதிகள் தரவில்லை. அவர்களின் பலத்தை, வலிமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார்.

காந்தி தனது முடிவுகளின் மீது பிடிவாதமான பற்றுக் கொண்டிருந்தார். அதே நேரம் விவாதத்திற்கான வாசலை எப்போதும் திறந்தே வைத்திருந்தார். தான் மேற்கொள்ளும் முயற்சி பிழை என்று உணர்ந்தால் உடனே கைவிட அவர் தயங்கியதேயில்லை.

No comments:

Post a Comment