புத்தகக் கடைக்கு போன போது கண்ணில் பட்ட அந்த குட்டி புத்தகம் தள்ளுபடியில் கிடைத்தது.
தனிமையில் இருக்கும் ஒரு சிறுவன் ஒரு பெருச்சாளியை சந்திக்கிறான். இருவருமாக தூரத்தில் தெரியும் காட்டை நோக்கி நடக்கிறார்கள். வழியில் பனியில் கட்டிப் போடப்பட்டிருக்கும் ஒரு நரியை சந்திக்கிறார்கள். எலி கயிற்றை அறுத்து நரியை விடுவிக்கிறது. மூவருமாக காட்டுக்குள் போகிறார்கள். அங்கே ஒரு குதிரையை சந்திக்கிறார்கள். அது கனிவு நிறைந்ததாக இருக்கிறது. நால்வருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவாகிறது. அவர்கள் மணி ஸார் பாணியில் சுருக்கமாக பேசிக்கொள்கிறாரக்ள். சொல்லப்போனால் வாழ்க்கையில் நிறைய அடிபட்டிருப்பதால் நரி அவ்வளவாக பேசுவதில்லை. மற்ற மூவரும் பேசுவதுதான். பெரும்பாலும் ஒன்லைனர்கள். கூடவே ஆசிரியர் வரைந்த கோட்டோவியங்கள் என்று சின்னஞ்சிறிய புத்தகம்.
”இருப்பதிலேயே மிகப்பெரிய டைம் வேஸ்ட் எது?”
”உன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதுதான்” என்றது எலி
“நமக்கு நடக்கும் சம்பவங்களுக்கு நாம் எப்படி எதிர் வினையாற்றுகிறோம் என்பதுதான் நமக்கு இருக்கும் சுதந்திரங்களில் முக்கியமானது” என்றது எலி
”பெரும்பாலும் நாம் மன்னிக்க மிகவும் கஷ்டப்படும் நபர் நாமாகத்தான் இருக்கிறோம்”
”நீ செய்த செயல்களிலேயே ரொம்ப தைரியமான செயல் எது?” என்றான் சிறுவன்
“உதவி. உதவி கேட்டதுதான்” என்றது குதிரை
“நீ ரொம்ப வலிமையாக உணர்ந்தது எப்போது?”
“என் பலவீனத்தை வெளிக்காட்ட துணிந்த போது”
முழு புத்தகத்தையும் பத்து நிமிடத்தில் முடித்து விடலாம். அல்லது ஒவ்வொரு ஒன்லைனருக்கும் பத்து நிமிடம் எடுத்து நம் வாழ்வியலோடு கனெக்ட் செய்து நிதானமாக பொறுமையாகவும் படிக்கலாம்.
தனியாக இருப்பவர்களுக்கும், கூட்டமாக இருந்தாலும் தனிமையாக உணர்கிறவர்களுக்கும், நட்பை மதிப்பவர்களுக்கும், கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மெய்யழகன் படம் பிடித்தவர்களுக்கு இந்த புத்தகம் பிடிக்கும்.
The Boy, the Mole, the Fox and the Horse - Charlie Mackesy
No comments:
Post a Comment