கற்றதும் பெற்றதும்-37
*மணி
அசையும் தும்பிக்கை,நிமிர்ந்த நடை
பிறை நெற்றி,கோபப்பார்வை
அகல அடி,பெரிய கழுத்து
கலைக்கப்பட்ட கூடுபோல்
தேனீக்கள் மொய்க்கும் மதநீர்
கட்டப்பட்ட இடத்திலேயே
அசையும் இளம் யானை
-புறநானூறு
யானைகள்
-பேராசிரியர் கே.கே.ராஜன்
பொதுவாக யானை என்றவுடன் நினைவுக்கு வருவது கம்பீரம். யானையை தடவிப்பார்த்த விழி இழந்தவர்கள் போலத்தான் நாமும் யானை குறித்து தெரிந்து வைத்திருப்பதும்.அறம் சிறுகதையில் வரும் யானை டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியை படித்தபோது ஓரளவு தெரிந்தது. யதெச்சையாய் கிடைத்த இப்புத்தகம் யானை குறித்த வாழ்வியலை தெளிவுபடுத்தியது. எனக்குப்புதிதாய் தெரிந்த சில பதிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்
#பொதுவாக யானைகள் ஆப்பிரிக்க யானை,ஆசிய யானை என இருவகைப்படுத்துகின்றனர். ஆப்பிரிக்க யானைக்கு முதுகின் நடுவில் குழிந்த வளைவு,காது பெரிதாகவும்,ஆசிய யானைக்கு இது போல் இருக்காது.
#கூட்டுவாழ்க்கை
பெண்யானைகளே கூட்டத்தை வழிநடத்திச் செல்லும்.பத்து வயது ஆனவுடன் கூட்டத்திலிருந்து ஆண்யானைகள் விலகும்.
மனிதர்களைப் போன்றே ஒரு ஆண்யானைக்குட்டி தனக்கு பின் பிறந்த குட்டியை வெறுக்கும். பெண் குட்டி அவ்வாறு வெறுப்பதில்லை.யானை பொதுவாக பலவகைத் தாவரங்களை உண்ணும். ஒரு தாவரத்தை மட்டும் உண்டு கொண்டிருந்தால் அது தீர்ந்து போய்..அதை தேடியே காலம் போய்விடும் என்பதால்.
#தும்பிக்கை
மூக்கும் மேலுதடும் இணைந்த நீளமான அற்புத உறுப்பு தும்பிக்கை.ஒரு பெரிய வரிப்புலியை அப்படியே தலைக்குமேல் தூக்கி அடிக்கும் வலிமை உண்டு.தும்பிக்கை 140 கிலோ எடை.12லிட்டர் தண்ணீரை உறிஞ்சும்.புதைமணலில் சிக்காமல் இருக்க தரையை தட்டியபடி நடக்கும்.தும்பிக்கையில் காயம்பட்டாலோ,துண்டிக்கப்பட்டாலோ இறந்துவிடும்.
#மனிதனுக்கு வலதுகை இடதுகை போல யானைக்கும் வலத்தந்த யானை,இடத்தந்த யானை என இருவகை.எது அதிகம் பயன்படுத்துகிறதோ அது "மாஸ்டர்டஸ்க்" .இதில் வன்தந்தம்,
மென்தந்தம் என உண்டு.
#யானையின் பற்கள் வாழ்நாள் முழுவதும் ஆறுமுறை முளைக்கின்றன முறையே வயது- 2,6,9,20,60 வயதுக்குப் பின் இறுதியாக முளைக்கும்.இதன் பின் பொக்கை வாயுடன் இருக்கும்.ஒரு பல்லின் எடை 5கிலோ.ஒரு பல் பல பற்கள் இணைந்தது ஆகும்.
#காதுகள்
யானையின் காதுமடல் பெரியவை.ஆப்பிரிக்க யானையின் காது அகன்றவை.ஆசிய யானை 60செ.மீ,30செ.மீ நீள அகலமுடையது.காதின் பின்புற பள்ளத்தில் கால்விரலை பதித்துதான் பாகன் யானைக்கு கட்டளையிடுவான்.காதுமடல் பொதுமடல் பொதுவாக ஆறு அல்லது ஏழு ஆண்டு விறைப்பாக இருக்கும்.
பின்வெளிநோக்கி மடியும்.
வெப்பநாட்ளில் காதை விசிறிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் இரத்தம் குளிர்ச்சியடைந்து உடலுக்குள் செல்கிறது.யானைக்கு மருந்து செலுத்த யானையின் காதுமடலைத்தான் மருத்துவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.ஏனெனில் இங்குதான் இரத்த குழாய் புடைப்பு காணப்படும்.
யானையால் கால்களை உந்தி நீரில் நன்றாக நீந்தும்.சாதாரணமாக மணிக்கு 6கி.மீ நடக்கும்.வேகமாக நடந்தால் 40கிமீ வரை நடக்கும்.
#கண்கள்
யானைக்கு சூரிய வெளிச்சம் குறைவான நேரத்தில் கண்கள் நன்றாய்த்தெரியும்.
பகலில் சூரிய ஒளி கூசுவதால் பார்வையில் தெளிவிருக்காது.அதனால் நிழலில் ஓய்வெடுக்க விரும்பும். யானைக்கு பசித்து கொண்டே இருப்பதால் எதையாவது தின்று கொண்டேயிருக்கும்.அதனால் தான் இன்றும் யானைப்பசி என்பார்கள்.25முதல் 150கிலோவரை உண்ணும்.யானை தண்ணீர் அதிகம் குடிக்கும். ஒரு நாளில் 100-200 லிட்டர்.நீர்நிலை வற்றும்போது நீர்ப்படுக்கை அடியில் மோப்ப சக்தியில் உணர்ந்து தும்பிக்கையால் மண்ணில் துவாரமிட்டு உறிஞ்சும். பெண்யானை 9வயதிலும், ஆண் யானை 12வது வயதிலும் இனவிருத்தி செய்யத் தயாராகின்றன்.112 நாட்களுக்கு ஒருமுறையே பெண் யானைக்கு ovun உற்பத்தியாகும்.
#மதம்பிடித்தல்
ஆண்யானை அமைதியற்று அட்டகாசம் செய்துகொண்டு திரிதலே மதம்பிடித்தல்.பெண் யானைக்கு மதம் பிடிப்பதில்லை. யானையின் நெற்றிக்கும் கண்ணுக்கும் இடையில் இருபக்கத்தில் சுரப்பி இருக்கும். இதிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் சுரக்கும்.இது 15வது வயதில்தான் முதன்முதலில் மதம்பிடிக்கும்.
வயதாகும்போது இன்னும் அதிகமாக சுரக்கும். மதம் பிடிப்பதை 40நாட்களுக்கு முன்பே அறியலாம்.காது அதிகம் விசிறும்.மதம் பிடித்த காலத்தில் யானையின் கோபம் முதலில் பாகன் மேல் செல்லும். பாகன் அடித்தது. கீழ்ப்படிய நேரிட்டது.. எல்லாம் மனதில் எழுந்து வெறுப்பை ஏற்படுத்தும்.
#குறைய வழி
உண்ணும் உணவை வேண்டாவெறுப்பாக சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படும்.பாகன் அருகில் அமர்ந்து கனிவுடன் அன்பான வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பின்பு நன்றாக குளிப்பாட்ட வேண்டும். நீர் உடம்பில் படப்பட மதம் குறையும். ஆனால் அது கத்தி முனையில் நடப்பதைப் போன்று எந்த நிமிடமும் யானை சீறும். உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுக்கலாம்.தற்காலத்தில் புரோமைட் கொடுக்கிறார்கள்.மதம் பிடிக்கும் நாட்களை எட்டு நிலைகளாக பிரிக்கிறார்கள்.
#யானை பிடித்தல்
காட்டில் பிடிபட்ட யானை ஒரு நாள் முழுவதும் உணவு, நீர் இன்றி பட்டினி போட்டு இருப்பார்கள். யானைக்கு நல்ல பசி எடுக்கும். அப்போது பாகன் கொஞ்சம் கொஞ்சமாக அதன் அருகில் போய் அதன் கன்னத்தை தடவி கொடுத்து உணவு கொடுப்பான். அப்போது கட்டளைக்கு கீழ்படிய ஆரம்பிக்கும். ஒவ்வொரு கட்டளையையும் செய்யும்போது உண்பதற்கு வாழை, அரிசி, கரும்பு கொடுப்பதால்.. விரைவில் குறிப்பறிந்து யானை ஒவ்வொரு கட்டமாக செய்துவிடும்.
# யானைக்கு கருமை நிறம் தரும் மெலனின் என்ற நிறமி.. சரியாக அமையாவிட்டால் தோல் வெண்ணிறமாகவோ, வெள்ளை புள்ளிகள் நிறைந்ததாக மாறிவிடும். இதை வெள்ளைபுள்ளி நிறைந்ததாக மாறுவதை வெள்ளை யானைகள் என்பார்கள்.இதன் உடல் முழுவதும் வெள்ளையாக இருப்பதில்லை. வெள்ளை புள்ளிகள் சாம்பல் புள்ளியோ இருக்கும். கண்கள் சிவப்பாக இருக்கும். வெள்ளை யானையின் சிறுநீர் புனிதமாக கருதப்படுகிறது. தாய்லாந்து அரண்மனையில் இதனை வைத்திருப்பதை கெளரவமாக கருதுகிறார்கள்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment