Thursday, 27 September 2018

கற்றதும் பெற்றதும்-47

கற்றதும் பெற்றதும்-47
*மணி

"அடிக்கடி வந்து நம்முடன் ஒரு ஞாபக யுத்தம் செய்வதுதான் உயிருள்ள கவிதை
-பாலா

#கரும்பலகைக்கு அப்பால்
-பழ.புகழேந்தி

கவிதைக்கு பொய்யழகு என்பார்கள்.ஆனால் யதார்த்த கவிதைகளுக்கு இது பொருந்தாது. ஒரு இயலாதவனின் வாழ்வியலை, ஒரு நிகழ்வை போட்டோ எடுப்பது போல் வார்த்தையில் படம்பிடிப்பது., மெல்லிய இழையோடும் சோகத்தை வார்த்தையில் பதிவு செய்வது என பல வகைகளில் எழுதலாம்.இக்கவிதை தொகுப்பு முழுவதும் பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்தும் யதார்த்த உலகில் பயணிக்க வைக்கும். இவரின் ஒரு சில கவிதை மட்டும் ஃபார்வேர்டு செய்வோரே மற்ற கவிதையும் பகிருங்கள்.

#ஒவ்வொரு வருடமும் புதிது புதிதான மாணவரை சந்திக்கும் வாய்ப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் கிடைக்கும். அவர்களிடமிருந்து அனுபவத்தை பெறுகிறார்.இதுவே அவரை மேலும் மேலும் பணியை மெருகேற்றுகிறது.

அப்படி ஒரு நிகழ்வில்

"ஆசிரியப் பணியில்
முதல் முறையாய்
அந்த இரண்டாம் வகுப்பில்..

பாடம் நடத்துகையில்
ஒரு சிறுமியின் அழுகை.
காரணம் கேட்டேன்.

"அப்பாவின் ஞாபகம்" என்றாள். "ஊருக்கு போயிருருக்காரா?
"இல்ல, போன வருஷம் செத்துப் போயிட்டார்

ஞாபகம் ஏன் திடீரென்று?"
உங்கள் சட்டை மாதிரி
அவரும் போட்டிருப்பார்"

சட்டையின் கோடுகளுக்குள்
ஒரு ஞாபகத்தின் சிறையிருப்பு கழற்றிப் போடும் வரை கனமாகவே இருந்தது
உடம்பில்.

#ஒரு நாளின் முடிவில் இருக்கும் வகுப்பறையை பார்த்தால் கிழிந்த காகிதங்கள் நிறைந்திருக்கும்.

அப்போது இந்த வரியை நினைத்துகொள்வேன்

"கரும்பலகை அழிப்பதற்காக காகிதம் கேட்டேன்
கிழித்துக் கொடுத்தான்
நேற்று எழுதிய பாடங்களின் பக்கங்களை..

இப்படித்தான்
வீணாய்ப் போகிறது
பலகையிலும் பதியாமல் பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்.."

#தண்டனைகள் தகுதி பார்த்தே அளிக்கப்படுவதாய் வரி

"சீருடை அணிய வில்லையென்றும் காலனி போடவில்லையென்றும் வகுப்பிற்கு வெளியே
இருவர்..

வகுப்பிற்குள்ளே
வண்ண உடையோடு ஒருவன் வெற்றுக்காலோடு ஒருவன்..
பிறந்தநாளும்
சபரிமலைக்கு மாலையும் பின்னணிகள் அனுமதிக்கு

தவறுகளுக்குப் போர்வைகள் இருப்பின்
தீண்டுவதில்லை தண்டனைகள்."

#சண்டையிடுவதிலும் சேர்ந்து கொள்வதிலும் குழந்தைகள் முன்மாதிரிகள்

பிள்ளைகளே
பாடம் ஆகிறார்கள் சிலபோது.
பக்கம் இருப்பவன் மேல் வெறுப்பும் மேலிட்டால் வேரறுப்பதில்லை

காய் விடுதலோடு
நின்று விடுகிறார்கள்
பழம் விடுவதற்கு வசதியாய்!

#கேள்வி தாளின் பின்புறம் வரையப்பட்ட ஓவியத்தில் பூர்த்தியாகி இருந்தது
அவன்
தேர்வு முடித்த
மிச்ச நேரம்

#தன்னை அழைத்து வராத கோபத்தில்
நண்பனின் மிதிவண்டியில்
காற்று பிடுங்கியவன்
முழு மதிப்பெண் பெற்றான்.
இன்னா செய்தாரை..
திருக்குறள் எழுதி.

#தந்தையின் கையெழுத்தை
தானே போட்டு வரும்
மாணவனின்
தேர்ச்சி அட்டை
சான்றாக இருக்கிறது
தேர்ச்சியடையாத
பெற்றோருக்கு

#சிவப்பு மையால் தான்
திருத்த வேண்டி இருக்கிறது

#குற்றவுணர்ச்சியில்
குறுகிப் போகிறது மனசு மாணவர்களின்
விடைபெறு விழாவில்.

யாரோ சமைத்ததைத்தான் பரிமாறினோம்
சமைக்கச் சொல்லித் தரவே இல்லை இறுதிவரை.

#முகத்தோடும் முகவரியோடும் எல்லார் கழுத்திலும்
தொங்குகிறது
அடையாளஅட்டை
தொலைந்து போகப் போகிறவர்கள்
என்பதற்கான
அடையாளமாய்

#கற்றதும் பெற்றதும்

மிகவும் நுட்பமாய் இருக்கும் ஒவ்வொரு கவிதையும் சுவையுடையதாய் இத்தொகுப்பு முழுவதும் இருக்கிறது. எதுகை மோனை பற்றி கவலை கொள்ளாமல் எளிய மொழியில் சொன்னால் எல்லா அழகியலும் யதார்த்த உண்மைகளும் இயல்பாய் தொடுவதை காண முடிகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment