கற்றதும் பெற்றதும்-38
*மணி
ஆசிரியப் பணி என்பது கற்றுக் கொடுப்பது அல்ல.,
கற்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது..!
- ஆசிரியர்தினம்
கனவு ஆசிரியர்
-துளசிதாசன்
"நீ கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது உன் குரு உன் முன்னால் தோன்றுவார் என்கிறது ஜென். கற்பதற்கு தயாராய் இருப்பவனையே தேடிக் கொண்டிருக்கிறார் ஆசிரியரும்.12 ஆண்டுகள் படித்து முடிக்கும்போது நம் நினைவில் உள்ள ஆசிரியர்கள் ஒருசிலரே.அப்போது கண்டிப்புடன் நன்கு பாடம் நடத்தியவரே நம் கண்முன்வருவார்.
ஏனெனில் அவர் எனக்கு பின்னால் பயன்படும் என்பதை முன்பே சொல்லிக்கொடுத்தவர்.
அப்போது வெறுத்தாலும் இப்போது நன்றியுடன் நினைக்கிறோம்.
மற்றொருவர் நம்மை சிந்திக்க கற்றுத்தந்தவர். மற்றவர் ஜாலியாகவே வந்து போயிருப்பார்.அப்போது நன்றாய் இருந்தாலும் பிற்காலத்தில் இவர் நினைக்கப்படுவதேயில்லை.
இதில் பெரும்பாலும் ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை நினைவு கூறமாட்டோம்.பெரும்பாலானோர் மறந்திருப்பர் அல்லது சமூக பிம்பத்தில் அவரை சொல்வது ஒரு மாயத்தோற்றத்துக்காய் ஒப்புக்குச் சொல்வோம்.பள்ளிப்பருவ நாட்கள் இனிமையானது.இதனை பிரபலங்கள் பகிரும் கட்டுரைகள் இவை
#பிரபஞ்சன்
சுமார் 100 ஆசிரியர்கள் என்னை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான்கடன்பட்டிருக்கிறேன்.
நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்க மாட்டார்கள். மாணவர்களின் முதல் முன்மாதிரி ஆசிரியர்கள் தான். அவர்களின் நடை உடை பாவனை போன்றவற்றை மாணவர்கள் கவனிக்கிறார்கள். உலக ஞானத்தை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்பவர் ஆசிரியர்கள். கற்கத்தொடங்குகிறவன் மாணவன். கற்றுக் கொண்டே இருப்பவன் ஆசிரியன்.தாம் கற்க இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர்கிற மனம் இருந்தால் கூட போதுமானது. அந்த வகையில் இருக்கும் அத்தனை பேரும் சிறந்த ஆசிரியர்களே.
#பொன்னீலன்
பள்ளி ஆய்வுக்காக பொன்னீலன் அவர்கள் ஒரு மேல்நிலை பள்ளிக்கு சென்றபோது ஏழாம் வகுப்பு c' பிரிவு ஒன்று இருந்தது. மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் சத்தத்துடன் இருப்பதை பார்த்து உள்ளே செல்கிறார். வகுப்பறையில் (மேப்) இந்திய வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் மாணவர்கள் விமானத்தில் செல்வது போலவும் ரயிலில் செல்வது போலவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று கொண்டிருப்பது போன்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வகுப்பறைச் சூழல் மிகவும் ரம்மியமாகவும் பூரிப்புடன் இருந்ததாக பதிவு செய்கிறார்
#தியோடர் பாஸ்கரன்
அச்சத்தை தூண்டாமல் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் அச்சமின்றி பேச வேண்டும். ஜான் ஹோல்ட் எழுதிய "குழந்தைகள் எவ்வாறு கற்கின்றன" என்ற நூல் பரிந்துரை செய்கிறார். நம் பள்ளி கல்வித்துறை சிந்திக்கும் திறனை ஒடுக்குகிறது. கற்றல் இயற்கையாக வருவது. இது பள்ளியால் சீரழிப்பதாக ஜான் ஹோல்ட் கூறுகிறார். கற்றுக்கொள்ளும் திறனை சிந்திக்கும் பழக்கத்தை தரும் கல்வி முறையை வலியுறுத்தும் கல்வியே சிறந்தது என்கிறார்
#ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப
"ஆசிரியர் பணி என்பது மற்ற வேலைகளை போன்ற இன்னொரு வேலை அல்ல. ஊதியத்தை மட்டும் கருதும் உழைப்புமல்ல. விரும்பிச் செய்வது.இன்னும் சொல்லப்போனால் விரும்புகிறவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது.
கற்பித்தலில், பயிற்றுவித்தலில் இயல்பான ஈடுபடுள்ளவர்களே சிறந்தவர்களாக உருவாக முடியும். நல்லாசிரியர்கள் உண்மையில் ஆசிரியராக வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஆசிரியராக வேலை பார்க்கிறார்கள். நல்லாசிரியர் உண்மையில் ஒரு வள்ளல். "கேடில் விழுச்செல்வம் கல்வி" என்ற வள்ளுவன் வாய்மொழியும் "செல்வத்தின் பயன் ஈதல்" என்ற நக்கீரர் வாழ்வியலும் ஒரு சிறப்பு.செல்வத்தின் பயன் அதை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் ஈதலில்தான் இருக்கிறது என்ற உணர்வே ஈதலின் இயல்பு என்கிறார்.
நல்ல ஆசிரியர் பாடத்தை மாணவர்கள் நோக்கில் பார்வையில் அணுகுகிறார். மாணவரை புரிந்துகொள்ளாத ஆசிரியரால் எதையும் புரியவைக்க முடியாது. விளைநிலம் புரியாதவன் விவசாயி அல்ல. கற்கும் திறன் எல்லாம் அனைவருக்கும் சமமாக இருப்பதில்லை. அவர்களின் திறன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு.
#மாடசாமி
"வாடிய முகத்தை வாசிக்கத் தெரிந்த ஆசிரியர்கள்தான் வழித் துணையாக நின்று வழி காட்ட முடியும். ஏரி முழுக்க ஆசிரியரே ஒற்றை படகு செலுத்துவதை யார் விரும்புவார். கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்காக மாணவர்கள்? மாணவர்களுக்கான களமாக வகுப்பறை ஆனதும் புதிது புதிதாக மாணவர்கள் வெளிப்படுவார்கள்.புற்றுக்குள் கிடந்ததெல்லாம் சீறிப்பாயும். ஒரு மாணவி கண்டுபிடிக்கப்பட்டால் வகுப்பறையில் புது நட்சத்திரம் மின்னும்.ஒரு மாணவன் ஆற்றல் கைதட்டல் பெற்றால் வகுப்பறை நாதமயமாகும்.
உலகம் அறியாத அதிகம் பாராட்டாத பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். திருட்டு பழக்கம் உள்ள குழந்தைகளை லாவகமாக சத்தமின்றி கையாண்டு வழிக்கு கொண்டு வந்த ஆசிரியர்களைக் கண்டு வியந்திருக்கிறேன். கேமராவுக்குள் சிக்காத அபூர்வமான ஆசிரியர்கள் பலர் எங்கெங்கோ மூலைமுடுக்குகளில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுமைப்பண்பு களத்தில் உருவாவதைப் போல பயிற்சியில் உருவாவதில்லை. மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நிகரானவர் யார்? ஒருவரும் இல்லை.
#ச.தமிழ்ச்செல்வன்
சுந்தர ராமசாமி தன்னுடைய "குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலில் "சரஸ்வதி கடாட்சம் பெறாத குழந்தை என்று உலகில் எந்த குழந்தையும் இல்லை. நமக்கு படிப்பு வராது என்று சில குழந்தைகள் அவநம்பிக்கை கொள்ளச் செய்வதை வேறருப்பவர் ஆசிரியர். கல்வி முறையில் கோளாறு இருக்கும் போது ஆசிரியரை மட்டும் குற்றவாளியாக்கி பேசுவதில் நியாயம் இல்லை.மேலும் சோவியத் கதை ஒன்றை குறிப்பிடுகிறார்.
" தினமும் கதறி அழுதபடி அம்மாவைப் பிரிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை., மௌனத்தில் அமிழ்கிறது. நாட்கள் செல்லச் செல்ல வகுப்பில் ஆசிரியை மெல்லமெல்ல உரையாடி வீட்டில் அம்மாவிடம் பேசுவதைப் போலவே தன்னிடம் பேச வைக்கிறார். அக்குழந்தை தனக்கு இரண்டு அம்மாக்கள் கிடைத்துவிட்டார்கள் எனச் சொல்லி முடிகிறது கதை.
தான் பத்தாம் வகுப்பு படித்தபோது தன் அறிவியல் ஆசிரியர் சபரிமலைக்கு மாலை இட்டுச் செல்வதும் மகரஜோதியை நம்புவதும் முரண் அல்லவா? என்று அறிவியல் ஆசிரியர்களை சாடுகிறார்
#ஆயிஷா இரா.நடராசன்
வகுப்பறைச் சூழலை சிலாகித்து பதிவு செய்துள்ளார். ஒரு அறிவியல் ஆசிரியரின் பணி பாடங்களை வெறுமனே நடத்துவது அல்ல., மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விடை தேடும் மனம் ஒன்றை மாணவர்க்கு விதைத்தலே என அவர் தன் ஆசிரியரை நினைவு கூறுகிறார். மேலும் "கற்றலுக்கான சூழலை வகுப்பில் உருவாக்கு.. ஒருபோதும் கற்பிக்காதே.. குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முடியாது. அவர்களை தானே கற்க அனுமதிக்க வேண்டும். அதுவே ஒரு ஆசிரியரின் பணி என்கிறார்
#எஸ்.ராமகிருஷ்ணன்
ஒரு ஆசிரியரை ஏன் நமக்குப் பிடிக்கிறது? ஏன் வெறுக்கிறோம்? வெறும் பாடம் சொல்லித் தரும் விஷயத்தால் ஏற்படுவதில்லை.
மாணவர்களின் அறிவுத்திறனை தனித்துவத்தை மேம்படுத்துவார்கள். இனியவர்களாக இருந்தார்கள். "பொறுமைதான்" ஆசிரியர்களுக்கான அடிப்படை பண்பு. மாணவன் எவ்வளவு முறை கேட்டாலும், புரிந்துகொள்ளாமல் போனாலும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் ஆசிரியர் பொறுமையாய் அணுக வேண்டும்.
அடுத்த பண்பு அக்கறை. மாணவன் எப்படி படித்தால் எனக்கு என்ன? என இருக்காமல் அவனது கற்கும் திறனை மேம்படுத்த வேண்டும். வகுப்பறை என்பது ஒரு வழி சாலை அல்ல இரு வழிச்சாலை. மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியர்களும் புதியன கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள் தொடர்ந்து வாசித்து தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கலீல் ஜிப்ரான் சொல்லுவார் "உங்கள் பிள்ளைகளை படித்த ஆசிரியரிடம் அனுப்பாமல், படிக்கின்ற ஆசிரியரிடம் அனுப்புங்கள்" என்று.
மாணவரை ஒரு சமூக மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களின் கனவுகளை ஆசிரியர்களை உருவாக்குகிறார்கள். அதற்கு தூண்டுகோலாகவும் இருக்கிறார்கள்."கற்றுக்கொள், கற்றுக்கொடு,கற்றதைச் செயல்படுத்து.!
#இவர்கள் தவிர த.வி வெங்கடேஷ், இறையன்பு,பவா செல்லதுரை, கீரனூர் ஜாகிர்ராஜா,
துளசிதாசன் போன்றோரும் தம் பள்ளிப்பருவம் மற்றும் ஆசிரியர்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.
#உலகில் புனிதமான தொழில் இரண்டு. ஒன்று மருத்துவர்,இரண்டு ஆசிரியர்.
ஒருவர் மனிதனை பிணமாகாமலும்,மற்றவர் நடைபிணமாகாமல் பார்த்துகொள்வார்
-வெ.இறையன்பு
ஆசிரியர்களை போற்றுவோம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment