உலக அரசியலில் மிக முக்கியமான வினையாற்ற வல்லது மொழிபெயர்ப்பு.
உலகையே உலுக்கிய ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது எனச் சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை....
இரண்டாம் உலகப் போர் உச்சத்திலிருந்த சமயம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பலம் பொருந்திய நாடுகள் ஒன்றிணைந்து எதிரி நாடான ஜப்பானுக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன. ``மொத்தமாக சரணடையாவிட்டால் உடனடியாக ஜப்பான் முற்றிலும் அழிக்கப்படும் " என்று பொருள் கொள்வதாக இருந்தது அந்த இறுதி அறிவிப்பு.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று திட்டவட்டமாக ஜப்பான் அரசு முடிவெடுக்காத நிலையில், பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கிறார் ஜப்பான் அதிபர் சுசூகி கண்டரோ.
அணு குண்டு வெடிப்பு
பேட்டியில், இந்த அறிவிப்பு பழைய அறிவிப்புகளிலிருந்து பெரிதாய் மாறுபடவில்லை என்று கூறியவர், தற்போதைக்கு ஜப்பான் அரசு இவ்விஷயத்தில் எதுவும் பதிலளிக்காமல் அமைதி காக்கிறது (Withholding comment) என்று பொருள்படும்படி ``மோக்குசாட்சு" (Mokusatsu) எனும் வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்.
ஆனால், அதே வார்த்தைக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. மறுநாள் காலை, ஜப்பான் பத்திரிகைகள், `அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இந்தக் கூட்டு அறிவிப்பை ஜப்பான் `ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை’ (not worthy of comment) என்ற அர்த்தத்தில் செய்தி வெளியிட்டன. அவ்வளவுதான், அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன்னுக்கு கோபம் தலைக்கேறியது, அன்றிலிருந்து பத்தாவது நாள், உலகின் முதல் அணுகுண்டு பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கியது. பல அர்த்தம் கொண்ட தெளிவற்ற வார்த்தையை ஜப்பான் அதிபர் பயன்படுத்தியது தவறு என்று ஒருபுறமும், ``சரணடைவதற்குத் தவிர எந்த முடிவைச் சொல்லியிருந்தாலும் ஜப்பானுக்கு இதே நிலைதான். ஆகவே, வார்த்தை பயன்பாட்டில் ஒன்றும் இல்லை" என்று மறுபுறமும் பல வகைகளில் இந்த வார்த்தையை, அதன் எதிர்விளைவுகளைப் பற்றிய மாற்றுக் கருத்துகள் இன்றளவும் விவாதிக்கப்படுகின்றன. இந்த வார்த்தை காரணமோ அல்லது வேறு காரணமோ... moku - `silence' satsu - `killing' எனும் இந்த வார்த்தையின் அர்த்தம் போலவே, ஒரே நொடியில் கத்தியின்றி ரத்தமின்றி பல உயிர்களைக் கொன்றன அந்தக் குண்டுகள்.
No comments:
Post a Comment