ஒரு ஊரில் ஒரே ஒரு
ஒத்தைவீட்டுக்காரன் இருந்தான்.
அவனிடம் ஒரு குதிரை இருந்தது.
நல்ல குதிரை. அழகான வால் அதற்கு.
அந்த குதிரை காணாமல் போனது.
தேடினான்.
அது ஊர்ப்பெருந்தனக்காரனின் தொழுவத்தில் இருந்தது.
ஆனால் வால் கத்தரிக்கப்பட்டு இருந்தது.
நீண்ட யோசனைக்குப் பின்
ஊர் பஞ்சாயத்தில் பிராது கொடுத்தான்.
விசாரிக்க ஊர்க்கூட்டம்
போடப்பட்டது.
குதிரையும் கொண்டு வரப்பட்டது.
ஒத்தை வீட்டுக்காரன் குதிரை எனது என்றான்.
பெருந்தனக்காரனும் எனது என்றான்.
ஒத்தை வீட்டுக்காரனின் அடுத்த வீட்டுக்காரனை சாட்சி சொல்ல ஊர்காரர்கள் அழைத்தார்கள்.
அவன் குதிரையை மேலும் கீழும் பார்த்தான்.
இறுதியாக சொன்னான்," முன்னால் பார்த்தால் ஒத்தை வீட்டுக்காரன் குதிரை போல் இருக்கிறது. பின்னால் பார்த்தால் பெருந்தனக்காரன் வீட்டுக்குதிரைபோல்
இருக்கிறது ".
தீர்ப்பு அளிக்கப்பட்டது.
குதிரையை பெருந்தனக்காரன்
ஓட்டிச் சென்றான்.
ஒத்தை வீட்டுக்காரனுக்கு
வெட்டிய குதிரை வால்முடி கிடைத்தது.
பிராது பைசல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment