Sunday, 28 March 2021

கற்பதுவே பகிர்வதுவே-15*மணி



சிறுகதை என்பது சிறுசம்பவம், சித்திரம்,நிகழ்ச்சிக் குறிப்பு என எதுவும் இருக்கலாம்.இவைகள் அமரத்துவம் அடைய வேண்டுமானால் சாதாரண நிகழ்வுகளின் இடையில் ஒரு அழியா சம்பவத்தையும், பரந்த காலத்திற்கிடையில் நிரந்தரமான ஒரு சிறுகணத்தை ஒரு யுகம் போல் தோன்றும் படியும் செய்ய வேண்டும்

-படித்தது

#நன்மாறன் கோட்டைக் கதை
-இமையம்

ஒரு சிறுகதை என்பதை படிக்கத் துவங்கிய சிறிது நேரத்தில் புதைகுழியில் மாட்டிய நம் கால் போல் கதை இழுக்க வேண்டும். சம்பவங்களும்,உரையாடல்களும் அதில் என்ன இருக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.சிறுகதை துவங்கிய சிறிது நேரத்தில்
வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும்,ஓர் அவசரத்தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்பார் தி.ஜானகிராமன். அப்படி முழுமையாய் நம்மை ஆட்கொண்டுவிடுவனதான் இமையத்தின் சிறுகதைகள்.

இத்தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வித்தியாசமான அனுபவங்கள். குறிப்பாக முதல்கதையான நன்மாறன் கோட்டைக்கதை.விகடனில் வந்த இக்கதை படித்த போதே அதிகம் கனத்தது.அரசுப்பள்ளியில் தன் இரு மகனுக்கும் டி.சி கேட்டு வந்து நிற்கும் பெண்ணின் பின்னால் இருந்த சாதிக்கொடுமையை தோலுருத்துக் காட்டுவார்.

மாடுகளுக்காக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தையத்தில் யதெச்சையாக அப்பெண்ணின் கணவரின் மாடு வெற்றி பெறுகிறது.யாருடைய வெற்றியை கூட ஏற்றுக் கொள்வோம்.ஆனால் ஒரு ஒடுக்கப்பட்டவனின் வெற்றியை ஒரு போதும் ஆதிக்க சாதி ஒத்துக்கொள்ளாது என்பதையும் அதற்கு பின் என்ன நடந்தது, ஏன் டி.சி கேட்கிறார் என்பதையும் அழுத்தமாய் சொல்கிறது இக்கதை.25 பக்கமும் வெறும் உரையாடல் மூலம் மட்டும் கதையை கட்டமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறுகதை என்பது முடிவதற்குச் சற்று முன்பு தொடங்குகிறது என்பார்
சுஜாதா."கீழ்சாதி பொணத்தை போய் தூக்கிட்டேனனே.இந்த வேலையை ராஜினாமா செய்யனும்னு புதிதாய் காவலராய் சேர்ந்த ஏட்டு இன்ஸ்பெக்டரிடம் உரையாடும் கதைதான் இது.இன்ஸ்பெக்டர்
அடுக்கும் காரணமும் சீனிவாசன் இறுதியில் என்ன செய்தான் என்பதும் கதை.இதெல்லாம் இப்பிடியெல்லாம் நடக்குமானு நீங்க கேட்டால் காலையில் அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்பி செய்தித்தாளில் கொலை, கொள்ளை,நடுப்பக்க கட்டுரையெல்லாம படிக்காம வெறும் சினிமா,ஸ்போர்ட்ஸ் நியூஸ் மட்டும் படிக்கிற ஆள் என்று நீங்களே உங்களை சொல்லிக்கொள்ளலாம்.

பணியாரக்காரம்மா- கண்ணன் செட்டியார் மீதான அன்பை பணியாரக்காரம்மா கதையிலும்,
ஒரே கட்சியை சேர்ந்தவராக இருப்பினும் தன் கட்சியின் வெற்றியை விட தன்னுடைய சாதியின் வெற்றிதான் முக்கியம் என்று கருதி தன் சொந்தக் கட்சிக்காரனின் வெற்றியை தடுக்கும் கட்சி மாவட்ட செயலாளரின் கதைதான் 'நம்பாளு" சிறுகதை

வீட்டிலிருந்த நகை திருடுபோனதற்காகக் கணவனிடம் மாட்டடி வாங்கியதோடு கோயிலில் பிராது மனு கட்டிப்போட்டால் நகை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் தங்கமணியை அலைக்கழிக்கும் கோயில் நிர்வாகம், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடும் ஒரு பெண்ணின் மனதை நெகிழ்ச்சியோடு நம்மையும் தங்கமணிக்காக பரிதாபப்பட வைக்கிறார்.

இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பை தட்டிக்கேட்டதற்காக, ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் பிம்பத்தை குலைத்துப் போடும் தலைக்கடன் கதையில் வரும் மனைவி கதாபாத்திரம் சரியான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சித்தாளான தன்னிடம் தவறான எண்ணம் கொண்டு வரும் முதலாளியிடம் சொல்லும் ஒற்றைச் சொல்லில் ஆண் சமூகத்தையே துவம்சம் செய்யும் சாந்தா கதை பெண்ணின் நேர்மையான குணத்தை பிரதிபலிக்கிறது.

அடிபடாமலும் சாகாமலும் சாலையின் அடுத்த பக்கம் போவது தினமும் ஒரு அதிசயம் என இரண்டாவது ஷிப்ட் கதையில் பணிக்கு செல்லும் பெண்ணின் மனநிலையை சொல்லியிருப்பார் கந்தர்வன்.
அதே போல் டவுன்பஸ்ஸில் பிடித்த இடத்தை காப்பாற்றிக் கொள்ளவும்,பாலியல் சீண்டல்,
மாதவிலக்கு பிரச்சனையோடு எதிர்கொள்ளும் பிரியங்காவின் உணர்வை ஆலடி பஸ் கதையில் நம்மையும் பயணிக்க வைத்திருப்பார்.

கட்சியில் சீட்டுக்கிடைக்காத கடைநிலை கட்சிக்காரன் மனநிலையை கடைசி கதையில் விவரித்திருப்பார்.எழுத்தாளர் இமையம் எந்த இடத்திலும் பெண்ணியம் பேசியோ நீதியை நிலைநாட்டியோ, உலகை மாற்றவோ முயலாமல் உள்ளதை உள்ளபடியே படம் பிடித்துக் காட்டுகிறார்.அந்த படத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர வைத்துவிடுகிறார்.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment