வாழ்வு என்பதும், மனிதர்கள் என்பதும்,மனிதரைப் புரிதலே வாழ்வினைப் புரிவது என்பதும்தானே அடிப்படையான உண்மை
-வண்ணதாசன்
#அவர்கள் அவர்களே
-திருமாவேலன்
புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போதே சில புத்தகங்களை வாங்க வேண்டும் என எண்ணுவோம். அப்படி வாங்கிய புத்தகமே நான் நேசிக்கும் எழுத்தாளர் திருமாவேலன் எழுதிய இப்புத்தகம்.தான் சந்தித்து வியந்த மனிதர்களை அறியாத ருசிகரத் தகவல்களை திரட்டி ஒவ்வொரு கட்டுரையிலும் தந்துள்ளார்.
ஐயா சின்னக்குத்தூசியின் கட்டுரைகளை நூலகத்தில் படித்திருந்தாலும் அவரை அருகிலிருந்து பார்த்தது போல் வியத்தகு மற்றொரு முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
கலைஞருடனான நினைவுகளை எழுதச் சொன்னபோது "கதவுக்குப் பக்கத்தில் வேலைக்காரன் உட்கார்ந்து இருக்கிறான் என்பதற்காக அவன் முதலாளிக்கு சொந்தக்காரன் ஆகிவிட மாட்டான். நான் என்றும் முரசொலி ஊழியன்.. அவ்வளவுதான் என கூறினாராம். கடைசிவரை வாசிப்பு குறையாமல் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் தன் அறிவை வளர்த்துக் கொண்டே இருந்த மாபெரும் மனிதர் சின்னக்குத்தூசி.
அனுபவம் அனுபவிப்பவரை சார்ந்துள்ளது.அந்த அனுபவத்தை சுவைபடவும் எழுதியுள்ளார்.
சொல்லைப் போலவே செயலிலும் வாழ்ந்து காட்டியவர் கவிஞர் இன்குலாப். மார்க்சிஸ்ட் ஆக வாழ்ந்த மார்க்சிஸ்ட் இன்குலாப் என புகழாரம் சூட்டுகிறார். வாசிப்பு,படைப்பு போராட்டம் என பல்வேறு தளங்களில் அவரின் பயணத்தை நமக்கு காட்டுகிறார். நம்மூர் கம்யூனிஸ்டுகளுக்கு தூரப்பார்வை மட்டும்தான் உண்டு.. கிட்ட பார்வை கிடையாது என இன்குலாப்பின் விமர்சனத்தையும் இங்கு பதிவு செய்திருக்கிறார்.
ஓவியர் வீரசந்தானம் பற்றி சொல்லுகையில் "அவர் ஒரே விஷயத்தை ஒரே மாதிரி அரைக்கும் வெட் கிரைன்டர் அல்ல.முன்னே அமர்ந்து இருப்பவர்க்கு எது தேவைப்பட்டதோ அதை நோக்கி அவரின் நா எழுமாம். சிந்தனை வீரியமுள்ள அவரின் வாழ்வை எளிமையாய் நம் இதயத்தினுள் கடத்துகிறார்.
புத்தகத்தை கரையான் அரிக்கும் பிரபஞ்சனை புற்றுநோய் அரித்தது என்ற அவரின் வார்த்தை பிரபஞ்சன் மீதான இன்னொரு படிமத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. பிரபஞ்சன் உடனான அனுபவத்தையும் அவரின் எழுத்தையும் அவருடைய சந்திப்பையும் பேட்டியையும் இவ்வளவு அறிவார்ந்த மனிதர் என்ற பிம்பத்தை நமக்குள் இன்னும் மேலும் கட்டமைக்கிறது
சீடனுக்கு புத்தர் சொல்லும் புரிதலோடு இருக்கும் மொழியை கொண்டவரான ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களைப்பற்றி அருமையான கட்டுரை ஒன்றை தந்துள்ளார் ஆசிரியராக இருந்தபோது அவரின் அவரின் அனுபவமும் பத்திரிக்கையாளனாக இருக்க வேண்டியர்க்கு இருக்க வேண்டிய அப்பளுக்கற்ற தன்மையையும் அடையாளமாய் காட்டியுள்ளார்.
ஆனந்த விகடனில் புத்தகன் என்ற பெயரில் புத்தக அறிமுகம் வந்து கொண்டே இருக்கும்.அந்தப் புத்தகன் திருமாவேலன் சார் தான் என்பது புதியதகவல்."வாலியின் பேட்டியில் ஆகாயம்கூட சின்னது என்னுடைய கோபாலகிருஷ்ணன் மனது அவ்வளவு பெரியது எனச் சொன்னது அவரின் நன்றி உணர்வை காட்டியது.மணிவண்ணனை மிகவும்சிலாகித்தது அருமை. அவர் வாசிப்பினால் உச்சம் தொட்டவர். அவரின் எழுத்து "ரொம்ப படிச்சவன் திட்டணும் சார்,பாமரன் பாராட்டனும் சார்"னு சொன்னது யதார்த்தம்.
திருப்பூரில் நான் பள்ளியின் படித்துக் கொண்டிருந்தபோது சபாநாயகர் காளிமுத்து அடித்த கமெண்ட் இன்னும் நினைவில் உள்ளது.. மூப்பனாரும்,கிருஷ்ணசாமியும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்தனர்.அவர்களின் சின்னங்கள் முறையே சைக்கிளும், வண்டுமாடும்.காளிமுத்து சொன்னார் சைக்கிளும் வண்டிமாடும் ஒருநாளும் டெல்லிப் போய் சேராது என்று.சொன்னது போலவே எல்லா இடத்திலும் தோல்வி.அவர் குறித்து அறியாத தகவல்களை பகிர்ந்தது அருமை.
நன்னன் குறித்தும்,சென்னையின் காதலர் சம்பந்தம் ஐயா குறித்தும்,
இளைஞர் அறிவியல் களஞ்சியம் வாசிப்பில் உள்ளபோது அந்நூலாசிரியர் மணவை முஸ்தபா குறித்து படித்து அறிந்தது இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.மதிமுகவின் தாயகம் பிறந்த கதை அறிந்தது,இன்னும் அறியாத முகங்கள், தெரியாத நிகழ்வுகள் அறிந்து கொண்டது உண்மையில் பெருமகிழ்ச்சி.
#படித்ததில் ரசித்தது
*புத்தகங்கள் படிப்பதை விடவும் பத்திரிக்கை படித்தால்தான்
முழு வரலாறு அறிய முடியும்
*இரவல் வாங்கிய புத்தக்த்தில் அன்புடன் திருப்பித் தருக என எழுதிக் கொடுத்தாராம் வீர சந்தானம்
*பட்டத்து யானை பவனி வருவது போல் இருக்கும் நாஞ்சில் மனோகரனின் பேச்சு
*திருஞானசம்பந்தன் நன்னன் ஆன கதை
*மூளை மூலமாக படிக்க கூடாது
இதயம் மூலமாக படிக்க வேண்டும்
இன்னும் இன்னும் மனதை தொட்ட வரிகள் ஏராளம்.ஒரு பெரிய பிரபலம் சில ஆண்டுக்கு முன் இது போல் ஆளுமைகள் குறித்து புத்தகம் எழுதினார். ஆவலுடன் வாங்கிப் படித்த பிறகு ஏமாற்றம்.காரணம் எல்லாமே தெரிந்த சங்கதிகள்.ஆனால் இந்த புத்தகம் படித்ததில் அக்காயத்திற்கு மருந்தாய் அமைந்தது.
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment