கற்பதுவே.. பகிர்வதுவே-6
*மணி
ஒரு சத்தியாகிரகி தனது எதிர்தரப்பை நம்புவதற்கு அச்சப்படவே கூடாது.ஒரு சத்தியாகிரகியை அவரது எதிர்த்தரப்பு இருபது முறை ஏமாற்றினாலும் இருபத்தியோராவது தடவையும் தனது எதிர்த் தரப்பை நம்புவதற்கு தயாராக இருக்க வேண்டும்
-காந்தி
#காந்தியை சுட்ட பின்..
-பா.முருகானந்தம்
இந்திய சுதந்திர போராட்டத்தின் வைஃபை யாக இருந்தவர் காந்தி.
அவர் சுடப்பட்டார்..சுடப்பட்டவருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் திட்டமிட்ட கொலைக்கு காரணம்..
கொல்லப்பட்டவுடன் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை எளிமையாய் விளக்குகிறது இந்த நூல்.குமுதம் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்த நூலை கடந்த 2011ம் ஆண்டு ஈரோடு புத்தக கண்காட்சியில் வாங்கினேன்.151 பக்கமுள்ள நாவல் போல விறுவிறுப்பாக எழுதியிருப்பார்.
துவக்கத்தில் சாவர்க்கர்,நாதுராம் விநாயக்ராம் கோட்ஸே,நாராயண் தத்தாத்ரேய ஆப்தே,கோபால் கோட்ஸே(கோட்ஸேவின் தம்பி), மதன்லால்,விஷ்ணு கர்கரே,பர்சுரே,திகம்பர் பட்கே,சங்கர் கிஸ்தய்யா என இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணியிலிருந்து புத்தகம் துவங்குகிறது.
ஜனவரி 9-1948லிருந்து கொலைக்கான துப்பாக்கிகள் வாங்கி சேகரிக்கப்பட்டன.இந்தியா பாகிஸ்தான் பிரிவினை கலவரம் ஒருபுறம் இருக்க காந்தி ஜனவரி 12ம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா 55கோடி ரூபாயை எந்த வித நிபந்தனையும் இல்லாமல் கொடுக்கவும், கலவரத்தை ஒடுக்கவும் உண்ணாவிரதம் இருந்தார்.இதுதான் உடனடியாக கொலை செய்வதற்கான காரணமாகவும் சொல்லப்படுகிறது.
அங்கு அவ்வாறு நடந்து கொண்டிருக்க பூனாவில்
கோட்ஸே 2000 ரூபாய்க்கான பாலிசிக்கு பயனாளியாக ஆப்தேவின்(கோட்ஸே நடத்திய பத்திரிக்கையின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவன்) மனைவி சம்புதாயை நியமித்தான்.
3000ரூபாய்க்கான மற்றொரு பாலிசியின் பயனாளியாக தன் தம்பி மனைவியை நியமித்தான். ஜனவரி 17முதல் 20 வரை டெல்லி சென்று அங்குள்ள மெரினா ஹோட்டலில் தங்கினர்.19ம் தேதி துப்பாக்கியுடன் தன் தம்பி வந்தவுடன் 20ம் தேதி திட்டமிடப்பட்ட கொலை முயற்சி தோல்வியில் முடிகிறது.அப்போது மதன்லால் கைதானவுடன் மீதமுள்ள அனைவரும் மும்பை திரும்புகின்றனர்.27ம் தேதி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர்.500 ரூபாய்க்கு புதிய பிஸ்டலை வாங்குகின்றனர். ஜனவரி 30ம் தேதி அதிகாலை லைவ் டெலிகாஸ்ட் போல புத்தகம் ஒவ்வொரு நிகழ்வையும் விவரிக்கிறது.
முதல் ஐம்பது பக்கமும் விறுவிறுவென சென்றதும்.. அடுத்து காந்தியின் பிர்லா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வும்,நீதிமன்ற விசாரணை சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வாக்குமூலமும் தெளிவாக புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.மொரார்ஜி தேசாய் உட்பட பத்துக்கு மேற்பட்டோரின் சாட்சியமும்,கீழ் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்,கைதிகளின் கடைசி நாட்களையும் தத்ரூபமாய் படம் பிடிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் விடுதலையானோரின் பேட்டிகளும் இடம் பெற்றுள்ளது.
கொலைக்கான சர்ச்சைகளும், கோட்ஸெ குடும்பத்தினரின் மனநிலையும் கூறப்பட்டுள்ளது.
காந்தியின் அஸ்தி சிந்து நதி தவிர அனைத்திலும் கரைக்கப்பட்டதால் தனது அஸ்தி சிந்து வில் கரைக்க வேண்டுமென நாதுராம் கூறியிருந்தான்.பிறகு எங்கு கரைக்கப்பட்டதென புத்தகத்தில் உள்ளது.
#வியந்தது
*1934ல் முதல் முறை,1944ல் இரு முறை,1946ல் ஒரு முறை என சுதந்திரத்துக்கு முன் 4முறை கொலை முயற்சி நடந்துள்ளன.
*காந்தியின் மூத்த மகன் மதுவுக்கு அடிமையானதால் மூன்றாவது மகன் ராம்தாஸ் காந்திதான் இறுதி சடங்கு செய்துள்ளார்.
*ராமதாஸ்தான் கோட்ஸே, ஆப்தேவுக்கு கருணை அடிப்படையில் தண்டனை விளக்கு அளிக்கவும் போராடினார்.
*காந்தி அஸ்தியின் ஒருபகுதி கட்டாக் நகரில் ஸேஃப்டி டெபாசிட் லாக்கரில் இருந்ததை பேரன் துஷார் காந்தி வழக்கு போட்டுமீட்டு 1997ல் திரிவேணி சங்கமத்தில் கரைத்தார்.
இதுபோல் எண்ணற்ற தெரியாத தகவல்கள் நிறைந்துள்ளன. பத்து ஆண்டுக்கு பின் மறுவாசிப்பிலும் சுவாரஸ்யமாய் இருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment