Old is gold-2
*மணி
#நிலவறைக்குறிப்புகள்
நாகரீகமான ஒரு மனிதன் அதீதமான மகிழ்ச்சியோடு எதைப் பற்றி பேசுவான்?
அவனைப் பற்றி மட்டும் தான்
-தஸ்தயெவ்ஸ்கி
அனுபவங்கள் சமுத்திரம் அளவு ஆகும்போது தன்னுணர்வுகளை தானாகவே ஆவியாகச் செய்வது போல தன் அனுபவங்களையும் குறிப்புகள் வழியாக மற்றவர்களுக்கு அனுபவத்தை பகிர்கிறான் நாயகன். அந்த அனுபவங்கள் அத்தனையும் கேட்க கேட்க நமக்கு நடந்தது போல் தெரியும் போது அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி இன்னும் நம்மை பற்றி என்னவெல்லாம் சொல்லப் போகிறான் எனும் ஆவல் பிறக்கும் அல்லவா..அதுதான் இந்த நாவல். 40 வருடங்களாக ஒரு சிறிய அறைக்குள் இருக்கும் மனிதன் கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்டு நம்மிடம் பதிலை சொல்லுங்கள் என கேட்பது போல் ஒவ்வொரு வினாவும் இருக்கும்.அந்த கேள்விகளுக்கு சொல்லும் பதில் நம்மை வழிமொழிய வைக்கும்.
எலி வளை எனும் முதல் பாகத்தில் சிறிய அறையில் வசிக்கும் நாயகன் தன்னைப்பற்றிய குறிப்புகளையும், மனிதனாக இருப்பது என்றால் என்ன? என்பன குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இது என்ன புதுசா சொல்லப்ப்போறார்னு படிக்க படிக்க நம்முள் படிந்திருக்கும் கோபம், குரோதம்,பொய்மை, நடிப்பு ,முகமூடி அனைத்தையும் தொட்டு செல்கிறார்.
பெருமைக்காக சொல்லலனு சொல்லிட்டு பெருமையை மட்டுமே பேசுவது போல..நான் உங்களைப் பத்திசொல்லல என்னைப் பற்றித்தான் என்று கூற ஆரம்பித்து முழுக்க முழுக்க நம்மை பற்றியும் மனித சிந்தனையைப் பற்றியுமே விரிவாக அலசி உள்ளார்.
தன்னுணர்வு மிக்க ஒருவன் சராசரி மனிதனின் முன்பு தன்னை ஒரு மனித ஜீவியாக நினைத்துக் கொள்ளாமல் ஒரு எலியை போல உணர்ந்தபடி குழம்பி
திகைத்து விடுவதும் உண்டு. அந்த எலி கூர்மையான அறிவு கொண்டதாக இருக்கலாம் ஆனால் அது ஒரு எலி மட்டுமே. அந்த இன்னொருவன் மட்டுமே மனிதன். அவன் மனிதன் என்பதாலேயே இவன் எலி ஆகிறான். தான் ஒரு எலி போல ஆகிவிட்டேனே எனும் தன்னுணர்வினால் தன்னைச் சுற்றிலும் சந்தேகங்களும் கேள்விகளும் நிறைய அசிங்கங்களை உருவாக்கிக் கொள்வதில் எலி வெற்றி கண்டிருக்கும். சொல்லி தீர்க்க முடியாத அடுக்கடுக்கான பல வினாக்களை தன்னுள் குமுற விட்டபடி மனிதர்கள் மீது வெறுப்புணர்ச்சியும் கோபமும் கொண்டதாய் இருக்கும் என்று மனித மனத்தினை எலியுடன் ஒப்பிட்டு கூறுகிறார்.
இரண்டாவது பாகத்தில் உடலை விற்கும் பெண்ணான லிசாவிடம் தன் மேன்மையையும் தான் கற்றறிந்த விஷயங்களில் தத்துவங்களையும் அவரிடம் கூறி தன்னை ஒரு கதாநாயகன் போல் காட்டிக் கொள்கிறான். அவள் மீது காதல் கொள்வதாகவும் கூறுகிறான். ஒருநாள் தன்னுடைய இல்லத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறான். அப்போது அவன் வேலைக்காரருடன் சண்டையிடும் நிகழ்வையும், அவனின் உண்மையான குரூர முகத்தையும் காண்கிறாள். அவள் மீது அவன் கட்டமைத்த கதாநாயக பிம்பம் உடைந்து போவதையும், வீட்டில் அவன் வறுமையில் உலர்வதையும் கண்டு விட்டாளே என்ற ஆத்திரமும் அவமானமும் அவன் மனதில் மிகுந்த துன்பத்தை தருகின்றது. அவள் மீது ஆத்திரத்தை கொட்டுகிறான்.இருப்பினும் அவள் அவன் மீது அன்பாகவே இருக்கிறாள்.இது இன்னும் அவனுக்கு கோபத்தை தருகிறது.
இந்த துன்பத்தின் அலைக்கழிப்பை தன்னுடைய பிம்பம் உடைந்து போனதே என நினைத்து நினைத்து வருத்தப்பட்டு இறுதியில் என்ன ஆனது? லிசா என்ன முடிவெடுத்தாள்? தான் படித்த விஷயங்களை மட்டுமே மனதில் சித்தரித்து வைத்திருந்த விஷயங்களை மனிதர்கள் எவ்வாறு உடைத்து விட்டு செல்கிறார்கள் என்பதும் அதனை இன்னும் தான் கற்கவில்லையே என்னும் ஏக்கமும் அவன் மனதில் இருக்கத்தான் செய்கிறது
எதார்த்த வாழ்க்கையோடு சிறிதும் பரிச்சயம் இல்லாத ஒருவனின் செயல்பாடும், சக மனிதர்களை மரியாதையாகவோ சமமாகவோ நடத்தாத கர்வம் பிடித்த மனிதன் எப்படி நடந்து கொள்வான் என்பதும் மிக அழகாக எடுத்துள்ளார்
#ரசித்தவை
*.எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டே இருந்துவிட்டு எதையுமே செய்யாமல் இருக்கும் நம்மை ஒத்த மனிதர்களைப் போல எனும் வரியைச் சொல்லலாம்.
*பழிவாங்கும் செயலை யாருக்கு எதிராக மேற்கொள்கிறோமோ அவனுக்கு அதனால் ஒரு சிறு கீரல் கூட விழப்போவதில்லை
*ஒரு வயதில் புகழ் சொற்களை கேட்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாக தான் இருக்கும் ஆனால் அவையெல்லாம் வெறும் பொற்கனவுகள் மட்டுமே
*மனிதன் தன்னைப் பற்றி புளுகாமல் இருக்கவே முடியாது
*கடைசியாக மிச்சமிருப்பது
இது ஒன்றுதான்.
நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.
*தங்கள் பெண்களை கவுரவமாக திருமணம் செய்து கொடுக்காமல் அவளை விற்பனை செய்வதில் சந்தோஷப்படும் சிலரும் கூட இருக்கிறார்கள்
*வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றை அடைவதை விட வாழ்வதில் மட்டும்தான் நாட்டம்
*உண்மையில் முற்றிலும் சுயேசையான தன்னிச்சையான ஒன்றை தெரிந்து கொள்ள மட்டுமே மனிதன் விரும்புகிறான்
*மனிதன் அவமானங்களை அவனது நெஞ்சில் கணத்துக்கு கணம் அடுக்கிக் கொண்டு அசைபோட்டபடி தன் சொந்த கற்பனையால் மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறான
*மனிதனால் தன்னை பற்றி புளுகாமல் இருக்கவே முடியாது
*காதல் என்பது மிகவும் புனிதமான ஒரு புதிர். எது நடந்தாலும் மற்றவர்களின் கண் மறைவிலேயே அது நடந்தேற வேண்டும். அதுவே காதலை மேன்மேலும் புனிதமானதாகவும் சிறப்பானதாகவும் ஆக்கவல்லது
இத்தனை வெறுப்புணர்வை தந்தாலும் அவன் மீது ஏதோ ஒன்று அவளை ஈர்க்கத்தான் செய்தது. அதனை அவன் புரிந்து கொள்ளும் போது அவள் மீது பரிவு ஏற்படாமல் தனது ஆற்றாமையின் மீது வெறுப்பு தான் அவனுக்கு உண்டாகிறது. வெறுப்பூட்டும் மனிதனாகவே தன்னை பற்றி எல்லாரும் எண்ணிக் கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் தன் மீது பரிவை காட்டும் போது அவனுக்கு இன்னும் வேதனையை கூட்டுகிறது. இதனை மிக லாவகமாக ஒவ்வொரு நிகழ்வாகவும் அடுக்கடுக்காக காட்சிகளையும் உருவகப்படுத்தி அந்த கதாபாத்திரத்தின் தன்மையை நம் மீது நாவல் முழுக்கவும் ஏற்றி வைத்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
நாவலை மூன்றே வரிகளில் அடக்கி விடலாம் ஆனால் அந்த மூன்று வரிகளை மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவமாக மாற்றி இருக்கிறார். மனிதன் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளாத விஷயங்கள் பல உள்ளன .இதில் நாயகன் தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் விஷயங்களை நாமும் ஒரு முறை சொல்லிப் பார்க்க தூண்ட வைக்கிறது. உண்மையில் இது மனித இயல்புகளைப் பற்றிய ஓர் அரிதான ஆவணம் தான்
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment