Saturday, 18 February 2017

போட்டோஜெனிக்

நன்றி:சதீஷ்

* பர்ஃபெக்ட் போட்டோஜெனிக்*

கடைசியாய் அழுதது எப்போது?
உப்பு ருசிக்கின்ற மூச்சு
அவன் சட்டையில்
விசித்திரமான நில வரைபடங்களை
வரைந்தபோதா?
காட்டுச் சாமந்தியின் தண்டினூடே
இதழ்களில் உறங்கப்போகிற
பகல் அறிவதில்லை
நினைவுகள் என்பவை
பனி படர்ந்து வழிந்திறங்கும் மலையிடுக்கின் கொடும் வளைவுகள் கடந்து மறைகிற வாகனத்தின்
மஞ்சள் கண்களைக்கொண்டவை
என்பதை.

முட்கள் நிறைந்த வழிகளில் நடக்கையில்
சிக்கிப்போன காற்றின்
நீல விரல்களே...
மட்ட மதியத்தின் நிழல் வட்டங்களில் அடங்காத இலைத்துடிப்பின் 
காட்டு மனங்களே...
நதி கழற்றியெறிந்த 
சங்கிலித் துளையிலுள்ள
காயத்தின் மீன் துடிப்புகளே...

சொல்லப்படாத காலம் வரை
காதல்தான் எவ்வளவு பரிசுத்தமானது.
காலியான கேன்வாஸில் உறங்கும்
வண்ணங்கள் உருவாக்கக்கூடிய
எண்ணிலா சாத்தியப்பாடுகள்
கதவுகளில்லா அறைக்கு மட்டுமேயான
பித்துநிலையில் 
சிதறிய எண்ணங்களை வெளிப்படுத்தும்போது 
அது கீழ்ப்படிய மறுக்கத் துவங்கும்.

உதட்டைக் கூர்மையாக்கி
என்னுடையது என்னுடையது என்று
உரிமை கொண்டாடும்
பொறாமையோடு கண்கலங்கி
கறுப்பைப் பரவலாக்கும்
தனித்துவிடப்பட்டேன் என்று புகார் செய்து
கன்னங்களை 
ஊதிப்புடைத்து வைத்துக்கொள்ளும்
அதுவரையில்
சட்டையில் வண்ணங்களைப் படரவைத்த
அழுகைகளை மறந்துவிடு
ஒற்றை ஃப்ரேமுக்குள்
ஜூம் செய்கையில்
ஆச்சர்யத்தோடு தெரியப்படுத்து:
பர்ஃபெக்ட் போட்டோஜெனிக்.

ஆர். சங்கீதா, கோட்டயம் சங்கனாசேரியைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரிகிறார். முதல் கவிதைத் தொகுதி ‘ஒற்றையாய் ஒருவன் கடல் வரைகிறான்’ ஆகஸ்ட்  2016-ல் வெளிவந்தது.

No comments:

Post a Comment