Thursday, 9 February 2017

சொல்வனம்

குடமுழுக்கின் குதூகலம்

காலியான குடத்தை உனது கைகளால் 
அள்ளி நிரப்பும்போதும் 
நிரம்பிய குடத்தைக் கைகளால் அளைந்து தூக்கிச் செல்லும்போதும்  
உனது விரல்கள்பட்டு விலகிச்செல்லும் 
நதியில் கலந்திருப்பது 
ஒரு குடமுழுக்குக்குப் பின்பான குதூகலம்.

நீ பின்னிவிட்டதாய் 
என் தங்கை சொன்ன அன்று முழுவதும் 
அவளது முதுகில் நிகழ்ந்துகொண்டிருந்தது 
இடைவிடாத ஒரு நாட்டியாஞ்சலி.

சூடியபடி நீ சுற்றிவருவதைப் பார்க்கும் 
உனது விரல்கள் பட்ட வெற்றுக்காம்புகளில் 
முகிழ்த்திருப்பது 
ஒரு மோனலிசா புன்னகை.

`பொட்டு எங்கடி?’ என்ற 
உன் அம்மாவின் கேள்விக்கு 
சட்டென நடுவிரலை நெற்றிக்கு மத்தியில் வைத்துத் தொட்டுப்பார்க்கிறாய் 
பொட்டென ஒரு கணம் மின்னிமறைகிறது 
அழகு மருதாணி பிறையொன்று.

வெள்ளை மாவில்தான் 
கோலம் போட்டுச் செல்கிறாய் 
மிதிக்காமல் தாண்டிச் செல்வோரின் மனங்களில் 
உதிர்கின்றன வண்ணத் தோகைகள்.

- கே.ஸ்டாலின்

No comments:

Post a Comment