தியானம் என்பதற்கான தமிழ்ச்சொல்லாக “நினைத்தல், வழிபடல்” ஆகிய சொற்களை வடசொற்சருக்கத்தில் தி. நீலாம்பிகை அம்மையார் கூறுகிறார்.
‘மனங்குவித்து, விடாது எண்ணல்’ என்பது அச்சொல்லின் பொருளாகலாம். ‘இடையறாத ஆழ்நிலைக் கூர் எண்ணம்’ என்று தியானத்தை விளங்கிக்கொள்கிறேன்.
இங்கே தியானம் என்பதற்குரிய தமிழ்ச்சொல்லை வள்ளுவரே தருகிறார்.
வள்ளுவர் பயன்படுத்திய ‘தவம்’ என்ற சொல்லைத்தான் தியானத்திற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லாகக் கருத வேண்டும்.
’தவம்’ தமிழ்ச்சொல்லே. ஏனென்றால் ‘தவ்’ என்பதை முதல்நிலையைக் கொண்டு ஓரினப் பொருள்களால் ஆன எண்ணற்ற சொற்கள் தமிழில் வழங்குகின்றன. அவை எவை ?
‘தவர்தல்’ என்னும் வினைச்சொல் இருக்கிறது. தவர்தல் என்றால் ‘துளைத்தல். ‘ஒன்றைப் பற்றிய நிலையிலிருந்து மேலும் ஆழ்தலே’ தவர்தல்.
இன்னொரு வினையான ‘தவழ்தல்’ என்பது ‘ஒன்றின்மீது படிந்தபடி மெல்ல நகர்தல்.’ இங்கே பற்றிய நிலையானது சிறு நகர்ச்சிக்கு உட்படுகிறது.
ஏறத்தாழ தவழ்நிலையிலேயே உள்ளதைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம்தாம் ‘தவளை’. தவளை மட்டுமே ஓரிடத்தில் ஆண்டுக்கணக்கில் நீரும் உணவுமின்றி இறுகப்பற்றிய அசையா நிலையில் வாழக்கூடியது. தவளையின் வாழ்நிலை ஒரு தவநிலை.
ஒன்றை இறுகப் பற்றிய தோல்போன்ற நிலையில் இருந்ததுதான் ‘தவிடு’.
ஒன்றின்மீதிருந்த பற்றுநிலை, படிநிலை, நிரல்நிலை அழிந்த தன்மைதான் தவ் அறு = தவறு.
அந்நிலையை நீங்குதல்தான் தவ்+இர் = தவிர். தவிர்த்தல். பற்றிய நிலையினின்று விடுபடல். நீங்குதல்.
ஆழ்ந்து பற்றியிருந்த ஒன்றின்மீது ஏற்படும் துன்பநிலைதான் ‘தவிப்பு’.
ஆக, “தவ்” என்னும் முதல்நிலை, பயன்பாட்டில் அருகிய வினைச்சொல் ஒன்றின் தமிழ்வேராக இருக்கிறது. தவ் என்னும் அந்த அசை. எண்ணற்ற சொற்களுக்கு வேராக இருத்தலைக் காண்கிறோம்.
வள்ளுவர் பயன்படுத்திய தவம் என்பது “ஒன்றைப் பற்றியபடி இடையறாது ஆழ்ந்து நிலைத்திருக்கும்” செயலை விளக்குகின்ற தியானத்திற்குரிய நற்றமிழ்ச்சொல்லே.
- கவிஞர் மகுடேசுவரன்
No comments:
Post a Comment