பறவைகளாலான உயிர்க்கூடு
நின் நேசப் பார்வையை எதிர்கொண்ட
ஐப்பசி அடைமழையின் குளிர்தினமொன்றில்தான்
என்னுள் சிலீர் சிறகடித்தது
அழகு பொருந்திய முதல் தேன்சிட்டு.
தீராத ப்ரியங்கள் என்றென்றைக்கும் என்னிடம்
நெடும்பயணமொன்றின் பின்னிரவில் காதல் குறிப்புணர்த்த 
என் கரங்களைத் தழுவிய நின் ஸ்பரிசத்திலிருந்து
பறந்து வந்தன குதூகல மைனாக்கள்.
யதேச்சையாக நெஞ்சு படபடக்கப் பகிர்ந்துகொண்ட
நம் முதல் முத்தத்தை நினைவுறுத்திக்
கிரீச்சிடும் பனங்காடைக்கு
உன்னைப்போலவே குறும்பு அதிகம்.
வெவ்வேறு பொழுதுகளின் ஊடல் நிமிடங்களைக்
கரைசேர்த்தக் கரிச்சான்குஞ்சுகளிடம்
அன்பைத் தவிர புகார் எதுவுமில்லை.
கடந்த சித்திரையின் வன்கோடை தினமொன்றில்
எதிர்பார்த்திராத நின் பிரிவின் அம்பு தைத்த
மாடப்புறாவுக்கான ஆறுதல்மொழி பயனற்று
சலசலக்கும் கழிவுநீராகுமென நினைத்தேனில்லை.
அமைதியின் சமநிலை கலங்கும் வண்ணம்
கூக்குரல்களின் ஓலம் அதிகமெடுத்த ஒருநாளில்,
இதயக்கூண்டுடைத்துப் பதறிச் சிதறும் சிறுபறவைகள்
உன் நினைவுகளாக இருந்ததைப்போலவே
என் உயிராகவும் இருந்தது.
- தர்மராஜ் பெரியசாமி
No comments:
Post a Comment