Saturday, 10 February 2018

சுதர்சன்

சுதர்சன் பதிவிலிருந்து..

புத்தக வாசிப்பில் என்னால் கவனம் செலுத்தமுடியவில்லை. எப்படி வாசிப்பது?

குறைந்தபட்சம், பதிவிலாவது கவனம் செலுத்த முடியுமா? அதென்ன புத்தக வாசிப்பு அறிவைத் திறக்கும் என்கிறார்கள்? ஏதோ திறப்புப் போட்டு மூளையைத் திறப்பதுபோல படம் வரைகிறார்கள்? இதெல்லாம் வியாபாரப்  புருடாவா, இல்லை உண்மையாக உணர்ந்து வரைகிறார்களா? உண்மையில் புத்தகத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த முடியவில்லையா? கவனம் செலுத்திப் பழக யோகாவா? புத்தகத்துக்குள் நுழையமுடிவதும் யோகாதான்.

ஜேம்ஸ் கமரூனின் அவதார் படத்தைப் பெரும்பாலானவர்கள்  பார்த்திருப்பீர்கள். அதில் பண்டோரா கிரகத்தில், அந்த மரங்கள் எல்லாம் வேரோடு ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கெல்லாம்  ஓர் உயிர் இருக்கும்.  ஒன்றுடனொன்று உரையாடிக்கொள்ளும். சக்திப் பரிமாற்றம் செய்துகொள்ளும். ஒரு மரத்தின் பருமனான தண்டின் அடிப்பாகத்தோடு சேர்த்து, மண்ணின் அடியில் நிகழும்  அந்த வேர்களின் கட்டமைப்பைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். அந்தக் காடு முழுதும் வேர்களின் கட்டமைப்பு. அதுபோலத்தான் எங்கள் நியூரான்களின் கட்டமைப்பும் இயங்கும். அது ஒரு தனியான செல்(மரம்). ஆனால் தனி ஒரு நியூரானால் பயனில்லை. நியூரோன்களின் கட்டமைப்புப் பலமானது. அங்கு நம் தகவல் பற்றிமாற்றம் நிகழும். சில நியூரோன்கள் தொடுகை, சத்தம் எல்லாம் உணர உதவும். கணினி வலைப்பின்னல் துறையும், இன்டர்நெட்டும்கூட இதை இமிடேட் செய்து வளர்ந்த துறைகள்போலத் தோன்றும்.

எங்களை ஒருவிடயத்தில் கவனிக்கவைக்கும் வேலையை,  நெற்றிப்பகுதிக்குப் பின்னால் இருக்கும் மூளையின் முன்பகுதி செய்யும். அங்கிருக்கும் நியூரோன்  கட்டமைப்பு, அந்த வேலையைச் செய்யும். அந்தக் கட்டமைப்பை டொபோமைன் வந்து, சாவிக்கொண்டு கதவைத் திறப்பதுபோலத் திறந்துவிடும். அதன்பின், மின்சாரத் துவக்குப்போலச் சுட்டு மற்றைய நியூரோன்களையும் எழுப்பிவிடும். அதிரடியான சினிமாக் காட்சிபோல இருக்கிறதா? இந்தப் பகுதியில்தான் மூளை முடிவெடுக்கும் வேலையைச் செய்யும். ஆனால் இந்த டோபோமைனைத் தூண்டிவிடுவது எது?

இரண்டுவிதமாக டொபோமைன் தூண்டப்படும். ஒன்று, நம்முடைய பரிணாமத்தின் அடிப்படை இச்சைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் இயல்பாகத் தூண்டப்படும். இந்தத் தூண்டுதல்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. பசியிலிருக்கும்பொழுது வரும் சிக்கன் பிரியாணி வாசம், தூங்கும்பொழுது சத்தத்துக்கு எழுந்துகொள்வது, அழகான உடல் கட்டமைப்பு உள்ள பெண்ணையோ ஆணையோ நோக்கித் தன்னிச்சையாகத் திரும்பும் தலையென எல்லாவற்றுக்கும் டொபோமைன் சுரக்கும். நான் உன்னைத் தவிர வேறு பெண்ணைப் பார்ப்பதில்லை என்று காதலன் சொன்னால் நம்பாதீர்கள். இப்படி, இந்த உணவு, பாதுகாப்பு, காமம் மூன்றும்தான் மனிதனுக்கு அடிப்படையாக இருந்தது. இப்பொழுது கொஞ்சக்காலமாகத்தான் வங்கியில் பணம் சேமிக்கவும், பினான்ஸில் கார்வாங்கி பின்னாளில் சிக்கிக்கொள்ளவும், கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் பழகி, நிம்மதியைத் தொலைத்தோம்.

இரண்டாவதாக நீங்கள் ஒன்றில் வலிந்து அல்லது விரும்பிக்  கவனம் செலுத்தும்பொழுதும் இது நிகழும். அப்பொழுது  நியூரோன்களை நமக்கேற்றதுபோல பழக்கப்படுத்தலாம். உதாரணமாக, காணாமல்போன குழந்தையைத் தேடும்பொழுது, உங்கள் சிந்தனையில் அந்தக் குழந்தையின் முகம், கண்கள், தலைமுடி, இறுதியாக அணிந்திருந்த ஆடையின் நிறம், அதன் குரல் போன்றவைதான் கவனத்தில் இருக்கும். "சத்த சத்த நெரிசலில் உன் சொல்செவிகள் அறியும் அதிசயம் ஏனோ" என்றெல்லாம் கவிஞர்கள் எழுதிவிட்டார்கள்.  இதுபோல, எங்கள் நியூரோன்களை நமக்குத் தேவையான விடயத்தின்மீது மட்டும் கவனம் செலுத்த வைக்கலாம். அறிவுத் தேடலில் கவனம் செலுத்தவைக்கலாம். "கோகிலா எங்கே போகிறாள்" என்று தலைப்பிட்ட நாவலில் கோகிலாவை மட்டும் தேடிப்போகலாம். அதற்கு அதை ரீடியூன் செய்யப்பழகவேண்டும். அப்படிச் செய்வதனால் மூளை மேலிருந்து செயலாற்றப்( top  down processing ) பழகும். அதாவது, அதற்கு அதுபற்றிய அறிவு கொஞ்சம் முன்னரே இருக்கவேண்டும். இப்படிப் பழக்கப்படுத்துவதால் எதையும் கவனச் சிதறல் இன்றிச் செய்யலாம். மூளையின் குழப்பத்திலிருந்து விடுதலை பெறலாம். அதில் புத்தக வாசிப்பும் ஒரு செயல்.

ஆனால் மூளையில்  இந்தச் செயல்பாடு இயல்பாக இருந்தாலும், நம்மால் ஏன் கவனம் செலுத்தமுடியவில்லை? அதற்குக் காரணம் நம்மைச் சுற்றி இப்பொழுது தகவல்கள் அதிக அளவில் இருக்கிறது. Online banking செய்கிறோம், படிவங்கள் நிரப்புகிறோம், ஆயிரத்தெட்டு சானல்கள் திருப்புகிறோம். இலட்சக்கணக்கான புத்தகங்கள் பார்க்கிறோம். நூறு பதிவு படிக்கிறோம். ஆனால் இவற்றை எல்லாம் மூளை உள்வாங்கிக்கொள்கிறது. ஆனால் கவனிக்கவில்லை.

வாசிப்பும் தேடலும் அல்ஸைமர் நோயிலிருந்து எங்களைக் காக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது. ஆகவே நாங்கள், அறிவைக் குறைவாக உள்வாங்கவேண்டும் என்றில்லை. ஆனால் அதை ஒழுங்குபடுத்தி, தேவையானதை மட்டும் வாசிக்கப் பழகவேண்டும். தேவையான புத்தகம் ஒன்றையேனும் தெரிவுசெய்து வாசித்துமுடிக்கவேண்டும். ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும்.

No comments:

Post a Comment