Thursday, 19 January 2023

கற்கை நன்றே-3*மணி



வாலண்டைன் ஹூவே (Valantine Hauy)

ஒரு பெரும் அற்புதம் நிகழப்போகும்
நேரமெல்லாம் அந்தஒரு சிறு கணத்தில் தான்.

பார்வையற்றோருக்கான எழுத்துக்கள் பிரெய்லியால் உருவாக்கப்பட்டது ஆனால் அதற்கும் முன்னோடியாக பார்வையற்றவர்களுக்கான எழுத்துக்களை உருவாக்குவதிலும்  பார்வையற்றோருக்கான பள்ளிகளையும் முதன் முதலில்  நடத்தியவர் வாலண்டைன் ஹுவே என்பது குறிப்பிடத்தக்கது

வேலன்டைன் ஹுவே பார்வையற்றவர்களுக்கான வாழ்க்கையைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு நாள் வெளியே நடந்து சென்று கொண்டிருக்கும்போது பார்வையற்ற ஒருவருக்கு உதவி செய்யும் விதத்தில் தம் சட்டை பையில் கையை விட்டு ஒரு காசு எடுத்து அவருக்கு கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் இரண்டடி நடப்பதற்குள் அந்த பார்வையற்றவர் இவரை கூப்பிட்டு ஐயா நீர் தவறு செய்து உள்ளீர்கள் ஒரு 'செள' நாணயம் கொடுப்பதற்கு பதிலாக ஒரு 'பிராங்க்' நாணயம் கொடுத்து விட்டீர் என்றார். ப்ராங்க் என்பது அதிக மதிப்புள்ள நாணயம்.

 இதைக் கேட்டதும் இவருக்கு மிகுந்த ஆச்சரியம் உண்டாயிற்று.. எப்படி இதன் வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதில் என்ன கஷ்டம் இருக்கிறது என் விரலினால் அதை தடவி பார்த்தால் போதும். இது இந்த நாணயம் என்று சொல்லிவிடுவேன் என்றார். உடனே இவர் தலையில் ஒரு பொறி தட்டியது. இதைப்போலவே மேடுள்ளதாக அமைக்கப்பட்ட எழுத்துக்களை உருவங்களை அல்லது ஏதேனும் அடையாளங்களை விரல்களால் தடவிப் பார்த்து இவர்கள் தெரிந்து கொள்ள கூடும் அல்லவா என்று யோசித்தார். பிறகு ஒரு பார்வையற்ற நபரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கு தான் புதிதாக கண்டுபிடித்த தடித்த பக்கங்களில் மேடுள்ள பக்கங்கள் கொண்ட எழுத்துக்களை கொடுத்து கற்பித்ததால் அவரும் வெகு விரைவாக மேடாக அமைக்கப்பட்ட எழுத்துக்களை கூட்டிப் படிக்க கற்றுக் கொண்டார்.இது கடினமானதாக இருந்தாலும் ப்ரெய்லி முறையின் முன்னோடியாகும்.

 பின்னர் வாலண்டைன் பொதுமக்களின் முன்னிலையில் அவரை படிக்கச் செய்தார். இவர் உடனே படிப்பதைக் கண்டு அங்கு உள்ள அனைவரும் வியந்தனர். தான் கண்டுபிடித்த பார்வையற்றவர்களுக்கான கல்வி புகட்டும் முறையை மென்மேலும் சீர்திருத்தம் செய்து பலரிடம் உதவி பெற்று பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்தை முதன் முதலில் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணத்தின் விதைதான் செயலெனும் விருட்சமாகிறது.
ஒரு சிந்தனை செய்து கொண்டிருக்கும் போது தான் இக்கண்டுபிடிப்பு சாத்தியமானது. எல்லோரும் நினைப்பது போல ஆப்பிள் விழுந்தவுடன் நியூட்டன் ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்கவில்லை.அதற்கு முன் எடை அதிகமுள்ள பொருள் எடை குறைவான பொருளை ஈர்க்குமல்லவா என்று சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதுதான் ஆப்பிள் மேலிருந்து கீழே விழுந்ததும் சிந்தனை மெருகேறி ஈர்ப்பு விசையை கண்டறிந்தார்.

ஆகவே சிந்தனையே கற்றலுக்கான, மறுமலர்ச்சிக்கான முதல்படி. ஆகவே நம் முன்னேற்றித்திற்கான, வாழ்க்கைக்கான சிந்தனையையும் நம் மனம் சிந்திக்கட்டும்.
சிந்திப்பவன்  மனிதன்,
சிந்திக்காதவான்  மிருகம்
சிந்திக்க பயப்படுகிறவன் 
கோழை என்பார் பெரியார். நாள்தோறும் நல்ல சிந்தனைகளை சிந்திப்போம்.அதனை செயல்படுத்தியும் காட்டுவோம்.

 நற்காலை 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment