கற்கை நன்றே-4
*மணி
தனித்துவம் வளர்ப்போம்
வாழ்க்கை ஒவ்வொரு மனிதராய் தேர்ந்தெடுத்து நமக்கு பாடம் கற்பிக்க அனுப்புகிறது. பாடங்களை நன்கு கவனித்தால் இன்னும் வாழ்க்கையை நிறைவுடன் வாழலாம்.
வெற்றி பெற்ற மனிதர்களை பின்பற்றலாம் என எண்ணி அவர்களை காப்பியடிப்பதை பலர் செய்து கொண்டிருக்கின்றனர். நீங்கள் யாரையும் பின்பற்ற முடியாது. அடுத்தவர் வாழ்வில் இருந்து நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. நல்ல செய்தியை எடுத்துக் கொள்ளுதல் என்பது நகல் எடுப்பதாக மாறிவிடக்கூடாது என்கிறார் ஓஷோ.தனித்துவத்தை இழந்துவிடாத பின்பற்றுதல் அவசியம்.
சீடன் வேறு பின்பற்றுபவன் வேறு. ஒழுக்கம் என்பது கற்றல்.. ஆங்கிலத்தில் discipline அதன் வேர்ச்சொல். அது கட்டுப்பாட்டை குறிக்கும் சொல்லல்ல.கற்றுக் கொள்ள தயாராய் இருப்பது. கற்க தயாராக இருக்கும் போது குரு உங்கள் முன் தோன்றுவார் என்கிறது சூஃபி. அறிவு இரண்டே இரண்டு விஷயங்களை செய்யும். ஒன்று மூர்க்கத்தனமாக எதிர்க்கும், இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்றும். அறிவு உங்களை பகைவனாக்கும் இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக பின்பற்ற வைக்கும்.இதில் நாம் கண்மூடித்தனமாக பின்பற்றி நம் தனித்துவத்தை பல நேரங்களில் இழந்துவிடுகிறோம்.நாம் எவ்வளவு பின்பற்றினாலும் தனித்துவத்தையும் நம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இயேசுநாதர் தன் சீடர்களுக்கு கடைசியாக சொன்னது என்ன தெரியுமா.. "என்னை உண்ணுங்கள், என்னை அருந்துங்கள்" என்னை உங்கள் ரத்தத்தில் ஓட விடுங்கள்" என்னை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்" அதன் பொருள் என்னை உள்வாங்கிக் கொள்ளுங்கள் நான் சொல்வதை ஜீரணித்து பின் உங்கள் வழியில் செல்லுங்கள். நான் செய்வது போல் செய்யாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் உள் ஒளியை இழந்து விடுவீர்கள் என்கிறார். ஒரு உண்மையான குரு உங்களுக்கு விதிமுறைகளை தர மாட்டார். கண்களை தருவார். நீங்கள் செல்ல வேண்டிய பாதையை காட்ட மாட்டார் மாறாக உங்களிடம் ஒரு விளக்கை தருவார். இந்த விளக்கை எடுத்துக்கொண்டு உன் பாதையில் போ.. இது உன் பாதையை உனக்கு காட்டும் என்று சொல்லுவார்.
உங்கள் கையில் வழிகாட்டும் விளக்கு இருந்தால் போதும். வரைபடமோ வழிகாட்டியோ தேவையில்லை. ஒரு மனிதன் விதிகளுக்காக ஏங்க மாட்டான், அவன் புரிந்துணர்வை நாடுவான். அப்போதுதான் இந்த பரந்த உலகத்தில் அவன் வழியை கண்டுபிடித்து அதில் அவன் பயணிக்க முடியும். அவனுடைய உள்ளொளியே அவனுக்கு வழியை காட்டிவிடும். புரிந்துணர்வு இருப்பதால் சுதந்திரமும் இருக்கிறது
செல்லும் பாதை சரியாக இருக்கும் போது,மெதுவாக ஓடினாலும் வெற்றிதானே..!
நற்காலை
No comments:
Post a Comment