Wednesday, 11 January 2023

படித்தது


நியாபகத்தின் அடுக்குகளின் புதிய மனிதர்களை நுழைப்பது போலில்லை, பழகிய மனிதர்களை மறப்பது. நினைவில் பதிதலென்பது முழுக்க தேர்வின் அடிப்படையில் நிகழ்கிறது. வாழ்வின் முக்கிய மனிதரென நமக்குள் விழுந்த ஒரு முகம் பிறகெப்போதும் மறப்பதில்லை. 

அவரது ஒவ்வொரு சொல்லும் பிறகு தன்னைப் பிரதிசெய்தவாறே வாழ்வெல்லாம் நிறைகிறது. வழியில் பார்க்கும் அவர்பெயர்கள், யாரோ பேசும்போது இடையில் தற்செயலாய் வந்துவிழும் அவரது சொற்கள், யாரோ ஒரு மனிதர்செய்மனிதர்செய்யும் எளியபாவனைகள் மறக்க நினைத்தாலும் நமக்குள் உறைந்தவரின் நினைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கிக்
கொண்டேயிருக்கின்றன. 

நியாபகங்களிலிருந்து வெளியேறுவது பெரும் வாதையாக இருக்கிறது. எந்த போதையும் எதையும் மறக்கடிப்பதில்லை. லாகிரிவஸ்துக்களில் அழியும் மூளையின் சிறுதுகள்கள் மறக்க நினைத்த முகங்களை இன்னும் கூர்மைப்படுத்துகின்றன. சொற்களை அடியாழத்திலிருந்து மேலேற்றுகின்றன. இழப்பின் வலியை அப்பழைய நாட்களின் விசையுடன் எடுத்து மீண்டும் கட்டமைக்கின்றன. கண்ணீர் காயங்களை ஆற்றுவதில்லை. காலம் வடுக்களை ஒருபோதும் அழிப்பதில்லை. போதைகள் எந்த தீர்வையும் உருவாக்குவதில்லை. ஆனாலும், மறப்பதற்கான முயற்சிகளும் இல்லாவிடில் வாழ்வின் சுவாரஸ்யமும் அர்த்தமிழந்துவிடும் இல்லையா?

-லதாமகன்

No comments:

Post a Comment