எலான் மஸ்க் வாரம் ஒன்றுக்கு 100 மணிநேரம் வேலை செய்வதாக பரவலாக சொல்லப்படுகிறது. இந்த 100 மணிநேரத்தில் ட்விட்டர், ஸ்பேசெக்ஸ், டெஸ்லா, போரிங் கம்பனி என நாலு கம்பனிகளை நிர்வாகம் செய்கிறார்
நேர மேலாண்மைக்காக "பொமெடெரோ உத்தி" (Pomodoro Technique) எனும் உத்தியை பயன்படுத்துவதாக சொல்கிறார் மஸ்க். இத்தாலியில் "பொமோடோரோ" என்றால் "தக்காளி" என்று அர்த்தம். அதனால் நாம் இதை "தக்காளி உத்தி" என்றே அழைப்போம்
பொமோடோரோ உத்தி என்பது 1980களின் பிற்பகுதியில் ஃபிரான்செஸ்கோ சிரில்லோ என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர மேலாண்மை முறையாகும்.
ஃபிரான்செஸ்கோ சிரில்லோ எனும் இத்தாலிய மாணவர் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, நேரத்தை திறமையாக நிர்வகிக்க ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தக்காளி வடிவ கடிகாரம் ஒன்றை பயன்படுத்தினார். அதன் மூலம் தன்னுடைய வேலை நேரத்தை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து வேலை செய்தார்.
அவர் தக்காளி வடிவ டைமரைப் பயன்படுத்தியதால், இந்த முறைக்கு "பொமோடோரோ டெக்னிக்" என்று பெயர் வந்தது.
தக்காளி உத்தி எப்படி வேலை செய்கிறது?
முதலில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்யுங்கள். இது ஒரு வீட்டுப்பாடமாக இருக்கலாம், ஒரு அலுவலக வேலையாக இருக்கலாம் அல்லது வேறு எந்த வேலையாகவும் இருக்கலாம்.
செல்போனில் டைமரை 25 நிமிடங்களுக்கு செட் செய்துவிட்டு, அந்த வேலையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இந்த 25 நிமிடங்களுக்கு எந்தவிதமான இடையூறும் இருக்ககூடாது (உதாரணமாக, மொபைல் நோட்டிஃபிகேஷன்களை பார்க்ககூடாது. பிரவுசிங் செய்யகூடாது). இந்த 25 நிமிட வேலை நேரத்திற்கு ஒரு "பொமோடோரோ" என்று பெயர்.
25 நிமிடம் வேலை செய்த பிறகு, 5 நிமிடம் கட்டாயமாக இடைவெளி எடுங்கள். இந்த இடைவேளையில் நீங்கள் எழுந்து நடக்கலாம், தண்ணீர் குடிக்கலாம் அல்லது வேறு ஏதாவது ரிலாக்ஸாக இருக்கக்கூடிய விஷயங்களைச் செய்யலாம். வேலையைப் பற்றியே யோசிக்காமல் இருப்பது நல்லது.
அவ்வளவுதான். இதன்பின் வேலையை பொறுத்து அடுத்த பொமடரோவை மீண்டும் துவக்கலாம். இப்படி ஒரு நாலைந்து பொமடரோக்களை செய்தால், ஒரு இரண்டுமணிநேரத்திலேயே பெரிய விசயங்களை சாதிக்க முடியும் என்கிறார் மஸ்க்
இப்படி 20 நிமிடம் மட்டுமே வேலை செய்வதால், கவனச்சிதறல் குறையும். வேலையைச் சின்னச்ின்ன பகுதிகளாகப் பிரிப்பதால், குறித்த நேரத்துக்குள் முடிக்க முடியும்.
2006ல் சிரில்லோ இந்த உத்தியை "பொமடரோ உத்தி" எனும் பெயரில் மின் நூலாக இலவசமாக வெளியிட்டார். அது இருபது லட்சம் முறை தரவிறக்கபட்டது. அதில் ஒருவர் எலான் மஸ்க்
தக்காளி உத்தியை பயன்படுத்தினால் நாம விரைவில் பெரிய தக்காளி தொக்கா ஆகிடலாம். என்ன கடிகாரத்தை செட் பண்ணியாச்சா?
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment