#கற்கை_நன்றே_101
மனிதர்களுக்கு சுதந்திரம் மட்டுமே தேவை.ஆனால் அதனுடன் வரும் பொறுப்புகளை ஏற்க அவர்கள் தயாராக இல்லை
-சிக்மண்ட் ப்ராய்ட்
அண்மையில் சுதந்திர உணர்வு குறித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது.. சுதந்திரம் என்பதை விருப்பப்படி நடந்து கொள்வது, சும்மா இருப்பது எனும் பொருளில் தான் புரிந்து வைத்துள்ளனர்.கட்டுப்பாடற்ற சுதந்திரம் எல்லையற்ற தவறுகளையும் செய்ய தூண்டும் விதத்திலும் அமைகிறது.
சுதந்திரம் என்பதில் சுய பொறுப்புணர்வு,வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதற்கு ஈடுபாடு,
விருப்பமான செயல்களையும் காலப்போக்கில் நீர்த்துப் போகச் செய்யும் சோம்பல்,புதுமை சிந்தனைகளில் நாட்டமின்றி சிந்தனை திருட்டு போன்ற செயல்களிலும் சிலர் ஈடுபட்டு அதுகுறித்த குற்ற உணர்வு சிறிதும் இன்றி..தனிமனித சுதந்திரம் என்பதில் கறாராய் இருக்கின்றனர்.
நம் நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தை கெடுப்பது என்று தான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பார் பெரியார்.
சுதந்திர உணர்வையும் பொறுப்புணர்வையும் சிந்தனைக் குழப்பம் செய்து கொள்கின்றனர். ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வை ஓஷோ மேற்கோள் காட்டும் காட்சி
ரஷ்யப் புரட்சி வெற்றி கண்ட அன்றைய தினம், மாஸ்கோவில் ஒரு பெண்மணி நடு ரோட்டில் நடந்து செல்ல ஆரம்பித்தாள். காவல்துறையினர் அவளிடம், "இது சரியல்ல. நீங்கள் நடுரோட்டில் நடந்து செல்லக் கூடாது!" என்றனர்.
அதற்கு அந்தப் பெண்மணி, "இப்போது தான் நாம் சுதந்திரமாகிவிட்டோமே," என்றாள்.
ஆனால், நீ விடுதலை அடைந்தாலும் கூட, போக்குவரத்து விதிகளை நீ பின்பற்றத் தான் வேண்டும்; இல்லையெனில் போக்குவரத்து சாத்தியமாகாது. வாகனங்களும் மக்களும் அவர்கள் விருப்பம் போல் போய்க் கொண்டிருந்தால், விருப்பம் போல் திரும்பிக் கொண்டிருந்தால், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகளைக் கவனிக்காமல் போக ஆரம்பித்தால், மக்கள் வெறுமனே விபத்துக்குள்ளாகி கொல்லப்படுவார்கள்.
நீங்கள் இடது பக்கமோ அல்லது வலது பக்கமோ இப்படி அந்தந்த நாட்டின் சட்டத்தின்படி நடந்து செல்வதற்கு, உங்களை நிர்பந்தம் செய்ய காவல்துறை வந்துவிடும். எனவே, யாரும் நடுவில் நடந்து செல்ல முடியாது. அதன் பின்னர், துப்பாக்கி முனையில் நீங்கள் விதிகளைப் பின்பற்றும்படி செய்ய வேண்டியதாகிவிடும் என எச்சரித்த பின் அவர் விதிமுறைகளை பின்பற்றுவார்.
சுதந்திரம் என்பதை பொறுப்புணர்வுடன் கடைபிடிக்க வேண்டும்.அப்போதுதான் சுதந்திரத்தின் மகத்துவம் நமக்கு புரியும்.ஒழுக்கம் என்பதை சுதந்திரத்திற்கு எதிரானதாய் நினையாமல் ஒவ்வொருவரின் சுயக் கட்டுப்பாடும் தான் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முக்கியமானது.
"சுதந்திரம் என்பதன் பொருள், ஒவ்வொருவரும் தமக்கு மட்டுமே எஜமானர்களாக இருக்க முடியும் என்பதுதான். பிறருக்கல்ல என்பார் காந்தி"
இனிய காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment