Monday, 16 June 2025

111

#கற்கை_நன்றே_111

"வீரர்களிடம் சிந்திக்கும் திறனையும், சிந்தனையாளர்களிடம் வீரத்தையும் வளர்க்காத சமூகத்தில் சிந்தனையாளர்கள் கோழைகளாக இருப்பார்கள், வீரர்கள் முட்டாள்களாக இருப்பார்கள்" 

-துசிடியஸ்

நன்றாக இருட்டிய சிறிது நேரத்தில், பாலத்தில் நின்று கொண்டிருந்த ஒரு கப்பற்படை வீரர், “வலது பக்கத்திலிருந்து வெளிச்சம் வருகிறது,” என்று அறிவித்தார். “அது நகர்ந்து கொண்டிருக்கிறதா அல்லது நிலையாக இருக்கிறதா?” என்று கப்பற்படைத் தலைவர் கேட்டார்.
 அதற்கு அந்த வீரர், “நிலையாக இருக்கிறது,” என்று பதிலளித்தார்.

 அப்படியென்றால், அந்தக் கப்பலுடன் பயங்கரமான மோதல் ஏற்படக்கூடிய ஒரு பாதையில் கப்பல் சென்று கொண்டிருக்கிறது என்று அர்த்தம். எங்கள் தலைவர் எங்கள் கப்பலின் சமிக்கையாளரை அழைத்து, “ ‘உங்கள் கப்பலுடன் மோதக்கூடிய ஒரு பாதையில் எங்கள் கப்பல் வந்து கொண்டிருக்கிறது; 20 டிகிரி பாதை மாறிச் செல்லவும்’ என்று அந்தக் கப்பலுக்குச் சமிக்கை அனுப்புங்கள்,” என்று கட்டளையிட்டார். 

“நீங்கள் 20 டிகிரி பாதை மாறிச் செல்லுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று அவர்களிடமிருந்து பதில் சமிக்கை இந்தக் கப்பலுக்கு வந்தது. “ ‘நான் இக்கப்பலின் தலைவன். உடனடியாக 20 டிகிரி பாதை மாறிச் செல்லவும்’ என்று சமிக்கை அனுப்புங்கள்,” என்று எங்கள் தலைவர் உத்தரவிட்டார்.

 “நானும் ஒரு கடற்படை வீரன்தான். 20 டிகிரி பாதை மாறிச் செல்லுவது உங்களுக்கு நல்லது,” என்று பதில் வந்தது. அதற்குள் எங்கள் தலைவருக்குக் கோபம் தலைக்கேறியிருந்தது. “ ‘நான் ஒரு போர்க்கப்பல். 20 டிகிரி பாதை மாறிச் செல்லவும்,’ என்று சமிக்கை அனுப்புங்கள்,” என்று அவர் கத்தினார்.

 “நான் ஒரு கலங்கரைவிளக்கம்,” என்று மின்னல் வேகத்தில் பதில் வந்தது. நாங்கள் எங்கள் பாதையை மாற்றினோம். 

அந்தக் கப்பற்படைத் தலைவரும், அந்த நிகழ்வைப் படித்த நாம் அனைவரும் அனுபவித்தக் கருத்துக் கண்ணோட்ட மாற்றம், சூழ்நிலையை முற்றிலுமாக வேறொரு கோணத்தில் நிலைநிறுத்துகிறது. மட்டுப்படுத்தப்பட்ட நம்முடைய கண்ணோட்டம் ஒரு யதார்த்தத்தை மிஞ்சி நின்றதை நம்மால் காண முடிகிறது. மூடுபனியில் பயணித்த அந்தத் தலைவருக்கு இருந்ததுபோல, நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய இக்கட்டான ஒரு யதார்த்தம் அது. 

கொள்கைகள் கலங்கரைவிளக்கங்களைப் போன்றவை. மீறப்பட முடியாத இயற்கை விதிகள் அவை. ‘த டென் கமென்ட்மென்ட்ஸ்’ என்ற தன்னுடைய  திரைப்படத்தில் உள்ளடங்கியிருந்த கொள்கைகளைப் பற்றி சிசில் பி. டெமிலி இவ்வாறு கூறினார்: “விதிகளை உடைப்பது நமக்கு சாத்தியமற்றது. விதிகளுக்கு எதிராகச் சென்றால் நம்முடைய எலும்புகள் மட்டுமே உடைந்து நொறுங்கும்.”

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment