Wednesday, 11 June 2025

108


#கற்கை_நன்றே_108

துக்கத்தை கூடுதலாக கற்பனை செய்து கொண்டு,பரிதாபப்பட்டு கொள்வதிலும் உள்ளூர ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது

-சுந்தர ராமசாமி

எப்போதும் மக்களிடம் ஒரு பெரும் சோகத்தின் கற்பனை சிலருக்கு இழையோடிக்கொண்டே இருக்கும். நம் மனம் எப்போதும் எதிர்மறை சிந்தனையையே அதிகம் நினைக்கும்.இதன் கருத்துப் படிவம்
"Catastrophic fantasy" என்கிறார்கள். பெரும் சோகத்தின் கற்பனை.நம்மை நாமே பரிதாபகரமாய் கற்பனை செய்து கொண்டு..சுய இரக்கத்திற்கு ஏங்குவது.ஒருவன் எதிர்பாராத அளவுக்கு மிக மோசமான விஷயங்கள் நடக்கும் என்று மனதில் பயத்துடன் கற்பனை செய்வதை குறிக்கிறது. 

ஏதேனும் நோய் அறிகுறியை படித்து கற்பனை செய்து கொள்வது, வீட்டுக்காரர் வீட்டுக்கு வர தாமதமானால் விபரீத கற்பனையை கட்டவிழ்த்து விடுவது என அதிக மன அழுத்தங்களை ஏற்படுத்துவது.

கோகுல் பிரசாத் ஒரு கட்டுரையில் துயரத்தை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்

பல நேரங்களில் நாம் உண்மையிலேயே துயருறுவ தில்லை. நம்முடைய துக்கம் என்பது எப்போதோ நடந்த நிகழ்வுடைய நினைவின் துயர் மட்டுமே. தற்கணத்தில் அந்தப் பழைய நினைவை மீட்டுவதால் ஏற்படுகிற கவலையை மனச்சோர்வுடன் முடிச்சிட்டுக் குழப்பிக்கொள்கிறோம். ஒன்றை நினைத்து நினைத்து பழையதைக் கற்பனையில் ஊதிப் பெருக்கிப் பெருக்கி ரணங்களின் சுகத்தில் சிறைப்பட்டிருக் கிறோம். எதனால் இப்படி நிகழ்கிறது எனில் வாழ்க்கையைப் போலவே, நினைவைப் போலவே, நினைவின் துயருக்கும் தொடர்ச்சியுண்டு என நம்புவதால்!

மனிதர்கள் நினைவுகளின் தொகுப்புதான் என்றாலும் தேவையானதை வடிகட்டவும் விலக்கவும் மனதால் இயலும் அதற்கு, நம்முடைய நிகழ்காலத் துயரம் ஒரு பிரமையே என்கிற தெளிவு வேண்டும். காலம் கடந்துவிட்டதைப் போலவே நம்மைத் துயரில் ஆழ்த்திய சம்பவமும் காலமின்மையில் புதைந்தழிந்து விட்டது, நினைவு மட்டுமே பின்தொடர்கிறது, அதன் துயரமல்ல என்கிற புரிதல் வேண்டும். நினைவை முற்றாகத் துறக்க முடியாது, ஆனால் நினைவின் அங்கமாக முயங்கியிருக்கும் ஆற்றாமையையோ துக்கத்தையோ களைய முடியும். நம்மால் ஆவது அதுவொன்றே கொஞ்சம் பயின்றாலே இதை எளிதாகச் சாத்திய மாக்கலாம் என்கிறார்.

துயரம் தண்ணீரை நிகர்த்தது. அது நிறமற்றது.ருசியற்றது. ஆனால் நிறைந்துவிடும்போது பெயரற்ற ஒரு நிறம் அதற்குச் சேர்ந்து விடுகிறது. தாகத்தின் பொழுது ருசியற்ற நீர் அளிக்கும் நிகரற்ற திருப்தியைப் போலவே மனம் தளர்ந்த பொழுதுகளில் துக்கத்தின் அவருசி நாடி நரம்பெல்லாம் நிறைந்து பரவிவிடுகிறது.ஏதோ ஒரு கணத்தில் மனம் அதனை விரும்பி ஏற்கவும் தொடங்கிவிடுகிறது என்கிறார் பா.ரா

இதனை இயல்பாக்க

உண்மை சாத்தியங்களை சிந்திக்க வேண்டும்.“Evidence-based thinking” பயிற்சி செய்ய வேண்டும்.நாம் துக்கப்பட்டால் ஊரே வந்து கர்ச்சீப் நீட்டும் எனும் சிந்தனையை நிறுத்த வேண்டும்.மென்மையான ஒன்றை நம்மால் அதிக நேரம் கைகளில் வைத்திருக்க முடியாது. மனதிலும் வைத்திருக்க முடியாது. அதை கசக்கிப் பார்ப்பதையே மனம் நாடுகிறது. அதுபோல் இல்லாமல் புது மலர் பூப்பது போல் நம் எண்ணங்களை தூய்மையாய் வைத்துக் கொள்வோம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment