#கற்கை_நன்றே_105
தண்ணீர் கொதிப்பதற்கு தான் நேரம் தேவைப்படுகிறது. ஆவியாவதற்கு அல்ல. புரிதலும் தயாராவது அப்படித்தான்
-நபிகள்
நேரம் என்பது நாணயம் அல்ல, அதை சேமிக்க முடியாது, செலவழிக்க மட்டுமே முடியும்.நேர மேலாண்மை என்பது நேரத்தை மிச்சப்படுத்துதல் மட்டுமல்ல.. குறுகிய நேரத்தில் சமயோஜிதமாய் செயல்படுவதும் கூட..நண்பர் ஒருவர் மலைப்பகுதியில் காரை இயக்கிக் கொண்டு இருந்தார்.திடீரென கார் ஆஃப் ஆனதால்..வண்டியின் ப்ரேக் வேலை செய்யவில்லை. வேகம் குறையாமல் வண்டி முன்னோக்கி வேகமாக செல்கிறது. நண்பர் பதட்டமடையாமல் ஹேண்ட் ப்ரேக்கை மெல்ல உபயோகித்து.. கியரை மாற்றி வேகத்தை குறைத்த பின் நிம்மதி அடைந்தார்.
நேரம் அளவானது என்பதை சோம. வள்ளியப்பன் ஒரு உதாரணம் தருகிறார்..
லொம்பார்ட். யு.எஸ் தேசத்தின் கால்பாந்தாட்ட குழுவின் பயிற்சியாளராக வெகுகாலம் இருந்தவர். மிகச் சிறந்த பயிற்சியாளர். ஒரு பந்தயத்தில் யு.எஸ் அணி தோல்வி கண்டபோது, பயிற்சியாளரான அவரிடம், உங்கள் அணியின் தோல்விக்கு என்ன காரணம்? என்று கேட்டனர். அதற்கு அவர், "எங்கள் அணி திறமையான அணி. சிறப்பாகவே ஆடியது. நிச்சயம் நாங்கள் மேலும் சில கோல்கள் போட்டு, வெற்றிபெற்றிருப்போம். என்ன செய்ய, அதற்குள் ஆட்டம் முடிந்துவிட்டது" என்றார்.
ஆட்டத்தின் முதல் பாதி 40 நிமிடங்கள். அடுத்த பாதி இன்னொரு 40 நிமிடங்கள். அதற்குள் யார் வெற்றி என்கிற முடிவு வராவிட்டால் மேலும் பத்து பத்து நிமிடங்கள், கூடுதல் நேரம் (எக்ஸ்ட்ரா டைம்) தருவார்கள். இதுதானே ஆட்டத்தின் விதி! அந்த நேரத்திற்குள் எவ்வளவு கோல்கள் போடுகிறோமோ அதுதானே கணக்கு. அதை வைத்துதானே வெற்றி தோல்வி முடிவுசெய்யப்படும்! குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக கோல்கள் போடும் அணிக்குத்தானே வெற்றி. நேரம் போதவில்லை என்று சொல்வதைவிட குறிப்பிட்ட காலக்குவிற்குள் முடிக்கவும் வேண்டும்.
மேலும் நேரம் ஏன் பொன் போன்றது என்கிறோம்.. உதாரணத்திற்கு
கொல்லன் பட்டறையில் இரும்புத்துண்டுகள் அங்கொன்று இங்கொன்றுமாய் இருக்கும். பணி முடியும் போது.. பெரிய இரும்புத் துண்டுகளை உள்ளேவைத்து விட்டு, சிறிய இரும்புகளை அப்படியே போட்டுவிடுவார்கள்.அதே பொறகொல்லர் பட்டறையில் ஒரு தங்கத்துகளைக் கூட வீணாக்காமல் பத்திரமாய் சேமிப்பார்கள்.நேரமும் இந்தத் தங்கத்தைப் போலத்தான் சிறிய அளவில் கிடைக்கும். அவற்றை பொன்னைப் போல தவறவிடாது பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப்பாண்டவரை தரிசித்தனர். முதல் நபரை பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறார்கள் என்றார் போப். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாக சுற்றிப் பார்க்க மாட்டீர்கள் என்றார்.
அடுத்தவர் நான் மூன்று மாதம் தங்கப் போகிறேன் என்றார். அதற்குப் நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார்.பிறகு மூன்றாமவர் எனக்கு ஒருவாரம் தான் விடுமுறை என்றார்.போப் சொன்னார்.. நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள் என்றார்.அதற்கு விளக்கமும் தந்தார்..
நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனை பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறது பிறகு பார்ப்போம் என்று எதையும் முழுமையாக பாராது வீணாக்கி விடுகிறார்கள் என்றார். இது நேர நிர்வாகத்துக்கும் நேரம் மேலாண்மைக்கும் நிச்சயம் பொருந்தும்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment