#கற்கை_நன்றே_115
Education is not the imparting of a settled body of knowledge; but the inculcation of a spirit of enquiry"
மனிதனைத் தேடவைப்பது தான் கல்வி. தேடிக்கொண்டே இருப்பது கல்வி. தேடல்தான் கல்வி
-பெட்ரண்ட் ரசல்
கல்வி குறித்த சிந்தனை உலகெங்கும் உண்டு.ஒரு புறம் அறிவுதான் என்று சொல்லும்.. மறுபுறம் மதிப்பெண்ணை முன்னிறுத்தும்.எழுத்தாளர்களின் பார்வையில் கல்வி ஒன்றை அசலானதை முன்னிறுத்தும்.அந்த வகையில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வி குறித்து படித்தவை இவை
உங்கள் கல்வி என்ன சொல்கிறது தெரியுமா? மாபெரும் சிந்தனையாளர்கள் உங்களுக்கும் சேர்த்து சிந்தித்து முடித்துவிட்டார்கள். உன்னதமான கவிதைகள் ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்டன. அழகிய பாடல்கள் ஏற்கெனவே பாடப்பட்டுவிட்டன. முக்கியமான கண்டுபிடிப்புகள் முன்பே நிகழ்ந்துவிட்டன. இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதைத் தவிர்த்து வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்கிறது.
உலகின் சிறந்த கல்வி என்ன செய்யும் தெரியுமா? இன்னொருவரின் விழிகளை எடுத்துவந்து உங்களுக்குப் பொருத்தாது. இன்னொருவரின் விடையை, இன்னொருவரின் பாடலை, இன்னொருவரின் இசையை அள்ளி எடுத்துவந்து, 'இதுவே உயர்வானது' என்று உங்களை நம்ப வைக்காது. எந்தத் தீர்மானமான விடைகளையும் அது அளிக்காது. எந்த விவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவராது. எந்தத் தீர்வையும் திணிக்காது. எந்தப் பாடத்தையும் கற்பிக்காது. எதையும் மனனம் செய்துகொள்ளுமாறு தூண்டாது.
மாறாக, தனது மெல்லிய கரங்களால் உங்கள் விழிகளை அது முழுமையாகத் திறக்கும். உங்கள் கண்களுக்குள் விழுந்துகிடக்கும் தூசியை அகற்றி உங்கள் பார்வையை அகலப்படுத்தும். உங்கள் புலன்களை வருடிக்கொடுத்து, கூர்மைப்படுத்தும். உங்கள் தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு தோழமையோடு உரையாடும். உங்கள் சமூகம் உங்கள் சாயலில் இருப்பதையும் உங்கள் பிரச்சினைகளே உங்கள் உலகின் பிரச்சினைகளாக நீண்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டும். இதைப் பற்றி எல்லாம் நீ என்ன நினைக்கிறாய் என்று உங்களைக் கிளறிவிட்டு, நீங்கள் சொல்வதைக் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும்.
உங்கள் தவறுகளை, உங்கள் தடுமாற்றங்களை, உங்கள் சறுக்கல்களை, உங்கள் குறைபாடுகளை அது ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக்கொள்ளாது. நீங்கள் எதிர்கொள்ளும் தேர்வுகளையும் நீங்கள் பெறும் மதிப்பெண்களையும் உங்களுக்கு வந்து சேரும் பாராட்டுகளையும் நகர்த்தி வைத்துவிட்டு, 'நீ மெய்யாக என்ன கற்றுக்கொண்டாய்? உன் வார்த்தைகளால் சொல், கேட்போம்' என்று புன்னகை செய்யும்.
முதுகில் மட்டுமல்லாமல், மூளையிலும் அதிகம் சுமக்காதே என்று அக்கறையோடு உங்கள் சுமையைக் கீழே இறக்கி வைக்கும். உங்கள் உடலும் உள்ளமும் பஞ்சுபோல் லகுவானதை உறுதிசெய்துகொண்ட பிறகு, புதிய சிறகுகளை எடுத்துவந்து உங்கள் முதுகில் செருகிவிடும். 'உன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்தையும் கடந்துசெல்' என்று உங்களை மேலே, மேலே உந்தித் தள்ளும்.
முதல் முறையாக ஒரு பறவையைப் போல் சிறகடித்து நீங்கள் பறக்க ஆரம்பிப்பீர்கள். உங்களுக்கான புத்தம் புதிய திசைகளை நீல வானம் காண்பிக்கும். புதிய பயணங்களை நீங்கள் மேற்கொள்ளும்போது புதிய வெளிச்சம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த வெளிச்சத்தைத் திரட்டிக்கொண்டு மெய்யான அறிவை நீங்கள் கண்டடைவீர்கள். அந்த அறிவு ஏற்கெனவே கண்டறியப்பட்டதாக இல்லாமல் இந்த ரோஜாவைப்போல் புதிதானதாக இருக்கும்.
ஒரு மலரை மலராகக் காண்பது எப்படி என்பதை உணரும்போது, ஒரு மனிதனை மனிதனாக மட்டும் காணும் திறனை நீங்கள் பெறுவீர்கள். இந்த அதிசயத்தை எது நிகழ்த்துகிறதோ அதுவே உலகின் சிறந்த கல்வி, உன் பாடலை நீதான் பாடவேண்டும் என்கிறார் கபீர். உன் தேடல் உன்னிடமிருந்து புறப்பட்டு வரட்டும் என்கிறார் புத்தர்.
நான் எழுப்பியவை என் கேள்விகள்; உன்னுடையவை எங்கே என்கிறார் சாக்ரடீஸ். உன்னதமான வரிகள் உன்னிடமிருந்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கின்றன என்கிறார் தாகூர். நான் சொல்லாமல் விட்ட ஆயிரம் கதைகளில் ஒன்றையேனும் சொல்லேன் கேட்போம் என்கிறார் டால்ஸ்டாய். நானும் அவர்களோடு சேர்ந்து காத்திருக்கிறேன். என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார் ஜேகே.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment