#கற்கை_நன்றே_109
கேள்வி இருள்,
பதில் வெளிச்சம்.
-செழியன்
நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் இசிடார் ஐசக் ராபி, "பெரிதாக எதுவும் திட்டமிடாமலேயே என் தாயார்தான் என்னை ஓர் அறிவியலறிஞராக ஆக்கினார். புரூக்லினில் உள்ள ஒவ்வொரு யூதத் தாயாரும் தன் குழந்தை, பள்ளியிலிருந்து திரும்பியவுடன், 'இன்று ஏதேனும் கற்றுக் கொண்டாயா?' என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் என் தாயாரோ 'இஸ்ஸி, இன்று ஏதேனும் ஒரு நல்ல கேள்வியைக் கேட்டாயா?' என்று என்னிடம் கேட்பார்.
அந்த வித்தியாசம் — நல்ல கேள்விகளைக் கேட்டதுதான் என்னை ஓர் அறிவியலறிஞர் ஆக்கியது," என்று கூறினார். "ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது?" என்று ஒருவர் கேட்டார். அன்றிலிருந்து உலகம் முற்றிலுமாக மாறியது.
சிராவஸ்தி நகரில் இருந்த ஜேதவனத்தில் வேதியர் உருவில் வந்த தேவனுக்கும் புத்தருக்கும் இடையில் வினா-விடை வடிவில் நடந்த உரையாடல் நம் சிந்தனைக்கு விருந்து என்கிறார் தமிழருவி மணியன் ஒரு கட்டுரையில்..
கூர்மையான வாள் எது?
கோபத்தில் வெளிப்படுத்தும் சொல்.
கொடிய விஷம் எது?
பேராசை
கொடிய நெருப்பு எது ?
காம உணர்ச்சி.
துளைக்க முடியாத கவசம் எது?
பொறுமை
தலைசிறந்த ஆயுதம் எது?
ஞானம்.
மிகச் சிறந்த பொக்கிஷம் எது?
ஒழுக்கம்.
மிகக் கொடிய காய்ச்சல் எது?
துவேஷம்.
இருளடர்ந்த இரவு எது?
பேதைமை.
நிகரற்ற நன்மை அடைபவன் யார்?
மற்றவர்களுக்குத் தானம் செய்பவன்.
அதிகமாக இழப்பவன் எவன்?
பதிலுக்கு உபகாரம் செய்யாதவன்.
உண்மையில், அனைத்துக் கண்டுபிடிப்புகளும் கண்டறிதல்களும் ஒரு கேள்வியில் தான் துவங்குகின்றன.
எல்லா விடைகளும் உங்களிடம் இல்லாவிட்டால் பரவாயில்லை. இங்கு முக்கியமான விஷயம், உங்களிடம் சரியான கேள்விகள் இருக்கின்றனவா என்பதுதான். உங்கள் அறிவு காத்துக் கொண்டிருக்கிறது. கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment