#கற்கை_நன்றே_107
முன் தயாரிப்பு இன்றி ஓட்டப்பந்தயத்தில் கலந்து உள்ளீர்களா?அப்படியானால் நீங்கள் முட்டாள் என்று அர்த்தம். எப்போதும் ஒரு செயலில் இறங்கும் முன் உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
ஜான் லீச் என்பவர் சொல்கிறார்.. எப்போதும் மாற்றுப் பாதைகளையே யோசித்துக் கொண்டிருந்தாலும் மனக்களைப்பினை தோற்றுவித்து.. இதைச் செய்வதால் என்ன லாபம்? என்கிற கேள்வியினை அடுக்கடுக்காய் நம்மிடம் கேட்டுக் கொண்டே இருந்து.. தொடர்ந்து செயல்படலாம் என்பது மாறி.. அதை 'விட்டுவிடலாம்' என நினைக்கும் அளவுக்கு மனம் செயலிழந்து விடுகிறது.
யோசனைகளை செயல்படுத்தும் முன் அதில் உள்ள சவால்களையும் தடைகளையும் தாங்குவதற்கான மனநிலை உருவாக்க வேண்டும். அதனால் தான் பிறரிடம் யோசனை கேட்க வேண்டும். ஒரு மூளையால் சிந்திப்பதைக் காட்டிலும் இரு மூளையால் சிந்தி என்கின்றனர். பிறர் கூறும் யோசனைகள் நம்மிடம் ஒரு தெளிவை ஏற்படுத்தும். புதிய சிந்தனை ஊற்றெடுக்க வைக்கும்.
பிறரின் யோசனைக் கேட்க நினைக்கும் போதே நம்மிடம் ஒரு பணிவு பிறக்கிறது. பணிவைக் குறிக்கும் humble எனும் வார்த்தை humus எனும் வார்த்தையிலிருந்து வந்தது.அதன் பொருள் மண், மண்ணைச் சார்ந்தது.அதுவே human, humanity எனும் சொற்களுக்கும் வேர்ச்சொல்.பணிவுள்ளபோதே மனிதனாகிறாய். மண்ணின் இயல்பை பெறும்போதே பகட்டின்றி பணிவுள்ளவனாகிறாய் என்று அர்த்தம்.பிறரிடம் ஆலோசனை கேட்கும்போதே நம் கர்வம் உடைகிறது.எது சரியாக வரும் எனும் முடிவுக்கு வர முடியும்.
யோசனைகளை யார் மூலம் பெறுவது?
ஒரு முறை டாட்டா குழுமத்தின் தலைவரான ஜே ஆர் டி டாடா அவர்களை சந்திக்க ஒரு நபர் பலமுறை முயற்சி செய்து கடைசியில் அவரை சந்திக்க வாய்ப்பு பெற்றார்.
அந்த நபர் டாட்டாவிடம் உப்பை விற்குமாறு கூறினார். டாட்டா விற்கு உப்பை விற்பதில் பெரிதாக ஆர்வமில்லை.
ஆனால் அந்த நபர் உப்பின் விற்பனை குறித்து பல்வேறு தகவல்களை கூறி டாட்டாவை வியக்க வைத்தார். உப்பானது இந்திய சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப்படும் ஒன்று. அதன் தேவையானது என்றும் இருந்து கொண்டே இருக்கும். எனவே உப்பினை விற்றால் அதிக பணம் பார்க்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
அந்த நபரின் யோசனையை கேட்ட டாட்டா உடனே உப்பினை விற்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார். இன்று டாட்டா உப்பு இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் உப்பு. இந்தியாவில் உப்பு விற்பனையில் 17 சதவீதம் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது.
எனவே யோசனைகளை நாம் யார் மூலம் பெற்றாலும் அதனைச் சிந்தித்து செயல்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்.
இதனை இறுதி வரை படிக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இறுதிவரை படித்த உங்களுக்கு நன்றி
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment