Tuesday, 17 January 2023

கற்கை நன்றே-1*மணி



இமயமலை ஏறும் பயணத்தில் இருவர் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு மனிதன் உறைந்து  கிடப்பதை பார்த்து ஒருவர் நின்றார். மற்றவர்  நாம் முன்னேற வேண்டிய இலக்கு மிக தூரம். உறைபனி அதிகம் என்பதால் இந்த மனிதனுக்கு உதவி செய்வது மிகவும் கடினமாதலால்  நாம் முன்னேறி செல்வோம் என்றார்.
ஆனால் ஒருவர் மட்டும் வேண்டுமென்றே பிடிவாதமாக இருந்து கொண்டார். மற்றவர்  மேலே ஏறிச் செல்கிறார்..

 இவரும் பத்து நிமிடங்கள் வரை அவரின் உடலை வெப்ப படுத்தி பார்த்தார்.. முடியவில்லை. இறந்து கொண்டிருக்கும் அந்த மனிதனை அப்படியே விட்டு விட்டுச் செல்ல மனமில்லாமல் அந்த மனிதனை வெப்பம் ஏற்றுவதற்காக தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார். அந்த மனிதனின் உடற்பயிற்சியால் அவருடைய உடலின் வெப்பம் அதிகரித்து வெதுவெதுப்பு கூடியது.இதனால் சிறிது நேரத்தில்  அந்த புதிய மனிதன் உயிர்த்தெழுந்தார்.

 அந்த மனிதரை சுமந்து கொண்டு சென்றதால் சுமக்கும் பயணிக்கும் ஒரு வெதுவெதுப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் இரண்டு கி.மீ தொலைவு சென்ற பின்பு வழியில் ஓரமாக இன்னொரு உடல் கிடப்பதை கண்டார்கள். அது அப்போது உதவி செய்ய வேண்டாம் என்று மறுத்த சக பயணியினுடையது. உண்மையில் அவர் இறக்கும் அளவுக்கு உறைந்து போய் கிடந்தார். அந்தப் புயலுக்கு எதிராக தனியாக நின்று போரிட்டு வெப்பப் படுத்திக் கொள்ள அவரால் முடியவில்லை.

இவ்வாறாக இக்கதை முடியும். இதில் உதவி செய்வது ஒரு கருணையின் ஊற்றாக மனிதனிடத்தில் சுரப்பதை கூறியிருக்கும். அது சுரக்கும் போது செய்தால் மட்டும் உதவி செய்யும் மனம் இருக்கும். இல்லையேல் மனது தடுத்துவிடும். அதனால்தான் கர்ணன் இடது கையில் கொடுப்பதை வலது கைக்கு மாற்றுவதற்குள் மனம் மாறிவிடும் என்றார்.ஒரு மழலையர் வகுப்பில் பென்சில் கேட்டால் விரைந்து உதவும் தெய்வக்கரங்களை பார்க்கலாம் என்று படித்த வரி நினைவுக்கு வருகிறது.இளமையில் இருக்கும் உதவி செய்யும் குணம் கால ஓட்டத்தில் சுண்டிவிடுகிறது.

செல்வந்தரின் குழந்தை ஒன்று குளத்தில் விழுந்துவிடுகிறது. ஓடிச்சென்று ஒருவர் காப்பாற்றுகிறார். தன் பிள்ளையின் உயிரைக் காப்பாற்றிய அவருக்கு பெரும் தொகை கொடுக்க நினைத்து அந்த இளைஞனை மாலை வீட்டுக்கு வரச் சொல்கிறார்.அதன் பின் வீட்டுக்கு வந்தவுடன் ஒவ்வொன்றாய் நினைத்து நினைத்து..ஏன் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டுமென மனசாட்சியின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் இறுதியில் நூறு ரூபாய் தருகிறார்.

உதவி செய்ய நினைத்தால் உடனே உதவிடவும்

நற்காலை வணக்கம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment