நம்மை அறிவோம்
மனித மனம் எப்போதும் அடுத்தவரையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கும்.ருத்ரன் எழுதுவார் வாழ்க்கை ஒரு தேடல் என்பது முழுதாய் பதிவதில்லை.எதைத் தேடுகிறோம் என்பதை புரிந்து கொண்டால் பிரச்சனைகளும் இல்லை..கேள்விகளும் இல்லை.
தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறான் என்ற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.ஏன் அவனுக்கு மட்டும் அப்படி ஒரு வாழ்க்கை..அவன் அப்படி இருக்கிறான் நான் மட்டும் இன்னும் இப்படி இருக்கிறேனே..என்று.
வீண் மன உளைச்சலை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.
ஒரு ஊரில் அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளின் முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் போர்வீரர்கள்.
இதுகண்ட கழுதைகள், இவையும் நம்மைப் போல் தான் இருக்கின்றன. இவைகளுக்கு மட்டும் என்ன கொள்ளு, புல்லு, தேய்ப்பு, சிறப்பு! நமக்கும் இம்மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என நம் எஜமானரிடம் நாம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தன. சற்று நேரத்திலேயே வேறொரு குதிரைப்படை அங்கே வந்தது; போர் மூண்டது. பல குதிரைகளுக்கு குத்தும் வெட்டும் விழுந்தன. தலை, கால்கள் முறிந்தன.
இதையும் பார்த்த கழுதைகள் - நமக்குக் கொள்ளும் வேண்டாம், இந்தக் குத்து வெட்டும் வேண்டாம் என்று, உடனே தமக்குள் முடிவு செய்து கொண்டன. நாம் எவ்வளவுக்கெவ்வளவு இன்பங்களை எதிர்பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும் ஏற்படும் என்பதை கழுதைகளால் அறிய முடிந்தது.
பெரும்பாலானோர் தாங்கள் முன்னேற முடியாமல் போவதற்குத் தங்களைச் சுற்றி இருக்கும் மக்கள்மீதும் சூழல்கள்மீதும் எப்போதும் குறைகூறுகின்றனர். ஆனால் மேன்மக்கள் எப்போதும் தங்களுக்குள் உள்ள திறமை கண்டுபிடித்து மெருகேற்றுகின்றனர்.
வெற்றி பெற்றவர் அல்லது மதிப்பு வாய்ந்தவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அவர்களின் தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் தெரியும். வெறும் ஆசைகளை மட்டும் வைத்துக் கொண்டு முயற்சி செய்யாவிட்டால் பலனிலை."சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்துவிட்டு..அதிர்ஷ்டம் இல்லையென்று அலுத்துக் கொண்டார்" என்பார் பட்டுக்கோட்டை.
தெளிவான இலக்கின்றியும், உழைப்பின்றியும் அடுத்தவர் மதிப்பை எண்ணி பொறாமை கொள்ளாமல்..நம் நிலையை உயர்த்திக் கொள்ளலாம்.நாம் ஈடுபட்ட துறையில் புதுமைகளை செய்வோம்.உழைப்பை செலுத்துவோம்.மதிப்பும் மரியாதையும் தானாய் வரும். மற்றவர்க்கு கிடைக்கும் மதிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் முதலில் நம் இலக்கை அறிவோம். உழைப்பை முதலீடு செய்வோம்.
இலாபமாய் நற்பெயரை ஈட்டுவோம்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment