Sunday, 22 January 2023

கற்கை நன்றே-5*மணி



கற்றல் ஒரு கலை

யானுஷ் கர்ச்சாக் "நான் மீண்டும் சிறுவனாகும்போது" எனும் புத்தகத்தில்  கூறியிருப்பது 

"ஜன்னல் வழியாக வெளியே பார்க்குமாறு ஒரு மாணவனை நிர்ப்பந்திக்கிறபோது அவன் அறிகிற விஷயங்களை விட கரும்பலகையை பார்க்கும்போது அவன் அதிகம் அறிந்து கொள்கிறான் என்பது ஒருவருக்கும் தெரியாது என்று எழுதினார். அதிகம் பயனுள்ளதும் அதிக முக்கியத்துவமானதும் எது? கரும்பலையில் அடைக்கப்பட்டிருக்கிற உலகமா? அல்லது ஜன்னல் கண்ணாடிக்கு வெளியே இருந்து செல்லும் உலகமா?..டோட்டோசானின் புத்தகத் தலைப்பு நினைவுக்கு வருகிறதல்லவா? மனித ஆன்மாவை பலவந்தப்படுத்தாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் பெறுகிற இயற்கையான வளர்ச்சியை, அவனது சிறப்பியல்புகளை, ஆர்வங்களை தேவைகளை கூர்ந்து நோக்குங்கள் என்கிறார்.

யானுஸ் கர்ச்சாக் வார்சா நகரின் யூதர் பகுதியில் உள்ள அனாதை விடுதியில் ஆசிரியராக பணியாற்றினார். ஹிட்லர்வாதிகள் குழந்தைகளை நெருப்பிலிட்டு பொசுக்க உத்தரவிட்டனர். குழந்தைகளை விட்டுவிட்டு தப்பித்து செல்லலாம் அல்லது குழந்தைகளுடன் சேர்ந்து மடிந்து போகலாம்..இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டபோது அவர் நான் மனசாட்சியை விற்று பிழைக்க மாட்டேன். குழந்தைகளுடன் சேர்ந்து சாவை நோக்கி போவேன் என்றார். மரண பயம் சிறுவர்களின் இதயத்தை தொலைக்காமல் பார்த்துக் கொண்டார். குழந்தைகளுக்கு உண்மையாக போதகராக விளங்க வேண்டுமானால் அவர்களுக்கு நமது இதயத்தை கொடுத்து விட வேண்டும் என்று கூறினார்.

நடைமுறை உலகம் மிகவும் வித்தியாசமானது. குழந்தையின் தலையில் எவ்வளவு அறிவை திணிக்க முடியுமோ அவ்வளவுவையும் திணித்து விடுவது இன்றைய போதனை எனப்படுகிறது. போட்டித் தேர்வுக்கான சிறந்த மாணவனை உருவாக்குவதும், தேர்விக்குரிய மதிப்பெண்ணை அவனை எடுக்க வைப்பதும் இன்றைய கல்விக்கூடங்களின் முக்கியபணி என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

ஒருமுறை ஐரோப்பிய வேட்டைக்காரர் ஆப்பிரிக்க காட்டில் வழியை தொலைத்து விட்டு அலைந்து கொண்டிருந்தார். அந்த காட்டில் ஒரு சிறு குடிசையை பார்த்து ஆச்சரியமடைந்து..இந்த கிராமம் எந்த வரைபடத்திலும் இல்லையே என்று கூறிவிட்டு,அங்கிருந்த மக்களைப் பார்த்து நாகரீகம் இல்லாமல் இருக்கிறீர்களே? என்று அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அதற்கு அவர்கள் நீங்கள் எங்களை கண்டுபிடித்து விடுவீர்கள் என்று பயந்து கொண்டிருக்கிறோம். உங்கள் நாகரீகம் உள்ளே நுழையும் போது எங்கள் நிலைமை பரிதாபமாக இருக்கும். இயற்கையை மேம்படுத்துகிறேன் பேர் வழி என்று நீங்கள் முயற்சி செய்யும்போது இயற்கை தொலைந்து விடுகிறது. இயற்கையை மேம்படுத்த செய்யும் முயற்சியில் அதனை ஊனமாக்கிவிடுகிறோம். அப்படித்தான் ஒவ்வொரு குழந்தையையும் ஊனமாக்கிவிடுகிறோம்.

அந்த காலத்து படிப்பு படித்தவர் என்று ஆச்சரியத்தோடு அன்றைய தலைமுறையினரை பார்த்தவர்களை நாளைய வருங்காலமும் இப்போதுள்ள தலைமுறையை பார்க்கும். உலகமயத்தினால் நாளை இன்னும் கல்வி வணிகம் ஆகலாம். 
குழந்தை உயிருடன் இருக்கிறது.. உயிர்ப்பு இல்லை.கல்லறையின் மேலே எவ்வளவு அழகுபடுத்தினாலும் உள்ளே இருக்கும் மனிதன் செத்துத்தான் கிடக்கிறான் என்கிறார் ஓஷோ.

ஷூவாங் ட்சுவின் செய்தி என்னவெனில் இயற்கையை அனுமதியுங்கள் .இயற்கையை அதன் போக்கில் விட்டால் போதும் என்கிறார்.குழந்தைகளையும் கூட.!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment