உட்காட்சி தோன்றல்
உளவியலில் இந்த சொல் மிக முக்கியமானது.திடீரென மின்னல் வெட்டு போல் மனதில் வெட்டும்.அதுவே நம் அறிவின் ஊற்றுக் கண்ணாக இருக்கும். மனிதனின் அறியாமைதான் கேள்விகளை உருவாக்குகிறது. அந்த அறியாமைதான் பதில்களையும் உருவாக்குகிறது.ஒரு மனது கேள்வி எழுப்பும்..இன்னொன்று அதற்கான பதிலை ஆராய முற்படும். ஆழ்மனதிலிருந்து மேலெழுவது போல் வந்து அகக்கண்ணை திறக்கும் கணம் தான் உட்காட்சித் தோன்றல்.
எழுத்தாளர் மருதனின் ஒரு கட்டுரையில் படித்த கதை நினைவுக்கு வருகிறது. "எடிசன் மின் விளக்கினை தயாரிக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நேரம். மின் விளக்கின் மையத்தில் மெல்லிய மூங்கில் இலை வைக்க வேண்டிய தேவை இருந்தது.ஆகவே அது போல் மெல்லிய மூங்கில் சேகரிக்க ஜேம்ஸ் ரிகால்டன் எனும் புவியியல் ஆசிரியரை அனுப்ப முடிவு செய்தார்.1500டாலர் ஊதியமும் அளிப்பதாக கூறினார்.அன்று முதல் ஜேம்ஸ் கடல் வழியே இங்கிலாந்து, சூயஸ்,இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சேகரிப்பட்ட 14 வகை மூங்கில்களை கப்பலில் அனுப்பினார்.
ஒருவருடம் கழித்து பெருமிதத்துடன் எடிசனை பார்க்கச் சென்ற போது அவர் சாதாரணமாய் இருந்தார். இவர் அந்த மூங்கில் தேடிய சாகசங்களை சொன்னார். எடிசன் அதற்கு நிதானமாக இனி அது தேவைப்படாது என நினைக்கிறேன்.
நீங்கள் வரும்வரை எப்படி சும்மா இருப்பது என்பதை யோசித்துப் பார்த்தேன். அப்போது செயற்கை கார்பன் ஒன்றை கண்டுபிடித்தேன். ஆச்சர்யமாய் அது மூங்கிலை விட சிறப்பாய் இருந்தது எனக்கூறி அவரை ஆசுவாசப்படுத்தினார். அவரின் உட்காட்சி தோன்றல் சமயோசிதமாய் அமைந்தது தெரிகிறது.
சரி உட்கார்ந்து யோசித்தால் வருமா.. வராது.திடீரென சிந்தனை ஒளிரும். அதனை நழுவவிடாமல் பிடித்துக் கொண்டு உடனே செய்ய வேண்டிய காரியத்தை செய்து விட வேண்டும்.
மனம் அமைதியாய் இருக்கும் போது தெளிந்த நீரோடையில் சிந்தனை முத்துக்கள் நம் மேல்மனதுக்கு தெரியும்.
மனம் கேள்வி கேட்பதை நிறுத்தும் போதுதான் பதில்கள் கிடைப்பதாய் புத்தர் கூறுகிறார்.உண்மையில் நமக்கு கேள்வி கேட்பதில் இருக்கும் ஆர்வம் பதில் கண்டுபிடிப்பதில் இல்லை.கேள்வி மட்டும் கேட்பதில் தேடல் இருக்காது.ஆனால் பதிலையும் தேடும் போது அனுபவமும் நம்பிக்கையும் கிடைக்கிறது.புதியனவற்றை கண்டறிகிறோம்.மனம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.
எடிசன் செய்தது அதைத்தான். மூங்கில் வரத்தாமதமானதால் மனம் விடை தேட ஆரம்பித்தது. தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது புறத்திற்கு மட்டுமல்ல..அகத்திற்கும் தான்.பல்பு கண்டுபிடித்தது எடிசனாய் இருந்தாலும் பல்பு கிடைத்தது ஜேம்ஸ்க்குத் தான்.
நற்காலை
No comments:
Post a Comment