புதிய கோணம்
There is no value for if and but என்று நண்பர் ராஜ்குமார் அவர்கள் ஒரு முறை என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார். கடந்த காலம் இப்படி இருந்திருந்தால்
நாம் எப்படி இருந்திருப்போம், எப்படி எல்லாம் நாம் முன்னேறி இருக்கலாம் என்று நினைப்பதுண்டு. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமற்றது, மதிப்பும் அற்றது, நேரவிரயம் தான். கற்பனையில் வேண்டுமானால் நாம் கோட்டை கட்டிக் கொள்ளலாம்.. ஆனால் நிதர்சனம் எப்போதும் நமக்கு கசப்பைத் தான் தருகிறது
ஆனால் வரலாற்றில் சில கதைகள் மாறி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை மாலன் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்..
துரோணர் தன் சீடர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் போது மரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த கிளி பொம்மையின் கண்ணை பார்த்து அம்பெய்த வேண்டும் என்பது பயிற்சி ஆனால் அர்ஜுனனின் அம்பை முந்திக்கொண்டு வேறொரு அம்பு கிளியின் கண்ணை தைத்தது.. அனைவரும் திரும்பிப் பார்க்கும் போது பின்னால் ஏகலைவன் நின்று கொண்டிருந்தான்.
யாரிடம் இந்த வித்தையை கற்றாய் என்று துரோணர் கேட்டபோது.. உங்களிடம் தான் குருவே என்றான் ஏகலைவன். அப்படியா? அப்படியானால் குருதட்சனை எங்கே?
என்ன கொடுக்கட்டும் குருவே? உனது வலது கை கட்டை விரலைக் கொடு என்றார். உடனே வாள் எடுத்தான், வெட்டினான், புன்னகையோடு நீட்டினான். அனைவரும் அதனை பார்த்து வியந்துதான் போனார்கள்.
இந்த காட்சி முடிந்ததும் அனைவரும் திருப்தியோடு திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். சில அடிகள் கடந்ததும் திடுக்கிட்டு நின்றார்கள். எதிரே பாம்பு ஒன்று படம் எடுத்து சீறிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது.. அம்பொன்று வந்து அந்தப் பாம்பின் படத்தை கிழித்தது. யார் என்று மீண்டும் திரும்பிப் பார்த்தார்கள் ஏகலைவன் தான். துரோணர் திடுக்கிட்டு கேட்டார், "உனக்கு தான் வலது கை கட்டை விரல் இல்லையே எப்படி?
ஏகலைவன் சிரித்துக்கொண்டே சொன்னான் குருவே நான் இடக்கை ஆட்டக்காரன் என்று..
எளியோர்கள் வரலாற்றில் ஜெயித்திருந்தால் வரலாறு நிச்சயம் மாறி இருக்கும் அல்லவா.. இந்த கதையைப் படிக்கும் போது அதுதான் யோசிக்க தோன்றுகிறது
நற்காலை
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment