கற்றதும் பெற்றதும்-63
*மணி
அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளை தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும் -க.நா.சு
#நூலிலிருந்து
-நாகா
வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் எல்லாருமே உடனிருப்பார்கள். ஒருகட்டத்திற்கு பிறகு யாருமில்லத பாதையில் தனித்து விடப்படுவோம். நம் ரசனைக்கெற்ற நண்பர்கள் அமைவதும், வழிகாட்ட நல்ல நூல் ஆர்வலர்கள் அமைவது கடினம். அனுபவமும் அப்படித்தான். அனுபவத்தை டிபன் பாக்ஸில் இருப்பதை போல் பகிர்வதாக நினைக்கிறார்கள்.தானாக தன் அனுபவத்தில் அறிந்த உண்மையை எந்த வித அதிகப்படியும் இல்லாமல் தன் அனுபவத்தையும் அதனோடு குழைத்து பகிரும்போது அது இன்னும் மெருகேறுகிறது.
அயல் நாட்டு புத்தகம் ஒன்றில் படித்தேன்.ஒரு திருமண விழாவிற்கு பரிசாய் ஒரு புத்தகம் வந்தது.அதை அவர் அலமாரியில் தூக்கிப்போட்டுவிடுகிறார். பின் வாழ்வில் பல்வேறு துயரங்களை கடந்து அறுபதை நெருங்கும்போது அப்புத்தகத்தை எடுத்துப்பார்க்கிறார்.தான் பட்ட கஷ்டங்களுக்கான அத்தனை வழிமுறையும் அப்புத்தகத்தில் இருந்தனவாம்.எவ்வளவு இழந்துவிட்டோம் என வருந்தினாராம்.அதுபோல் நல்ல படிக்காத புத்தகங்களே நம் தேடலை,ஞானத்தை ஒளித்து வைத்திருப்பவை.
அவ்வகையில் கோவையைச் சேர்ந்த நண்பர் நாகா என்கிற நாகச்சந்திரன் எழுதிய இப்புத்தகம் புத்தக வாசிப்போடு மனிதனையும் வாசிக்க வைக்கிறது.4 பாகங்களாக வகைப்படுத்தி இருக்கிறார்
#நூலும் நானும்
இத்தலைப்பின் கீழ்
புத்தகத்திற்கும் தனக்குமுள்ள உறவை பதினெட்டு கட்டுரையில் கூறியிருக்கிறார்.மனித மனத்தின் மாற்றத்தின்,எண்ணங்களை மேம்படுத்தும் நோக்கில் தான் சிலாகித்த புத்தகங்களை மேற்கோள் கூறுகிறார்.
சிறுவயதில் பேருந்து பயணத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் வாசகங்களை பார்ப்போம்.அதை வைத்து ஆட்டோக்காரர் கட்டுரை சுவைப்பட எழுதியிருக்கிறார்.முதன்முதலில் நல்ல வரிகளை ஸ்டேட்டஸாக வைத்தவர்கள் ஆட்டோக்காரர்களே. "நீச்சல் அடி ஆற்றுக்குள் போய் வரலாம்.எதிர்நீச்சல் அடி, வரலாற்றுக்குள் போய்விடலாம்"
*கற்றுக்கொள்வதை என்றும் நிறுத்திவிடாதே
வாழ்க்கை நமக்கு பாடம் புகட்டுவதை என்றும் நிறுத்துவதே இல்லை
*மனிதனால் மனிதனாக மட்டும் வாழமுடிவதில்லை
*கண்ணீரை துடைக்க கர்சீப், துன்பத்தை துடைக்க பிரெண்ட்ஷிப்...
*நேற்றை இன்றை எருவாக்கு
நாளை என்பதை உருவாக்கு
என ஆட்டோக்காரர்களின் அன்றைய தன்னம்பிக்கை வரிகள் மிளிர்கின்றன.இன்றும் பெரியாரிய சிந்தனையும், கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளையும் காணலாம்.
நல்ல படிப்பாளிகளாவும் இருப்பார்கள். இதற்கு சிறந்த உதாரணம் லாக்கப் நாவல் எழுதிய சந்திரகுமார்
படிக்கும் பழக்கம் கட்டுரையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் சிந்தனையையும், கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் மனம் கவர்ந்த வரிகளை பகிர்ந்துள்ளார்.
#நூலும் அனுபவங்களும்
இப்பகுதியில் எட்டு கட்டுரைகள் புத்தகம் வாசித்த அனுபவத்தை, தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு நோக்குகிறார்.Freedom at midnight, ஷிவ் கோரா எழுதிய "உங்களால் வெல்ல முடியும்". திருக்குறள், எஸ்.ராவின் "இலக்கற்ற பயணி",
அரசியல் கட்டுரைகள், நாஞ்சில் நாடனுடன் நெருக்கமான அனுபவத்தையும், குங்குமத்தில் தொடராய் வந்த " கைம்மண் அளவு" புத்தகம் குறித்தும் எழுதியுள்ளார்.
#நூலும் பெருந்தகையும்
இப்பகுதியில் பதினொரு கட்டுரைகள் உள்ளன.எல்லார் வீட்லயும் டிக்ஸ்னரி இருப்பதுபோல எப்படியும் சத்திய சோதனை புத்தகம் வாங்கி வைத்திருப்போம். அதுதான் அந்த புக்குக்கு நாம் கொடுக்கும் சத்தியசோதனை. ஆனால் நாகா இதை படித்துவிட்டு சபர்மதி சென்ற அனுபவத்தை அருமையாய் பகிர்ந்துள்ளார்.
அப்துல்கலாமை பார்த்த இரு தருணங்களையும் சுவாரஸ்யமாய் சொன்னதுடன் அவரின் புத்தகங்களின் தனக்கு பிடித்த வரிகளை பகிர்ந்துள்ளார்.பகத்சிங் குறித்து புத்தகம் தனியே எழுதுமளவு நிறைய தகவல் தந்துள்ளார்.பாரதி குறித்த கட்டுரையில் அவரின் பாடலின் இசையையும்,ராகத்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து நா.முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், விவேகானந்தர்,ஏ.ஆர்.ரகுமான், கண்ணதாசன்,சுஜாதா குறித்த கட்டுரைகள் நன்றாக உள்ளன.
#நூலும் வளமும்
இப்பகுதியில் 11கட்டுரைகள் மற்றும் வாசித்த நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளார்.
"ஏடாயிரம் படி-எல்லாவிதமான செய்திகளையும் அறுந்துகொள்ள நிறைய நூல்கள் படி என அறியாத வரிகளை ஒவ்வொரு கட்டுரையின் முகப்பில் ஆரம்பிப்பது அறிவு சுரங்கத்தில் நுழையும் உத்வேகம் தருகிறது.எஸ்.ரா வின் வீடில்லா புத்தகங்கள்,சுயமுன்னேற்ற நூல்களின் கருத்துகள்,சமஸின் சாப்பாட்டு புராணம்,திருக்குர் ஆன் என ஒரே புத்தகத்தில் பல புத்தகங்களை படித்த திருப்தி தருகிறது.
வளம்பெற வாசிப்போம் கட்டுரையில் புத்தகத்தினால் புரட்டிப் போட்டவர்களை பற்றி குறிப்பிட்டு,வாழ்வை மாற்றிய புத்தகத்தை கூறுகிறார்.தான் படித்த கருத்துக்களை மற்றவர்க்கு பகிர்ந்திருக்கிறார்.வாட்ஸ் அப்பில் தொடராய் எழுதி அதை புத்தகமாக்கியது பாராட்டுக்குரியது.டவுன்லோட் செய்வது ஒன்றுதான் வாசிப்பு, சேர்ந்தார்போல் ஒரு பத்தியை டைப் செய்ய கடினப்படும் இன்றைய தலைமுறைக்கு இதுபோல் வாசிப்பு அனுபவத்தை பகிர்வது தேவையான ஒன்று.
ஏதாவது ஃபார்வேர்டு செய்திகளையோ,கருத்துக்களையோ பகிர்ந்து கொண்டு இருக்காமல் தான் படித்த ஒற்றை வரியையோ அல்லது அது தந்த சிந்தனையையோ பகிர்ந்தால் அது நிச்சயம் அறிவார்ந்த சமுதாயமாய் மலரும்.நான் வெறுமனே வேடிக்கை மட்டும்தான் இணையத்தில் உலாவுவேன் என்பவர்களின் நேரங்களை காலம் தயவுதாட்சன்யமின்றி தின்றுவிடும்.
#மனம் விரும்பிய வரிகள்
*ஒரு நாளில் சுமார் 72000 எண்ணங்கள் மனதில் உதிக்கிறது
*ஒரு பிரச்சனை வரும்போது களத்தில் இறங்கி நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல் உள்ளவரே தலைவர்
*ஒவ்வொரு விதையும் ஒரு ஆசையே
*ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றியாகும்
*வாய்ப்பு எப்போதும் நம் காலடியின் கீழேயேதான் உள்ளது. மனப்பாங்கு சரியாக இருந்தால்தான் நாம் கண்டுணர்வோம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
நான் இந்த புத்தகத்தை எங்கு பெறலாம்
ReplyDelete