Thursday, 28 January 2021

கற்க கசடற-2*மணி



எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்.....
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
(நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு)
    - புலமைப்பித்தன்.

#புலமைப்பித்தன்

புதுமைப்பித்தன் கதைகளை படித்த பின்பு அதே பெயரில் இன்னொரு கவிஞர் பெயர்.இளம் வயதில் பாடல் என்றால் கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்றே நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தில் இப்படியொரு பெயர்.ஒரு துளி கடலாவதைப் போல் அவர் வரிகளை தேட தேட அமுத வரிகள் அத்தனையும்.சமீபத்தில் நக்கீரனில் எழுதிய தொடர் கவிஞரின் மற்றொரு முகத்தைக் காட்டியது. எம்.ஜி.ஆரினால் பாடல் எழுத வந்து அக்காலத்திலிருந்து இக்காலம் வரை இளமைத்தமிழை அவர் பாடலில் காணலாம்.

குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற நான் யார் பாடல் மூலம் தன் 30ம் வயதில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அப்பாடலை ஸ்டூடிவில் எழுதாமல் ஒரு டீக்கடையில் அமர்ந்து எழுயியதாக தெரிவித்திருந்தார்.

*உன்னால் முடியும் தம்பி பாடலில் இன்றும் ஒலிக்கும் கொள்கை வரிகள் "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு"பாடல் வரிகள் ஒவ்வொரு போராட்ட மேடையிலும் வாழ்த்துப் பாடலாக ஒலிக்கும்.அதே படத்தில் வரும் உன்னால் முடியும் தம்பி பாடலில் "கள்ளுக்கடை காசிலே தாண்டா,
கட்சிக் கொடி ஏறுது போடா"எனும் வரி 1988 முதல் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருப்பதை தீர்க்கதரிசனத்துடன் எழுதியிருப்பார்.அதேபடத்தில் "இதழில் கதை எழுதும் நேரமிது" எனும் அகப்பாடலையும் தந்திருப்பார்.

*நாயகனில் நீ ஒரு காதல் சங்கீதம் பாடலில்..இருவரும் நடக்கும் காட்சியை வார்த்தைகளில் காட்சிப்படுத்தியிருப்பார்

 "மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே".

 வித்தியாசனமான பீரியட் படம் போல ஒரு பாடலில் ராஜாவும், புலவரும் சிக்ஸர் அடித்திருப்பார்கள்.நான் சிரித்தால் பாடலில் முன்பின் அறிமுகமில்லாத  நாயகனைப் பார்த்து ஒரு வரி 

"கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்.. 

என வரும்.அதில் இடம் பெற்ற மாஸ்டர் பீஸ் பாடல் "தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே" எவர்கிரீன் பாடல்.

*எல்லோரும் அறிந்த மெளனம் சம்மதம் படத்தில் வரும் கல்யாண தேன் நிலா முழுக்க முழுக்க லா வில் முடிந்திருக்கும்.யுகபாரதி தன் கட்டுரையில் எழுதியிருப்பார் லகரத்திற்கு ளகரமும் எழுதியிருக்கலாம் ஆனாலும் புலவரின் வரிகள் முழுக்க லா விலேயே அமைந்திருக்கும்.

"தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா" எப்போது கேட்டாலும் இனிமை.

*நீங்கள் கேட்டவை படத்தில் ஓவசந்த ராஜா பாடலில் ஒரு வரி 

"மென் பஞ்சு மேகங்கள். 
உன் பிஞ்சு பாதங்கள்
மண் தொட்டதால் இன்று 
செவ்வானம் போல் ஆச்சு" 

கேட்கும் போதும் படிக்கும்போது ரசிக்க வைப்பார்.
"கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்" என்று பெண்ணின் கூந்தலை ஒரு பாடலில் வர்ணித்திருப்பார்.

*மண்ணில் வந்த நிலவே பாடலில் மழலையைக் கொஞ்சும் வரிகளில் அழகு தமிழில் வாழ்த்தியிருப்பார்

 "எட்டி நிற்கும் வானம்
உன்னை கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்"

*அழகன் படத்தில் வரும் சாதிமல்லி பூச்சரமே மற்றும் சங்கீத ஸ்வரங்கள் இன்னும் இரவுக்கு மாமருந்தாக அமைந்தவை.

*சோககீதம் என்பது பாடுவோர் கேட்போரையும் சோகத்தில் பங்கெடுக்கும் படி அமைய வேண்டும்.அவ்வகையில் கன்னிப்பருவத்திலே படத்தில் 
"பட்டு வண்ணம் ரோசாவாம்" பாடல் எளிமையான வரிகளில் ஆற்றுப்படுத்தும். அதில் ஒரு வரி

 "காத்து பட்டாலே
கரையாதோ கற்பூரம் கரையுது
எம் மனசு உன்னால"

என மலேசியா வாசுதேவன் உருகியிருப்பார். இதே போல் ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலும் நாட்டுப்புற வரிபோல் உச்சி வகுந்தெடுத்து பாடலில் தன் கவித்துவ வரியை பதிந்திருப்பார்.

*"உலகெங்கும் நம் வீடு.இதில் என்ன எல்லைக்கோடு" என பத்தினிதெய்வதில் ஒரு வரி எல்லைதாண்டிய அவர் சிந்தனையை பறை சாற்றும்."மழை வருது மழைவருது குடை கொண்டு வா" எனும் வரியில் இசையோடு இயைந்து  வரிகளை நெய்திருப்பார்.

#க்ளாசிக் பாடல்கள்

*ஓடி ஓடி உழைக்கணும்

*சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே

*தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று

*நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற

*நாளை உலகை ஆள வேண்டும்

*ஆயிரம் நிலவே வா

*பாடும்போது நான் தென்றல் காற்று

*இந்த பச்சைக்கிளிக்கொரு

*பூ மழைதூவி வ..சந்தங்கள் வாழ்த்த

*பிடித்த புத்தகமாக மண்டேலாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறார். கமலாதாஸ் குறித்த The love queen malabar புத்தகத்தை சொல்லியிருக்கிறார்.சேகுவேராவின் வாழ்க்கை வரலாறு(அதில் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் நம் குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவில்லை.அதுவே மகிழ்ச்சி.அதைபோல் தானும் இருப்பதாக தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருந்த போது அவர் மீது அன்பு பாராட்டி நட்போடு இருந்துள்ளார். புலவரின் மகள் கண்ணகி இறந்தபோது இடுகாடு வரை வந்து இறுதிச்சடங்கு செலுத்தியதை படித்த போது இன்னும் இவர்மீது மதிப்பு கூடியது.இன்னும் இவர் பல பாடல்களை எழுத வேண்டும்.. நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்

கற்றதை பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment