நாம் இங்கே பேசுவதை உலகம் மறந்துவிடும்.ஆனால் நாம் இங்கே என்ன செய்தோம் என்பதை ஒருபோதும் மறக்காது
-ஆபிரஹாம் லிங்கன்
#காந்தியின் இறுதிநாட்கள்
குளக்கரை ஓரம் ஒரு பணக்காரர் நடந்து சென்றார்..திடீரென ஒரு குளத்தில் தவறி விழுந்தார்.நீச்சல் தெரியாததால் தத்தளித்தார். உயிருக்குப் போராடினார்.திடீரென ஒருவன் குதித்து உயிரைக் காப்பாற்றினான்.உடனே அவர் அவனுக்கு தன் சொத்தில் பாதி எழுதிதருவதாக கூறி மாலை வீட்டுக்கு வரச்சொன்னார். நேரம் ஆக ஆக மனது கணக்கு போட்டது.வேறு யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள் என மனம் சாந்தப்படுத்திக் கொண்டது. இறுதியில் வீட்டுக்கு வந்த அவனுக்கு பத்துரூபாய் கொடுத்து அனுப்பினார்.
காந்தியின் கதையும் ஏறக்குறைய இதுபோலத்தான்.நாட்கள் செல்ல அவரைப்பற்றி படிக்காதவர்களும், செவிவழியே கேட்டவர்களும், ஒருசாரார் விமர்சனங்கள் இருந்தாலும் அவரை அறவே ஒதுக்கும் மனப்பாங்கும் அதிகரிக்கின்றன.பிறர் சொல்வதை கேட்டறியாது அவர் குறித்த புத்தகங்களை படித்து அவர் பற்றி அறியலாம்.லூயி பிஷரின் காந்தி குறித்த புத்தகம்,குஹாவின் காந்தி, என்றென்றும் காந்தி, காந்தியை சுட்ட பின் என பல்வேறு புத்தகங்கள் படித்து அவர் குறித்து முடிவுக்கு வரலாம்.
#காந்தியின் இறுதிநாட்கள்
2020ம் ஆண்டு நமக்கு எப்படி தீராத தலைவலியோ அவ்வாறாக அமைந்தது 1948ம் ஆண்டு. பிரிவினையினால் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து ஜனவரி 13ம் நாள் அமைதியை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.அத்தோடு இல்லாமல் பாகிஸ்தான் தனியே நிர்வாகம் செய்ய இந்தியா சார்பில் 55கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார்.ஆனால் அனைத்து தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.நேருவும் படேலும் கூட ஆட்சேபித்தனர். ஆனால் நேரு இதற்கு பின்னர் ஒப்புக் கொண்டார்.ஜனவரி 18ம் தேதி இந்த ஏழு அம்சத்தை ஏற்றுக் கொண்டு ராஜேந்திர பிரசாத் தலைமையில் கையெழுத்திட்டு உண்ணாவிரதத்தை பகல் 12-45 மணிக்கு முடித்துக்கொண்டார் காந்தி.
பாகிஸ்தானுக்கு பணம் கொடுக்கும் விஷயத்தில் இந்து மகா சபைக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது. கோட்சேவின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம். ஜனவரி 20ம் தேதி குண்டு வெடிப்புக்கு ஆயத்தமாகினர்.50 அடி தூரத்தில் குண்டுவெடிக்கும்.. அப்போது துப்பாக்கிச்சூடு நடத்த திட்டம்.ஆனால் குண்டுவெடிக்க சமிக்கை வராததால் மதன்லால் எனும் இளைஞன் 50 அடியில் குண்டு ஒன்றை வெடித்தான்.ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்த சந்தர்ப்பம் அமையாததால் திட்டம் தோல்வியடைந்தது.
(இது குறித்து மேலும் அறிய குமுதம் பதிப்பகம் வெளியிட்ட "காந்தியை சுட்ட பின்" புத்தகம் படிக்கவும்)
21ம் தேதி பிரார்த்தனை கூட்டத்தில் காந்தி இது குறித்து பேசி.. அந்த இளைஞனை தண்டிக்க வேண்டாமென கூறியதாக பேசினார்.உண்ணாவிரதத்தினால் உடல் நலிவுற்று..பின் 22ம் தேதி தானே நடந்து பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்தார்.23ம் தேதி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளையொட்டி வாழ்த்திப் பேசினார்.
27ம் தேதி கிங்ஸ்லி மார்ட்டின் காஷ்மீர் பிரச்சனையில் பிரிவினைதான் தீர்வு குறித்து பேசியதை காந்தி நிராகரித்தார்.29ம் தேதி பன்னுவிலிருந்து வந்த 40 அகதிகள் காந்தியை திட்டினர். தங்களால் தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறினர்.சிலர் பாராட்டியும் பேசினர்.அதற்கு காந்தி "யாரும் சொல்லி நான் சேவை செய்ய வரவில்லை.யார் சொல்லியும் நான் கைவிடப் போவதும் இல்லை என்றார்.பல்வேறு பணிச்சுமையினால் இரவு 9-15 மணிகுதான் படுக்கைக்குச் சென்றார்.
#இறுதிநாள்- ஜனவரி 30
வெள்ளிக்கிழமை வழக்கம் போல்
3-30 மணிக்கு எழுந்தார்.பிரார்த்தனை முடித்திவிட்டு சிறிது உறக்கத்திற்குப் பின் 6 மணிக்கு மீண்டும் எழுந்தார். காங்கிரஸ் புணரமைப்பு விதிகளை பியாரிலாலிடம் கேட்டு மாற்ற விரும்பும் குறிப்புகளைத் தந்தார்.9-30 மணிக்கு வங்காளி மொழி கற்றார். பிப்ரவரி 2ம் தேதி சேவா கிராமத்தில் ஒரு மாநாடு நடத்தும் திட்டத்தை கூறினார்.2-15 மணிக்கு இலங்கையைச் சேர்ந்த டாக்டர் டி-செல்வா பேட்டிக்கண்டார்.அவரின் மகள் காந்தியிடம் கையெழுத்து வாங்கினார்.அதுதான் அவர் இட்ட கடைசி கையெழுத்து.மாலை 4 மணிக்கு படேலும் அவரின் மகள் மணிபென் படேலும் வந்து உரையாடினர்.நேரம் போவதே தெரியாமல் 5-10 மணிவரை உரையாடினர்.பத்து நிமிடம் பிரார்த்தனை கூட்டத்திற்கு தாமதமானதால் பேத்திகள் இருவரும் அழைத்து சென்றனர்.
கூட்டத்தின் இடது புறமிருந்து வந்த கோட்சே 3முறை சுட்டான். அப்போது மணி 5-17. சுடப்பட்டதைப் பார்த்த ரகுநாத் நாயக் எனும் தோட்டக்காரர் கோட்சேவை புல்வெட்டியால் மூன்று முறை தாக்கினார்.சார்ஜென்ட் தேவராஜ் சிங் ஓடிவந்து கோட்சேவை பிடித்தார்.இல்லையெனில் கூட்டம் அப்போதே அவரை கொன்றிருக்கும்.
சங்கர் கிருஷ்டய்யா,சாவர்க்கர், நாராயண் ஆப்தே ஆகியோர் கைது செய்தனர்.
டாக்டர் டி.பி பார்கவா, டாக்டர் ஜீவராக மேத்தாவும் பரிசோதித்து இறந்ததை உறிதிப்படுத்தினர்.மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இரவு 2 மணிக்கு நீராட்டப்பட்டது. எண்ணெயில் நிரந்தரமாய் வைக்கலாம் எனும் யோசனையை தேவதாஸ் காந்தியும் பியாரிலாலும் மறுத்துவிட்டனர்.3-30 மணிக்கு பிராத்தனையில் கீதையும், ஆதிகிரந்தமும் வாசிக்கப்பட்டது. மறுநாள் காலை 11மணிக்கு மூன்றாவது மகனான ராமதாஸ் காந்தி வந்தார்.11-45க்கு ஆரம்பமாகி 4-20 மணிக்கு யமுனை நதிக்கரையில் ராஜ்காட்டை அடைந்தது.4-45 மணிக்கு ராமதாஸ் காந்தி தீ மூட்டினார்.14மணி நேரம் எரிந்தது.
பர்மா,திபெத்,இலங்கை,மலேசிய நாடுகளுக்கு அஸ்தி சிறிது அனுப்பப்பட்டது.திருவேணி சங்கமத்தில் அஸ்தி கரைத்தனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அஸ்தி தூவப்பட்டது. உலக நாடுகளிலிருந்து 3441 இரங்கல் செய்திகள் வந்தன.
#தண்டனை
ஜூன் 24ம் தேதி துவங்கிய விசாரணை நவம்பர் 6வரை நடந்தது.149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 1949 பிப்ரவரி 10ம் நாள் 204 பக்க தீர்ப்பு தீர்ப்பு வெளியானது.கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. போதுமான சாட்சிகள் இல்லாததால் சாவர்கர் விடுவிக்கப்பட்டார். மேல் முறையீடு பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் பண்டாரி,அச்சுருராம், கோஷ்லா ஆகியோர் மறுமுறையீட்டினை நிராகரித்து மரணதண்டனை வழங்கினர். கோட்சே தூக்கிலிடப்பட்டு சிறைக்குள்ளேயே தகனம் செய்து அவரின் சாம்பல் காகர் எனும் சிறிய ஆற்றில் கரைத்தனர்.சிறு பகுதி அஸ்தி கோட்சேவின் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
"ஒரு மென்மையான வழியில் உங்களால் உலகத்தை அசைக்க முடியும்" என உணர்த்திய
காந்தியை..அவரின் நினைவு நாளில் நினைவு கூர்வோம்.
தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment