#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:16
Pages:440
நீங்களும் முதல்வராகலாம்
-ரா.கி.ரங்கராஜன்
இன்றைக்கும் புத்தக கண்காட்சிகளில் சமையல் புத்தகங்களுக்கு பிறகு அதிகம் விற்பவை தன்னம்பிக்கை புத்தகங்கள் தான். ஏனெனில் இதற்கு புனைவோ மேற்கோள்களோ தேவையில்லை என நினைக்கின்றனர். வெற்றிபெற்ற கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளைப் பற்றி சொல்லிவிட்டு இவர்களைப் போல் நீங்களும் ஆக வேண்டும். மாதம் 10 லட்சம் ஊதியம் வாங்கி ஆடி காரில் செல்லவேண்டும் என மேடையில் முழங்கும் போது நமக்கும் சிலிர்ப்பு ஏற்பட்டு.. ஆஹா நமக்கு தன்னம்பிக்கை பிறந்து விட்டதே என்று எண்ணுவோம். ஆனால் குறைபிரசவத்தில் கொஞ்ச நேரத்தில் அப்படியே அத்தனை எண்ணங்களும் காணாமல் போயிருக்கும். ஆனால் ஒரு சில புத்தகங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாக எதார்த்தமாக தேவையான மேற்கோள்களைக் காட்டி ஒரு வழிகாட்டும் விதமாக அமையும். இதனால் இவர்கள் ஜெயிக்கவில்லை இந்த திறமை இருந்ததால் ஜெயித்தார்கள் என அந்த திறமையை நமக்கு வளர்க்க சொல்லித் தருவார்கள்.
ரா.கி ரங்கராஜனின் பட்டாம்பூச்சி மொழிபெயர்ப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்களில் ஒன்று. அதேபோலத்தான் நீங்களும் முதல்வராகலாம் புத்தகமும். ஏதோ தெலுங்கு பட டைட்டில் போல இருந்தாலும் படிக்க படிக்க சுவாரசியமாய் கீழே வைக்க மனமின்றி படிக்கத் தூண்டுகின்றன .82 கட்டுரைகளும் மேலைநாட்டு சிந்தனையுடன் எழுதப்பட்டாலும் ஆங்காங்கே நம்முடைய வாழ்வையும் தொடர்புபடுத்தி காட்டியிருப்பார்.
சிறுகதைகள் நம் எண்ணச் சிறகை அப்படியே மாற்றி விடும் .அந்த வகையில் நண்பர்களை நம்பாதே என்ற கதையில் ஒரு பாம்பை ஜனங்கள் அடித்துத் துரத்தினார்கள். விவசாயி அதற்கு அடைக்கலம் கொடுக்க எண்ணி என் வயிற்றுக்குள் ஒளிந்து கொள் என்று கூறுகிறான். பாம்பு அவன் வயிற்றுக்குள் போனவுடன் வெளியே வர மறுக்கிறது. வேறு வழி இலலாமல் வயிற்றில் பாம்புடன் நாரையை சந்தித்த விவசாயி அதனிடம் பாம்பைப் பற்றி சொன்னான்.
தரையில் உட்கார்ந்து பலமாக முக்கு பாம்பு வெளியே வரும் நான் பிடித்துக் கொள்கிறேன் என்றான். பாம்பு வெளியே வந்தவுடன் அவனுக்கு இன்னும் பயம் தீரவில்லை .அதற்கு உரிய மருந்து கேட்டவுடன் நாரையை சாப்பிட்டால் விஷம் போய்விடும் என்கிறது முதுநாரை. உடனே அவன் நாரையை பிடித்துக் கொண்டு சமைக்க சென்றுவிட்டார். ஆனால் அவன் மனைவியோ நாரையை விடுதலை செய்கிறாள் .
போகும்போது நாரை அவளின் கண்களை கொத்தி சென்றுவிடுகிறது.
இன்னொரு கதையில் ஒரு ஊரில் வண்டு இருந்தது.
அரண்மனைத் தோட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஒரு யோசனை ஏற்பட்டது. நம்மை யாருமே கவனிக்க மாட்டேன் என்கிறார்களே என்று எண்ணி ராஜாவை கடித்தது. உடன்வந்த ராணியையும் கடித்தது. பின்னர் வந்த சேவகர்ளையும் கடித்தது. அரண்மனை மொத்தமும் அல்லோல கல்லோல ப்பட்டது. ஊரெங்கும் செய்தி பரவி கடைசியில் ஒரு வழியாய் வண்டைப் பிடித்து அடித்து கொன்றார்கள் .சாகும் முன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டது .பிறவி என்றால் இப்படி எதையும் செய்து விட்டு சாகவேண்டும். எல்லாரும் என்னைப் பற்றி பேசும்படி பண்ணிவிட்டேன். உயிர் போனால் போகட்டும் என்றது. சிறிய கதை தான் ஆனால் எவ்வளவு உண்மை இருக்கிறது பாருங்கள்.
குதிரையை விடுங்கள் லகான் கையில் இருக்கட்டும் என்பது அரசியல் தத்துவங்களில் ஒன்று. சுதந்திரமாக செயல்பட வேண்டும் அதே நேரத்தில் உங்கள் விருப்பப்படி அனைத்தும் நடைபெற வேண்டும் எனும் ஆளுமை தன்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலை தெரிந்தவர்களை விட வேலையின் நுட்பத்தை தெரிந்தவர்கள் மிகவும் குறைவுதான். ஆகவே உங்கள் பணியில் நீங்கள் வல்லுநராக இருந்தால எல்லோரையும் ஆட்டு வைக்கலாம்.
சீனாவில் ஒரு நீதி வாக்கியம் உண்டு எடுப்பதற்கு முன் கொடு அதாவது எதிரிக்கு முதலில் பரிசு அனுப்பி அவனை மயக்கி பிறகு தனக்கு வேண்டுவதை எடுத்துக்கொள்ள கற்றுக்கொள்வார்கள். அவர்களும் தங்களுக்கு ஏதோ நன்மை கிடைக்கிறது எனும்போது யாருமே உங்களுக்கு ஆதரவா இருப்பார்கள் அல்லவா! முதலில் நம் மனதில் என்ன அபிப்பிராயம் ஏற்படுகிறதோ அது தான் கடைசி வரை நீடிக்கிறது என்பது உளவியல் உண்மையும்கூட.
முதன்மை இடத்துக்கு வரம் விரும்புவார்கள் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டு இருக்கக்கூடாது .ஒரு பொருள் தாராளமாக கிடைக்கிறது எனில் அதன் மவுசு குறைந்து விடும். மனிதனும் அப்படித்தான். அடிக்கடி நீங்கள் எல்லோர் கண்ணிலும் பட்டால் உங்களுடன் பேசும் வாய்ப்பு அடிக்கடி எல்லோருக்கும் கிடைத்து விடும். ஆகவே சாதாரண மனிதனைப் போல் தான் உங்களை நடத்துவார்கள். எந்த கூட்டத்தில் மறைந்து கொள்வது என்பதை ஒரு கலையாக பயிலுங்கள். லாபான்ட்டேன் என்பவர் இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்
ஒரு ஒட்டகம் முதல்முறை கிராமத்துக்கு வந்தபோது அனைவரும் பயங்கர மிருகம் என்று அலறி அடித்து ஓடினர். பின் இரண்டாம் முறை நெருங்கி வந்தார்கள். மூன்றாம் முறை ஒருவன் சென்று பார்த்ததோடு இல்லாமல் கழுத்தில் கயிறு கட்டி விட்டதால் ..ஒட்டகத்தின் மகிமையே போய்விட்டது. எது ஒதுங்கி நிற்கிறதோ அது கிடைப்பதற்கு அரிதாக இருக்கிறது .அதன் மீது நம் மதிப்பும் பிரியமும் அதிகரிக்கும் என்ற உண்மையை அந்த கட்டுரையின் வாயிலாக விளக்கி இருப்பார்.
ஒரே இலக்கு ஒரே குறி கட்டுரையில் ஒரு புல்வெளியில் ஆடுகள் குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன. வாத்துக்கு அகங்காரம் அதிகம். குதிரையைப் பார்த்து நான் உன்னை காட்டிலும் உயர்வான பிராணி. தரையில் நடப்பேன் இறக்கை இருப்பதால் பறப்பேன் .விருப்பமான போது நீந்துவேன். பல பிராணிகளின் திறமைகளும் என்னிடம் இருக்கிறது என் குதிரையை பார்த்து ஏளனமாக சிரித்து .உனக்கு பலவகை திறமைகள் இருப்பது உண்மையே எனினும் நீ ஒன்றிலாவது பரிபூரண தகுதி பெற்று இருக்கிறாயா. நீ பறக்க முடியும் ஆனால் கொஞ்சம் உயரத்திற்கு தான். உன்னால் மீனைப்போல ஆழத்திற்கு போகமுடியாது. அன்னம்போல் ஒயிலாக தண்ணீரில் நீந்துகிறாயா என்றால் அதுவுமில்லை. தரையில் நடக்கும் திறமை ஒன்றுதான் இருக்கிறது.என் தோற்றத்தில் எத்தனை கம்பீரம் இருக்கிறது பார்.எத்தனை பலம் வாய்ந்ததாய் இருக்கிறேன்.நான் எத்தனை பலசாலி நான் இப்படியே இருக்க விரும்புகிறேன் . வாத்தாக இருக்க விரும்பவில்லை என்று கூறிச் செல்கிறது. ஆகவே பல திறமைகள் இருப்பதை விட ஒரே திறமைகள் ஆழமாக வளர்த்துக்கொள்வது அவசியம்.
#ரசித்தது
*உங்கள் மேலிடம் என்றாவது ஒரு நாள் விழுந்தே தீரும் .அது இயற்கை நியதி. ஆகையால் காத்திருங்கள், காலம் வரும்.
*காலியாய் உள்ள ஒரு பதவிக்கு என் நண்பன் ஒருவனை நான் நியமிக்க ஒவ்வொரும் முறையும் நூறு பேரை பகைத்துக்கொள்கிறேன். அந்த நண்பனும் கடைசியில் நன்றி கெட்டவனாக மாறி எனக்கு துரோகம் இழக்கிறான்-பதினாங்காம் லூயி
*பந்தயக் குதிரைகள் பக்கத்தில் சென்று பார்த்தால்தான் மூச்சு இறைப்பதும விழிபிதுங்குவதும் தெரியும் .தூரத்தில் இருந்து பார்த்தால் வெகு ஒய்யாரமாக காற்றில் நீந்துவது போலத்தான் தோன்றும்
*யாரும் கேட்காத போது எந்த ஒரு வேலையையும் செய்யாதீர்கள்
*எல்லாரும் எதிர்பார்த்ததை செய்யாதீர்கள். யாரும் எதிர்பாராத அதையே செய்யுங்கள்
இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் நீங்கள் ஒரு போதும் ஒதுக்கி விட்டு செல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொரு கட்டுரையும் உங்களுக்கான தேடலுக்கான விருந்தாகவும்,முன்னேற்றத்துக்கான வழி வகைகளை கூறியும் ஒரு சிறு கதைகளை உதாரணத்துக்கு சொல்லியும் இந்த கட்டுரைத் தொகுப்பு நகர்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment