#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:23
Pages:220
இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய இப்புத்தகம். மனதுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது.. காரணம் காந்தி பற்றி தெரியாத பல சுவையான தகவல்களை இந்த புத்தகத்தின் மூலம் அறிந்தது தான். பாடப்புத்தகங்களில் காந்தியை பற்றி நாம் படிப்பது ஒரு சிறு புள்ளிதான். இது போன்ற பல புத்தகங்களை வாசிக்கும் போதுதான் இன்னும் காந்தியின் மீதான மதிப்பும் மரியாதையும் கூடுகிறது.
டால்ஸ்டாய் தாரக் நாத் தாஸிற்கு என் லெட்டர் டு ஏ ஹிந்து என்று எழுதப்பட்ட கடிதத்தில் இந்திய விடுதலை அஹிம்சையான வழிவில்தான் சாத்தியம் என்று குறிப்பிடுகிறார். இதனை படித்த போது தான் காந்திக்கு டால்ஸ்டாய் மீது ஈர்ப்பு கூடியது. உடனே டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதுகிறார். அப்போது தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகப் போராடும் ஒரு வழக்கறிஞராகவே டால்ஸ்டாய் அறிந்திருந்தார். இவ்வாறு கடிதப் போக்குவரத்துக்களின் சுவாரசியத்தை முதல் பகுதியில் விளக்கியுள்ளார்.
காந்தி பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால் அவரின் சத்தியாகிரகத்தை படிப்பதைவிட லூயி பிஷரின் காந்தியைப்பற்றி படிப்பதைத்தான் பரிந்துரைப்பேன் என்கிறார் எஸ்ரா. காரணம் ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் காந்தியை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அதில் எழுதி இருப்பார். அதற்கான உதாரணத்தையும் ஆங்காங்கே நமக்கு சொல்லும் போது அந்த புத்தகத்தை படித்திருந்தாலும் மீண்டும் மறுவாசிப்பு செய்ய தூண்டுகிறது.
எஸ் அம்புஜம்மாள் எழுதிய மகாத்மா காந்தி நினைவு மாலை புத்தகத்தை பற்றி சொல்லும் போது ஏன் காந்தி எளிய உணவை பெரும் விருந்தாக நினைக்கிறார் எனும் கேள்விக்கு உணவின் தேவை உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்று அவருக்குத் தெரியும். ஆடம்பரமான விருந்தை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதே இல்லை என்று கூறுகிறார். நேர்மையின் அடையாளம் காந்தி என்கிறோம் அன்று காந்தி மட்டுமல்ல பலரும் நேர்மையின் அடையாளமாக இருந்தார்கள் காந்தி நேர்மையோடு சத்தியத்தையும் வாழக் கோட்பாடுகளையும் உயர்த்திப் பிடித்தார் எனவே அவர் காந்தியாக இருந்தார் என்று கூறுகிறார்
ஒருமுறை மனச்சோர்வு கொண்டு இருந்த மிலியிடம் காந்தி சொன்னார் "உன்னுடைய கற்பனை உன்னை கோழை ஆக்குவதை நீ அனுமதிக்கிறாயா? எங்கே உனது நம்பிக்கை? உனக்கே நீ உண்மையாக இல்லை என்றால் எப்படி வாழ்வாய் ?
உனக்கே உண்மையாக இருக்கிறாயா? என்பதும் மிலிக்கு மட்டுமில்லை இந்தியர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியே என்று ஒரு கட்டுரையை முடிக்கும் போது நமக்கும் அந்த வரியை படித்தபோது சிலிர்ப்பாகத்தான் இருந்தது.
காந்தி 1925,1936,1944 மூன்று முறை மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு முறை அப்பென்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் .1913 முதல் 1948 வரை மட்டும் சுமார் 79 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்துள்ளார் .தன் வாழ்நாளின் கடைசி 40 வருடங்களில் தினசரி 18 கிலோ மீட்டர் நடந்து இருக்கிறார் எனும் மருத்துவ அறிக்கையை படிக்கும் போது நமக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
காந்தியின் உதவியாளராக ஓரிரு வரிகள் மட்டுமே அறிந்த வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படாத மகாதேவ் தேசாய் பற்றி இப்புத்தகத்தில் மிக அருமையாக விரிவாக விளக்கியுள்ளார். எல்எல்பி படித்து தேறிய தேசாய் 1906ல் காந்தியோடு சந்திப்பு ஏற்பட்டது. அவரோடு சிறை சென்றார். நேருவோடு உடனிருந்தார். புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார் .கட்டுரை எழுதியுள்ளார்.
தேசாய் ஆசிரமத்தில் வசிக்கவில்லை அருகிலுள்ள மகன்வாடியில்தான் வசித்திருக்கிறார்.ஒரு நாளைக்கு 16 மைல் தூரம் தேசாய் நடந்திருக்கிறார். சில நாட்கள் இரண்டு முறை இந்த தூரத்தை நடப்பதும் உண்டு. தண்டி யாத்திரையின் போது உடனிருந்து இருக்கிறார் .எதற்கும் கலங்காத காந்தி தேசாய் இறந்ததை அறிந்ததும் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். தன் கையாலேயே அவருக்கு சிதை மூட்டியிருக்கிறார் .இப்படி தேசாய் பற்றி அறியாத செய்திகள் இரண்டாவது நிழல் கட்டுரையில் மிக விரிவாக ஆழமாக பதிவு செய்திருப்பார்.
இந்தியாவில் காந்தி எழுதிய கடிதங்களை 100 தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த தகவல் ஆச்சரியத்தை தருகிறது. ஒரு தலைவர் இவ்வளவு பணிகள் உள்ள சூழலில் கூட இவ்வளவு விஷயங்களை எழுதி உள்ளார் என்று ஆச்சரியப்பட வைத்தது. காந்தி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பத்திரிக்கையாளராக தனது கருத்துக்களை வெளியிட்ட அனுபவங்களையும் ஹரிஜன் பத்திரிக்கை மற்றும் நவஜீவன் இதழில் தனது கடிதங்களை எண்ணங்களை வெளியிட்டதில் கூறியிருக்கிறார். கடிதங்கள் எழுதுவது பற்றி சொல்லும்போது..
பறவைகளால் சிறகில்லாமல் பறக்க முடியாது. ஆனால் மனிதர்களால் முடியும் .ஆமாம் நான் சிறகில்லாமல் பறந்து உங்களிடம் வந்து சேர்கிறேன். எப்படி எனது எண்ணங்களின் மூலம் நீங்களும் பறந்து வந்து என்னை அடைய முடியும். சிந்தனைகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உரையாடல் வழியே மக்களை சந்தித்துள்ளார்.
காந்தி பயன்படுத்திய கடிகாரத்தின் வரலாற்றினை அதை தயாரித்தவர்கள் விபரம் குறித்து இதில் பதிவு செய்துள்ளனர். காந்தி இறந்தபோது மணி 5 17 அதன் பிறகு அந்த கடிகாரம் போடவே இல்லை.எப்போதும் அவர் உடன் இருக்கும் கடிகாரம் என்று காட்சிப்பொருளாக இருக்கிறது. ஆனால் அதில் இந்தியாவின் சரித்திரம் புதையுண்டு இருக்கிறது.
வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும்போது சார்லி சாப்ளினை சந்திக்கிறார் காந்தி அப்போது ஒரு உரையாடலில் ஏன் இயந்திரங்களை ஏன் எதிர்க்கிறீர்கள் ? இயந்திரமயமாக்கல் காலத்தின் தேவையை தானே? என்று கேட்டதற்கு மௌனமாய் காந்தி பதிலளித்தார் இயந்திரங்கள் மேல் எனக்கு கோபம் இல்லை. எந்திரங்கள் மனித உழைப்பை முடக்கப்பட்டு விடும். மனிதர்கள் இயந்திரங்களுக்கு அடிமையாகி விடுவதை மட்டுமே நான் எதிர்க்கிறேன் என்று விரிவான பதில் கூறுகிறார். காந்தியின் எண்ணங்களை உள்வாங்கிக் கொண்ட சாப்ளின் பின்னாளில் தனது மாடர்ன் டைம்ஸ் படத்தில் இயந்திரம் ஒன்றினுள் மாட்டுவது போன்ற காட்சியை வைத்தார் என்று கூறுகிறார் எரிக் க்ளாம்
இது போன்ற பல்வேறு தகவல்கள் சுவையான நிகழ்வுகளை சொல்லும் போது நமக்கும் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது முடிந்துவிட்டதே எனும் எண்ணம் வருகிறது. காந்தியை நினைவு கூர்வதும், காந்திய சிந்தனைகளை செயல்படுத்தவும் தேவையும் அவசியமும் இன்று அதிகரித்திருக்கிறது எனும் நோக்கில் இந்த புத்தகத்தை வாசித்து முடித்ததும் மனநிறைவைத் தந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment