Wednesday, 13 April 2022

பெரியோர்களே.. தாய்மார்களே!-ப.திருமாவேலன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105

Book:17
Pages:511

#பெரியோர்களே.. தாய்மார்களே!
-ப.திருமாவேலன்

உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில்,நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்
-லெனின்

பல ஆண்டுகாலம் ஆனந்த விகடன் வாசகராய் இருந்த பலரை 2016ம் ஆண்டு ஜூனியர் விகடனில் வந்த இந்த தொடர் பலரையும்.. ஜூனியர் விகடன் வாசகராக்கியது. இதில் இடம் பெற்ற அரசியல் தலைவர்கள் ஆகட்டும், வரலாற்று உண்மைகள் ஆகட்டும், படிப்பவர்களை சிந்திக்க வைத்தது. மேலும் மேலும் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது. ஒவ்வொரு வாரமும் இந்த இதழில் எந்தத் தலைவர் இடம் பெற்றிருப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பல வாரங்கள் படித்தாலும் புத்தகமாய் படிக்கும்போது முழு மன நிறைவைத் தருகிறது.

இன்று பலரும் மேடையில் பேசும் பெரியோர்களே தாய்மார்களே என்ற சொல்லை முதலில் துவக்கி வைத்த பெருமை ஓமந்தூரார் ராமசாமி அவர்களை தான் சாரும் ஏன பிள்ளையார் சுழி போட்ட எழுத்துக்களே நன்றாக இருந்தது. அரசியல் ஒரு சாக்கடை என்று மூக்கை பொத்திக்கொண்டு செல்வோரை கூப்பிட்டு இந்த சாக்கடைகளில் தான் பல உன்னத தலைவர்கள் உதயமாகி இருக்கின்றனர் என்றும், ஒவ்வொரு தலைவர்களின் அறிமுகமும் வியக்க வைக்கும் சம்பவங்களையும் இதில் பதிவு செய்துள்ளார்.

மானிடராய் பிறப்பது அரிது என்றாள் அவ்வை. மானுடனின் விலை 500 ரூபாயா? ஒருபக்கம் அரசியலை அலட்சியமாய் பார்த்துக்கொண்டு, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளின் அனைத்துக்கும் இலவச பொருளுக்கும் அலைகிறது மனம் என்று பட்டவர்த்தனமாய் இன்றைய வாக்காளரின்
 மனநிலையை சொல்லியிருப்பார் ஒரு இடத்தில்.

கொள்கைகளை முன்னெடுக்க லட்சியங்களை அடைய வருபவர்கள் அடுத்தவர்களை அழிக்க நினைக்க மாட்டார்கள்.மாறாக அழிக்க நினைக்க காரணம் லாபத்தில் பங்கு போட இன்னொருவன் வந்து விட்டானே என்ற ஆத்திரம்தான். குப்பைத் தொட்டிகளில் பார்க்கும் காட்சிக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அங்கு விரட்ட ஒரு கல் போதும் இங்கு ஒரு கோடி பேரின் ஒரு சொல் வேண்டும். சொல்ல தயாரா தமிழன் என்று முடிந்திருக்கும்.

இரண்டு சொற்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் இல்லை ஒன்று தமிழன் இன்னொன்று திராவிடம் என்று நீதி கட்சி துவங்கி பல திராவிட கட்சிகளின் ஆளுமைகளையும், முன்னோடி அரசியல் இயக்க தலைவர்களையும் விடுதலைப் போராட்ட வீரர்களையும் தமிழகத்தில் நடந்த விடுதலை வேள்விகளை பற்றியும் சுவைபட சொல்லியிருப்பார்.

1925 ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமை ஏற்றவர் சிங்காரவேலர் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடியவரும் அவர்தான் இன்று தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை பதிவு செய்திருப்பார். "அந்தப் பெண்ணுக்கு 15 வயது இருக்கும்போது படுக்கையில் அசைய முடியாமல் இருந்தாள். காந்தியை பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தார் .சிறை தானே உன் உடம்பை இப்படி ஆகிவிட்டது நீ வருத்தப்படுகிறாயா என்றதும் நிச்சயமாக இல்லை.. இன்னொரு முறை சிறை செல்லத் தயாரா என்று கேட்டாலும் தயார் என்றுதான் சொல்வேன் என்றாள் அந்தப் பெண். எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டியவர் கோகலேவோ,திலகரோ அல்ல 15 வயதான தமிழ் பெண் வள்ளியம்மை தான் என்று காந்தி சொன்னதை படிக்கும்போது உண்மையில் சிலிர்த்து விட்டது.

தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து எழுதி வரும் திரு திருமாவேலன் அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு செய்தியை சொல்லியிருப்பார். தந்தை பெரியார் ராமசாமியாக பரிணாமம் பெற்ற காலகட்டத்தில் அவருக்கு துணையாக இருந்த மூன்று சாமியார்கள்..ஒருவர் கைவல்யம் சாமியார், இன்னொருவர் மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள், மற்றொருவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. ஜாதி மதத்தின் நீள அகலங்களை உணர்த்தி, அவரை அரசியல் துறையில் இருந்து சமூக சீர்திருத்தத்திற்கு நகர்த்தி சென்றவர்கள் இந்த மூவரும் தான். இவர்கள் அப்படி என்ன செய்தனர் என்பதையும் சுவைபட விளக்கியுள்ளார்.

நாசிக்கில் மாவட்ட நீதிபதி ஏ எம் டி ஜான்சன் ஒரு திரையங்கில் திரையரங்கத்தில் வைத்து கொல்லப்பட்டார் .இந்த வழக்கில் கைதான சாவர்க்கரை அந்தமானுக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். பிரிட்டிஷ் அரசுக்கு 1911,1918, கருணை மனு போட்டார்.
1924 இல் 5 ஆண்டுகளுக்கு எந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.

 அந்த தடை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டு 1937இல் தான் முழுமையாக நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட பின் நடந்த மாநாட்டில் தான் இந்தியாவில் இந்துக்களுக்கு என்றும் முஸ்லிம்களுக்கு என்றும் இரண்டு நாடுகள் உள்ளன என்று முதன்முதலில் பேசினார். இப்படியாக நீளும் கட்டுரையின் இறுதியில் முத்தாய்ப்பாக ஆசிரியர் எழுதியிருப்பார். தேசியக்கொடியில் மூன்று நிறங்கள், தேசிய விலங்குகளில் எத்தனையோ நிறங்கள், தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள். இவை அனைத்தும் என்ன சொல்கின்றன. இந்தியா ஒற்றை சமூகம் அல்ல, நாம் ஒற்றை சமூகமாக எப்போதும் ஆக முடியாது. ஆனால் ஒற்றுமை சமூகமாக எப்போதும் தொடரலாம் என்று அருமையாக விளக்கி இருப்பார்.

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பலரும் சொன்ன காரணத்தை சரியான உதாரணங்களுடன் காமராஜருக்கு சூட்டும் புகழஞ்சலி போல் இக்கட்டுரை இருக்கும். தெரிந்த தகவல்களோடு தெரியாத தகவல்களும் காமராஜரைப் பற்றி எழுதியிருப்பார். காமராஜரின் மரணம் மூளையில் சாத்தி வைக்கப்பட்ட ஈட்டியாக என்னை மாற்றிவிட்டது என்று கண்ணதாசன் எழுதி இருப்பார். இப்போது அரசியல் பண்பாடு நாகரிகம் தர்மம் எல்லாமே மூளையில் சாத்தி வைக்கப்பட்ட ஈட்டியாக மாறிவிட்டன என்று ஆசிரியர் முடித்திருப்பார்.

ஒவ்வொரு கட்டுரையின் ஆரம்பத்திலும் சரி முடிவிலும் சரி தீப்பிடிப்பது போன்ற வாசகங்கள் படிப்போரை நிச்சயம் கட்டிப் போட்டு விடும். அப்படித்தான் மொழிப் போர் குறித்தும் சங்கரலிங்கனார் குறித்தும் எழுதிய வரிகள்.
 "தீ என்னைத் தீண்டாது. தீயோரின் பிடியிலிருந்து நான் விடுதலை பெற்று விட்டேன். தீரமற்றோரே.. தெளிவற்றோரே! இனி தீ உங்களைத்தான் தாக்கும்! வெந்து வேதனைப்படுங்கள். உணர்ச்சியற்ற உருவங்களே எனத் தொடங்கி அண்ணாவின் வரிகளை சங்கரலிங்கனார் கட்டுரைக்கு துவக்க வரியாக தந்திருப்பார். பொருத்தமான சொல்லை தேர்ந்தெடுத்து விட்டாலே பொருத்தமாக கட்டுரை அமைந்துவிடும் 

#ரசித்த வரிகள்

*இங்கே நாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் அடமானம் வைத்துக் கொண்டு இருப்பது மானத்தை தான்

*அரசியல் என்பதே மூளையற்ற மந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது –ஜெயகாந்தன்

*அவரவர் மூச்சுக்காற்றை அவரவரே விட வேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ அழுதாலும் அவளவள் தான் பிள்ளை பெற வேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ அதைப் போல உங்களுக்கான உரிமைகளுக்காக கோரிக்கைகளுக்காக நீங்களே போராட வேண்டும்.

*உனக்குப் பிடித்த கருத்துக்களைப் படிப்பதில் காலத்தை வீணாக்காதே. உனக்குப் பிடிக்காத கருத்துக்களைப் படி, அதிலிருந்து தான் இதுவரை உன்னால் புரிந்துகொள்ள முடியாத உண்மையின் கூறுகளை உணர முடியும் – பிராட்லா

கடந்த காலம் குறித்த அறிதலும் புரிதலும் இருந்தால் தான் நிகழ்காலம் நமக்கு வெகு சுலபமாக இருக்கும். அந்த கடந்தகாலத்தை ரத்தினச் சுருக்கமாக, சுவாரசியமாக, நிகழ்வுகளை.. உள்ளது உள்ளவாறு தற்கால அரசியல் சூழலுடன் பொருத்தி சொல்லும்போது அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் பிறக்கிறது.தெளிவானவர்களை தேர்ந்தெடுக்கும் கடமையும் இருக்கிறது என்ற உண்மையும் விளங்குகிறது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment