Thursday, 25 May 2023

கறையான்


அண்மையில் கண்ட பிழைப்பயன்பாட்டுச் சொற்களில் ஒன்று ‘கரையான்’ என்பது. உள்ளிருந்து அரிக்கும் செல்லுப் பூச்சியைக் குறிக்கும் சொல்லாகக் ‘கரையான்’ என்று பயன்படுத்துகின்றனர். 

இடையின ரை ஆளப்படும் ‘கரையான்’ என்ற சொல்லுக்குக் கரை + ய் + ஆன் = கரையான் என்ற பொருளைத்தான் கொள்ள வேண்டும். அதாவது கரையிலிருப்பவர் என்பது பொருள். 

கரையில் இருப்பவர் யார் ? மீனவர்கள். அவர்களை வலைஞர்கள் என்பர். அவர்கள்தாம் வலையிட்ட பின்னர்க் கரையில் காத்திருப்பவர்கள். கரையில் வாழ்பவர்கள். அதனால் கரையான் என்ற சொல் மீனவர்களையும் கரைவாழ் மக்களையுமே குறிக்கும். அச்சொல் ஒருபோதும் புத்தகங்களை அரிக்கும் பூச்சியைக் குறிக்காது. 

புத்தகத்தை, மரத்தை அரிக்கும் பூச்சியின் பெயர் எது ? அதனைக் ‘கறையான்’ என்று எழுத வேண்டும். 

கறித்தல், கறத்தல், கறள்தல், கறுத்தல் முதலானவை ஒன்றுக்கொன்று அருகிலான பொருளுடைய சொற்கள். 

கறித்தல் என்றால் பல்படுபொருளைக் கடித்தல். இதுவே பிறகு கொறித்தல் ஆகியிருக்க வாய்ப்புள்ளது. அணில் கறித்த/கொறித்த கொய்யா. 

கறத்தல் என்றால் உள்படுபொருளை உண்ணற்கு (அல்லது பயன்பாட்டிற்கு) எடுத்தல். பால் கறக்கிறோம். 

கறள்தல் என்றால் வளர்ச்சியறுமாறு செய்தல், அவ்வளவிற்கு உண்டு அகற்றுதல். 

கறுத்தல் என்றால் அழுக்கு/மாசு/குறை ஆதல். 

இச்சொற்கள் அனைத்தோடும் அருகுத்  தொடர்புடைய சொல்தான் ‘கறை’ என்பது. உண்ணற்குச் செய்யும் உறுவழி அல்லது ஊறுவழி. அதன்வழியுற்ற குறைவு, கெடுவு. 

ஊர்ப்புறத்துப் பேச்சு வழக்கினை ஊன்றிக் கவனியுங்கள். உடைபட்ட தேங்காய்ப் பாதியைப் பற்களாலேயே அரித்துத் தின்பார்கள். அதனைக் ‘தேங்காயைக் கறண்டு தின்னுட்டான்’ என்று கூறுவர். 

இங்கே கறளுதல் என்பது வினை. இந்தக் கறள்பாடுற்றது கறை. அந்தக் கறையைச் செய்யும் பூச்சியினம் என்பதால் அது கறையான். அப்பூச்சி ஒரு பொருளைக் கறிக்கிறது / கறக்கிறது / கறள்கிறது. கறை உருவாக்குகிறது. எனவே அது கறையான். 

அதனால் அரிக்கும் செல்லுப் பூச்சியைக் குறிப்பதற்குக் ‘கறையான்’ என்றே எப்போதும் ஆள்க ! 

- கவிஞர் மகுடேசுவரன்

No comments:

Post a Comment